அய்யோ கடவுளே! உபி மருத்துவமனையில் பல குழந்தைகளை மீட்ட வியாபாரி! சொந்த இரட்டை மகள்களை இழந்த சோகம்
லக்னோ: உத்தர பிரதேச மாநிலம் ஜான்சியில் உள்ள மருத்துவமனையில் ஏற்பட்ட தீவிபத்தில் 10 பச்சிளம் குழந்தைகள் உடல் கருகி பரிதாபமாக இறந்தனர். இந்த தீவிபத்தின்போது உயிரை பணயம் வைத்து ஏராளமான குழந்தைகளை காப்பாற்றிய யாகூப் மன்சூரியின் 2 குழந்தைகள் தீயில் சிக்கி இறந்த சோகமான தகவல் வெளியாகி உள்ளது.
உத்தர பிரதேச மாநிலம் ஜான்சியில் மகாராணி லட்சுமிபாய் மருத்துவக் கல்லூரி மருத்துவமனை உள்ளது. இங்கு பச்சிளம் குழந்தைகளுக்கான அவசர சிகிச்சை பிரிவான என்ஐசியூ செயல்பட்டு வருகிறது.

கடந்த 15ம் தேதி இரவில் திடீரென்று மருத்துவனையில் தீவிபத்து ஏற்பட்டது. என்ஐசியூ சிகிச்சை பிரிவில் ஏற்பட்ட தீவிபத்தில் அங்கு சிகிச்சையில் இருந்த குழந்தைகள் சிக்கினர்.
இதையடுத்து உடனடியாக மீட்பு பணி நடந்தது. மருத்துவமனையில் இருந்தவர்கள் உயிரை பணயம் வைத்து குழந்தைகளை மீட்கும் பணியில் ஈடுபட்டனர். என்ஐசியூவில் மொத்தம் 54 குழந்தைகள் அனுமதிக்கப்பட்டு இருந்த நிலையில் 10 குழந்தைகள் இறந்தன. மேலும் 16 குழந்தைகள் காயமடைந்தன. காயமடைந்த குழந்தைகளுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுதொடர்பாக விசாரணை குழு அமைத்து விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இந்நிலையில் தான் தற்போது சோகமான ஒரு தகவல் வெளியாகி உள்ளது. அதாவது தீவிபத்து ஏற்பட்டபோது அங்கு இருந்த யாகூப் மன்சூரி என்பவர் ஏராளமான குழந்தைகளை காப்பாற்றினர். தீவிபத்தில் சிக்கிய குழந்தைகளை உயிரை பணயம் வைத்து அவர் காப்பாற்றினார். இதனால் அவர் ஹீரோவாக பார்க்கப்பட்டார். இதற்கிடையே தான் பல குழந்தைகளை காப்பாற்றிய அவரின் 2 குழந்தைகள் தீவிபத்தில் பலியாகி இருப்பது தெரியவந்துள்ளது.
அதாவது யாகூப் மன்சூரி ஹமிர்பூரை சேர்ந்தவர். அவர் உணவு பொட்டலங்கள் வியாபாரம்செய்து வருகிறார். தீவிபத்து ஏற்பட்ட தினத்தில் அவரது மனைவி நஸ்மாவிற்கு மருத்துவமனையில் இரட்டை பெண் குழந்தைகள் பிறந்தது. இந்த குழந்தைகள் மருத்துவமனையில் என்ஐசியூவில் அனுமதிக்கப்பட்டு இருந்தது. யாகூப் மன்சூரி என்ஐசியூவின் வெளிப்புறத்தில் படுத்து கிடந்தார்.
இந்த வேளையில் தீவிபத்து ஏற்பட்டது. இதையடுத்து அவர் கண்ணாடிகளை உடைத்து பல குழந்தைகளை காப்பாற்றினார். ஆனால் அவரது குழந்தையை அவர் மீட்கவில்லை. வேறு யாராவது தனது குழந்தையை மீட்டு இருப்பார்கள் என்று அவர் நினைத்தார். ஆனால் அவரது 2 குழந்தைகளையும் யாரும் மீட்கவில்லை. தீவிபத்தில் சிக்கி யாகூப் மன்சூரியின் 2 குழந்தைகள் பலியாகி இருப்பது மறுநாள் தெரியவந்தது. மறுநாள் மருத்துவமனையில் இருந்து பிணமாக கிடந்த குழந்தைகளில் அவரது இரட்டை குழந்தைகளும் இருந்தன. இதனால் யாகூப் மன்சூரி மற்றும் அவரது மனைவி நஸ்மா ஆகியோர் கதறி அழுதனர். இந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.












Click it and Unblock the Notifications