குப்பை லாரியை கூட விடுவதில்லை.. தோண்டி துருவி இ.வி.எம் மிஷின்களை தேடும் சமாஜ்வாதி தொண்டர்கள்
லக்னோ: உத்தரப்பிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத்தின் சொந்த தொகுதியான கோரக்பூரில் குப்பை ஏற்றிச் செல்லும் வண்டியில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் உள்ளதா என்று சமாஜ்வாதி கட்சியினர் தேடிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
Recommended Video
இந்தியாவிலேயே அதிக தொகுதிகளை உள்ளடக்கிய மாநிலமான உத்தரப் பிரதேசத்தின் சட்டமன்றத் தேர்தல் வாக்குப்பதிவு நேற்று நிறைவடைந்தது. கடந்த பிப்ரவரி 10 ஆம் தேதி தொடங்கிய 403 தொகுதிகளுக்கான வாக்குப்பதிவு 7 கட்டங்களாக நடந்து முடிந்துள்ளது. நாளை வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ள நிலையில், பாஜக, சமாஜ்வாடி, காங்கிரஸ், பகுஜன் சமாஜ் உள்ளிட்ட கட்சியினர் வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டு இருக்கும் பாதுகாப்பு மையங்களை தீவிரமாக கண்காணித்து வருகின்றனர்.

இதனிடையே பல்வேறு இடங்களில் பாஜகவினர் வாக்குப்பதிவு இயந்திரங்களை கடத்திச் செல்வதாக சமாஜ்வாடி கட்சியினர் குற்றம்சாட்டி வருகின்றனர். இன்று காலை பிரதமர் மோடியின் மக்களவைத் தொகுதியான வாரணாசியில் லாரியில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் கடத்திச் செல்லப்படுவதை சமாஜ்வாடி கட்சியினர் கையும் களவுமாக பிடித்ததாக ஒரு வீடியோ சமூக வலைதளங்களில் மின்னல் வேகத்தில் பரவியது.
இந்நிலையில் உத்தரப்பிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் போட்டியிட்டுள்ள கோரக்பூர் தொகுதியில் குப்பை ஏற்றிச் செல்லும் வண்டியில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் கடத்திச் செல்லப்பட்டுள்ளதாக குற்றச்சாட்டு எழுந்தது. சந்தேகமடைந்த சமாஜ்வாடி கட்சியினர் வண்டியை நிறுத்தி சோதனை நடத்தினர். ஆனால் அதில் இயந்திரங்கள் இல்லை.
சமாஜ்வாதி கட்சியினர் பைனாக்குலர் மூலமாக வாக்குப் பெட்டிகள் வைக்கப்பட்ட இடங்களை தூரத்திலிருந்தும் கண்காணிக்கிறார்கள். இப்போது குப்பை லாரியையும் விடாமல் தேடி பிடித்து சோதனை போட்டு வருகின்றனர். இதனால் பெரும் பரபரப்பான சூழ்நிலை, உத்தர பிரதேசத்தில் நிலவியது.












Click it and Unblock the Notifications