பெண்கள் அரசியலமைப்பு சட்டத்தை படிக்க வேண்டும்.. அறிவுரை கூறிய பேராசிரியர் உ.பியில் டிஸ்மிஸ்!
லக்னோ: பெண்கள் அரசியலமைப்பு சட்டத்தையும், இந்து சட்ட மசோதாவையும் படிக்க வேண்டும் என்று கூறியதற்காக வாரணாசியில் உள்ள ஒரு பல்கலைக்கழகத்தின் கவுரவ பேராசிரியர் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்த சம்பவத்திற்கு நாடு முழுவதிலும் இருந்து கடும் எதிர்ப்புகள் மேலெழுந்துள்ளன. இந்த கவுரவ பேராசிரியர் தலித் சமூகத்தை சேர்ந்தவர் என்பதால்தான் இவர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்றும் குற்றம்சாட்டப்பட்டுள்ளது.
கவுரவ பேராசிரியர் செய்தது தவறு எனவும், அவர் மீதான நடவடிக்கை சரியானது என்றும் பல்கலைக்கழகம் தரப்பில் கூறப்பட்டுள்ளது.
அத்துமீறிய பாஜக! பெண்கள் பள்ளிக்குள் நுழைந்து.. பஸ்ஸை உடைத்து அடாவடி! வெளியே போ.. சீறிய பெற்றோர்கள்
நவராத்திரி
இந்தியாவில் நவராத்திரி வெகு விமர்சையாக கொண்டாடப்படுகிறது. 9 நாட்கள் கொண்டாடப்படும் இந்த விழாவில், ஒவ்வொரு நாளும் அம்பாள் ஒவ்வொரு வடிவத்தில் நமக்கு காட்சித் தருவது என்பது ஐதீகமாக உள்ளது. நாம் என்னவாக மனதில் நினைத்து வழிபடுகிறோமோ அதுவாகவே அம்பாள் நமக்கு காட்சி தருகிறாள் என்றும் நம்பப்படுகிறது. இவ்வாறு இருக்கையில், இந்த 9 நாட்களும் பெண்கள் விரதமிருந்து அம்பாளை வழிபடுகின்றனர். இந்தியாவில் நீண்ட நாட்கள் கொண்டாடப்படும் பண்டிகைகளில் இதுவும் ஒன்று.
வாரணாசி
இந்நிலையில், வாரணாசியில் உள்ள மகாத்மா காந்தி காசி வித்யாபீட பல்கலைக்கழகத்தில் பணியாற்றும் கவுரவ பேராசிரியர், டாக்டர் மிதிலேஷ் குமார் கௌதம் இந்நாட்களில் பெண்கள் விரதம் இருப்பதற்கு பதிலாக அரசியலமைப்பு சட்டத்தையும், இந்து சட்ட மசோதாவையும் படிப்பது நல்லது. இவ்வாறு படிப்பது அவர்களை பயத்திலிருந்தும், அடிமைத்தனத்திலிருந்தும் விடுவிக்கும் என்று தனது கருத்தை சமூக வலைத்தளத்தில் எழுதியுள்ளார். இதன் காரணமாக அவர் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
டிஸ்மிஸ்
இந்த சம்பவம் தொடர்பாக பல்கலைக்கழக பதிவாளர் டாக்டர் சுனிதா பாண்டே கூறுகையில், "கௌதம் கூறிய கருத்துக்கள் ஏற்கத்தக்கதல்ல. மதங்கள் குறித்தும் பெண்கள் குறித்தும் இதுபோன்று கருத்தை வெளியிட யாருக்கும் உரிமை இல்லை. அவர் கூறிய விஷயங்கள் சரியானவை கிடையாது. ஒரு ஆசிரியர் எப்போதும் இப்படியான கருத்துக்களை கூறவே கூடாது" என்று செய்தி ஊடகத்திற்கு அளித்த பேட்டியில் கூறியுள்ளார். மேலும், இது குறித்து புகார் வந்துள்ளதாகவும் அதன் அடிப்படையிலேயே நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
நடவடிக்கை
அதேபோல மாணவர்கள் பலர் இந்த விவகாரத்தில் அதிருப்தியில் இருப்பதாகவும், எனவே கௌதமின் சொந்த பாதுகாப்பு காரணங்களுக்காக அவரை பல்கலைக்கழக வளாகத்திற்கு நுழைய தடை விதித்துள்ளோம் எனவும் பதிவாளர் சுனிதா கூறியுள்ளார். இந்த சம்பவம் நாடு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், பாஜக மாணவர் பிரிவான ஏபிவிபி பல்கலைக்கழகத்தின் நடவடிக்கைக்கு ஆதரவு தெரிவித்துள்ளது. கெளதமின் கருத்துக்கள் தவறானவை என்றும், எனவேதான் பல்கலைக்கழகம் நடவடிக்கை எடுத்துள்ளது என்றும் கூறியுள்ளது.
விசாரணை
ஆனால் இதே பல்கலைக்கழகத்தின் சில மாணவர்கள் கௌதமின் கருத்துக்களுக்கு ஆதரவு தெரிவித்துள்ளனர். இந்த விவகாரம் தொடர்பாக அவர் தனது தரப்பு நியாயத்தை கூற அனுமதியளிக்கப்பட வேண்டும் என்று பல்கலைக்கழக துணைவேந்தரைச் சந்தித்து இந்த மாணவர்கள் வலியுறுத்தியுள்ளனர். இது குறித்து உரிய விசாரணை நடத்தப்படும் என்றும், இதற்காக ஒரு குழு அமைக்கப்படும் எனவும் துணைவேந்தர் உறுதியளித்துள்ளதாகவும் மாணவர்கள் கூறியுள்ளனர்.
உரிமை
அரசியலமைப்பை படிக்க வேண்டும் என்று கூறியதற்காக பேராசிரியர் ஒருவர் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ள சம்பவம் உத்தரப் பிரதேசம் மட்டுமின்றி நாடு முழுவதும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்து லக்னோ பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் ரவிகாந்த் சந்தன் கூறுகையில், "டாக்டர் கௌதமின் கருத்துக்கள் இந்திய அரசியலமைப்புக்கு எதிராக இருப்பதாக தெரியவில்லை. இது ஒரு சாதாரண விஷயம்தான். இதற்காக பணிநீக்கம் செய்வது ஏற்கத்தக்கதாக இல்லை. அனைவருக்கும் தங்கள் கருத்துக்களை வெளிப்படையாக சொல்ல இந்நாட்டில் உரிமை உண்டு." என்று கூறினார்.