"உன் கூடவே பொறக்கணும்..." தோளில் கை போட்டு.. கன்னத்தில் முத்தமிட்ட ராகுல்.. முகம் சிவந்த பிரியங்கா
லக்னோ: உத்தரப்பிரதேச மாநிலத்தில் இந்திய ஒற்றுமை யாத்திரைக்காக வந்த அண்ணன் ராகுலை வரவேற்ற பிரியங்கா காந்தியை கட்டி பிடித்து முத்தம் கொடுத்தார் ராகுல் காந்தி. இந்த பாசத்தால் பிரியங்காவின் முகம் சிவந்தது.
அண்ணன் தங்கை பாசத்தை சினிமாக்களிலும் சீரியல்களிலும் பார்த்துள்ளோம். தங்கைக்கு ஒன்று என்றால் அது அண்ணனால் தாங்கி கொள்ள முடியாது. அண்ணனுக்கு ஏதாவது என்றால் தங்கை தவித்து விடுவார். இப்படியான பாசத்தை பார்த்துள்ளோம்.
அந்த வகையில் உச்சபட்ச பழங்காலத்து திரைப்படம் என்றாலே எல்லோருக்கும் நினைவுக்கு வருவது பாசமலர்தான். அதன் பிறகு 1980 களில் புகழ்பெற்ற திரைப்படம் என்றால் அது டி.ராஜேந்தரின் என் தங்கை கல்யாணிதான்.
அதிமுக முன்னாள் அமைச்சர் முன் ஜாமீன் கோரி மனுதாக்கல்.. மருத்துவமனையில் ராமச்சந்திரன்.. பின்னணி என்ன?
பாசத்தை விளக்கும் படங்கள்
இதன் பிறகும் அண்ணன் தங்கை பாசத்தை விளக்கும் நிறைய படங்கள் வந்தாலும் அவற்றில் கடந்த 2019 ஆம் ஆண்டு வெளியான படம் நம்ம வீட்டு பிள்ளை. இந்த படத்தில் சிவகார்த்திகேயன் அண்ணனாகவும் ஐஸ்வர்யா ராஜேஷ் தங்கையாகவும் நடித்திருந்தார். இந்த படத்தில் வரும் உன் கூடவே பொறக்கணும் பாடல் மிகவும் பிரசித்தி பெற்றதாகும்.
சீரியல்களில் கூட பாசம்
தற்போது சீரியல்களில் கூட அண்ணன் தங்கை பாசத்திற்கு பேக்கிரவுண்ட் பாடலாக இந்த பாடல்தான் ஒலிக்கிறது. இவ்வளவு ஏன் ராகுல் காந்தி தனது தங்கை பிரியங்கா காந்தி மீது பாசத்தை பொழிவதை பார்த்தால் இந்த பாடல்தான் நினைவுக்கு வருகிறது. அப்படி என்ன இவர்களுடைய பாசத்தில் இருக்கிறது என்பதை பார்க்கலாம்.
ராகுல் காந்தி ஜோடோ யாத்திரை
காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி பாரத் ஜோடோ யாத்திரை செல்வது என்பது அனைவருக்கும் தெரிந்த விஷயம். கன்னியாகுமரியில் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம ஆரம்பித்த இந்த யாத்திரை இதுவரை 5 மாதங்களில் 3570 கி.மீ. தூரம் கடந்துள்ளது. இதுவரை 12 மாநிலங்களை கடந்துள்ளார். தற்போது ஜோடோ யாத்திரைக்காக ராகுல் காந்தி, ஒரு நாள் ஓய்வுக்கு பிறகு உத்தரப்பிரதேச மாநிலத்தில் யாத்திரையை நேற்று தொடங்கினார். அங்கு அந்த மாநில காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளராக இருப்பவர் பிரியங்கா காந்தி.
மாநில நிர்வாகிகள்
ஜோடோ யாத்திரையின் போது அந்தந்த மாநில நிர்வாகிகள் ராகுலை வரவேற்று அவருடன் பயணிக்கிறார்கள். அந்த வகையில் கட்சியின் முன்னாள் தலைவரை ராகுலை பிரியங்கா வரவேற்றார். அப்போது அந்த ஜோடோ யாத்திரை மேடையில் பிரியங்கா காந்தி பேசுகையில் ராகுல் காந்தி ஒரு போராளி. தொழிலதிபர்களான அதானியும் அம்பானியும் எதை வேண்டுமானாலும் விலைக்கு வாங்குவார்கள்.
பெரிய அரசியல் தலைவர்கள்
எத்தனை பெரிய அரசியல் தலைவர்களையும் விலைக்கு வாங்கி விடுவார்கள். ஆனால் என் அண்ணனை மட்டும் விலை கொடுத்து வாங்க முடியாது. என் அண்ணனுக்கு எதிராக பல்வேறு அமைப்புகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. இதற்கு காரணம் என் அண்ணன் யாருக்கும் எதற்கும் அஞ்சாததுதான் என பிரியங்கா காந்தி பேசினார். இதை கேட்ட ராகுலுக்கு பூரிப்பு தாங்க முடியவில்லை. தங்கையின் பேச்சை ரசித்தபடி இருந்தார்.
உணர்ச்சிமிகுதி
இந்த உணர்ச்சி மிகுதியால் தனது தங்கையின் மீது கையை போட்டு உட்கார்ந்து கொண்டிருந்தார். பின்னர் அவரை இழுத்து நெற்றியின் வலது பக்கவாட்டில் முத்தம் கொடுத்தார். இந்த பாசத்தில் பிரியங்கா வெட்கப்பட்டு சிரித்தார். அது போல் அங்கிருந்தவர்கள் ஒன்ஸ்மோர் கேட்டதை அடுத்து பிரியங்கா எதிர்பார்க்காத போது அவரை இழுத்து கன்னத்தில் முத்தம் கொடுத்தார் ராகுல் காந்தி. இதில் பிரியங்காவின் கன்னம் சிவந்துவிட்டது. முகமெல்லாம் வெட்கம் பூத்தது. ஒரு கொடியில் இரு மலர்கள் பிறந்ததம்மா....