''தடுப்பூசி போடலைன்னா சம்பளம் கிடையாது''.. அரசு ஊழியர்களுக்கு ஷாக் கொடுத்த உத்தரபிரதேசம்!
லக்னோ: உத்தரபிரதேச மாநிலம் பிரோசாபாத் மாவட்டத்தில் தடுப்பூசி போடவில்லை என்றால் சம்பளம் கிடையாது அரசு ஊழியர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
இந்தியாவில் கொரோனா தொற்றின் இரண்டாவது அலையால் மிகவும் மோசமாக பாதிக்கப்பட்ட மாநிலங்களில் ஒன்று உத்தரபிரதேசம்.
கடந்த சில வாரங்களுக்கு முன்பு மருத்துவமனைகளில் படுக்கைகள் தட்டுப்பாடு, ஆக்சிஜன் தட்டுப்பாட்டால் உயிரிழப்பு என்று உத்தரபிரதேசம் அல்லாடி வந்தது.
வாங்கி கட்டிய உத்தரப்பிரதேசம்
புண்ணிய நதிகளான யமுனை, கங்கை நதிகளில் சடலங்கள் மிதந்து நாடு முழுவதும் பேச வைத்தன. அங்கு மருத்துவ கட்டமைப்புகள் சரியில்லை என்று புகார்கள் கூறப்பட்டன. மாநில பாஜக எம்.எல்.ஏ.க்கள், எம்.பி.க்களே முதல்வர் யோகி ஆதித்யநாத் அரசை குற்றம் சுமத்தி வந்தனர். தற்போது உத்தரப்பிரதேசத்தில் கொரோனா பாதிப்பு வெகுவாக குறைந்து விட்டது.
விரைவான நடவடிக்கை
அதாவது தினமும் 30,000-க்கு மேல் பாதிப்புகள் நிலவி வந்த நிலையில் தற்போது 1,500-க்கும் குறைவான பாதிப்புகளே பதிவாகி வருகின்றன. தடுப்பூசி போடும் பணியை விரைவுபடுத்துவதற்கும், கொரோனா தொற்றுநோயை முழுமையாக முடிவுக்குக் கொண்டுவருவதற்கும் உத்தரபிரதேச அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.
புதிய முயற்சி
இந்த நிலையில் உத்தரபிரதேச மாநிலம் பிரோசாபாத் மாவட்ட நிர்வாகம் அரசு ஊழியர்களிடையே தடுப்பூசி போடும் பணியை ஊக்குவிக்க புதிய முயற்சியை கையாண்டுள்ளது. அதாவது அரசு ஊழியர்கள் அனைவரும் தடுப்பூசி போட வேண்டும். அப்படி தடுப்பூசி போடாத அரசு ஊழியர்ளுக்கு அதனை போடும் வரை சம்பளம் கிடையாது என்று மாவட்ட கலெக்டர் சந்திர விஜய் சிங் உத்தரவு பிறப்பித்துள்ளார்.
சம்பளம் கிடையாது
''தடுப்பூசி இல்லை, சம்பளம் இல்லை" என்று கலெக்டர் சந்திர விஜய் சிங் வாய்மொழி உத்தரவை பிறப்பித்துள்ளார் என்று தலைமை மேம்பாட்டு அதிகாரி சர்ச்சிட் கவுர் இன்று தெரிவித்தார். மாவட்ட கருவூல அதிகாரிகள் மற்றும் பிற துறைத் தலைவர்களுக்கு இந்த உத்தரவை அமல்படுத்துவதற்கான வழிமுறைகள் வழங்கப்பட்டு வருகின்றன.
நாட்டிலேயே முன்னணி
ஒரு பட்டியலை உருவாக்கி தடுப்பூசி போடுவதை உறுதி செய்யுமாறு அரசு உயர் அதிகாரிகளிடம் கேட்டுக் கொள்ளப்பட்டது. தங்கள் சம்பளம் நிறுத்தப்படலாம் என்ற அச்சத்தில் ஊழியர்கள் தடுப்பூசி போட முயற்சிக்கின்றனர் என்று தலைமை மேம்பாட்டு அதிகாரி சர்ச்சிட் கவுர் கூறினார். இந்தியாவில் அதிகளவில் தடுப்பூசிகள் போடும் மாநிலங்கள் வரிசையில் உத்தரபிரதேசம் முன்னணியில் உள்ளது குறிப்பிடத்தக்கது.