"கிளைமேக்ஸே" இனிதான்.. அமித்ஷா வெச்ச ஒரே குறி.. அதுவும் வீடு வீடாக.. ஜாட் ஓட்டுக்கள் யாருக்கு?
அமித்ஷா, மேற்கு உபியில் புது வியூகம் அமைத்துள்ளார்
லக்னோ: மேற்கு உத்தரபிரதேசத்தை யார் தட்டி தூக்க போகிறார்கள் என்ற வலுவான போட்டி எழுந்துள்ளது.. அதிலும் ஜாட் சமூகத்தினரின் வாக்குகளை அள்ள போகிறார்கள் என்ற எதிர்பார்ப்பு எகிறி உள்ளது.
கடந்த எம்பி தேர்தலில், பாஜக தனிப்பெரும்பான்மையுடன் வெற்றி பெற்றதற்கு, உபியில் கிடைத்த அதிகமான தொகுதிகளே அடித்தளமிட்டன.. 2017-ல் நடந்த சட்டப்பேரவை தேர்தலிலும் நான்கில் 3 பங்கு பெரும்பான்மையுடன் ஆட்சியை பிடித்தது பாஜக...
இப்போதும் மறுபடியும் ஆட்சியை பிடிக்க வேண்டுமென்றால், உபியை தன்னுடைய கோட்டையாக கையில் இறுக்கிப்பிடித்து வைத்து கொள்ள வேண்டும் என்பதை பாஜக மேலிடம் நன்றாக உணர்ந்துள்ளது.
உ.பி சட்டசபைத் தேர்தலில் பாஜக புது வியூகம் - ஜாட் சமூக தலைவர்களை சந்தித்து சமாதானப்படுத்திய அமித்ஷா
அமித்ஷா
அதனால்தான், இந்த முறையும் பாஜக தலைவர்கள் உபியில் முகாமிட்டு வருகின்றனர்.. இதில் அமித்ஷா கூடுதலாக கவனம் செலுத்தி வருவது மேற்கு உத்தரபிரதேசத்தில்தான்.. மேற்கு உத்தர பிரதேச பொறுப்பையும் அமித்ஷா நேரடியாகவே ஏற்றுக் கொண்டுள்ளார்... இதற்கு காரணம், மாநிலத்தின் பல பகுதிகளை போலவே, மேற்கு உபியிலும் அகிலேஷூக்கு ஆதரவுகள் பெருகி கிடப்பதுதான்..
சமாஜ்வாதி
பாஜகவில் இருந்து மூத்த தலைவர்கள் விலகி சமாஜ்வாதி கட்சியில் இணைந்தபோதே, அமித்ஷா உஷாராகிவிட்டதாக கூறப்படுகிறது.. அதேசமயம், பிற்படுத்தப்பட்ட சமூகத்தினரை முழுமையாக ஒன்றிணைப்பது என்பது இப்போதைக்கு சாத்தியமில்லாத ஒன்று என்பதையும் மேலிடம் நன்றாக அறிந்துள்ளது.. எனினும், பிற்படுத்தப்பட்டோர் அரசியலுக்கு எதிரான தலித் வாக்கு வங்கியையும் ஈர்க்கும் முயற்சியில் சமீபகாலமாக இறங்கியுள்ளது..
அகிலேஷ் யாதவ்
தலித் சமூக வாக்கு வங்கியை தங்கள் பக்கம் கொண்டு வரும் தங்களின் இந்த முயற்சி, நிச்சயம் வெற்றி பெறும் என்றும் அக்கட்சி நம்புகிறது. அதற்காக மேற்கு உபியைதான் பாஜக அதிக கவனம் செலுத்த தொடங்கி உள்ளது.. இந்த மேற்கு பகுதி தான், பாஜகவின் கோட்டையாக கருதப்படுவது.. இங்குள்ள 108 தொகுதிகளில் 83 தொகுதிகளை கடந்த 2017-ம் ஆண்டு தேர்தலின்போது பாஜக கைப்பற்றியிருந்தது.. ஆனால், அகிலேஷின் ஆதரவு இந்த பகுதியிலும் பெருகிவிடக்கூடாதே என்பதற்காகத்தான், அமித்ஷா மேற்கு உபியில் முற்றுகையிட்டுள்ளார்...
அமித்ஷா
4 நாட்களுக்கு முன்புகூட, சாம்லி மாவட்டத்தில் சுற்றுப்பயணம் செய்து, பிரச்சாரம் செய்தார்... அதிலும் வீடு வீடாக சென்று ஓட்டு கேட்டார்.. பாஜக நிர்வாகிகள் ஒருத்தரைவிடாமல் சந்தித்து பேசினார்... மீரட் நகருக்கு சென்று, கல்வியாளர்கள், தொழில் அதிபர்கள், அந்த பகுதி விஐபிக்களை சந்தித்து பேசினார்.. கஜ்ராலா நகருக்கு சென்று பிரச்சாரம் செய்தார்.. இது எல்லாவற்றிற்கும் மேலாக, மேற்கு உத்தர பிரதேசத்தில் செல்வாக்கு மிக்க ஜாட் சமூகத்தின் தலைவர்களையும் அமித்ஷா சந்தித்து ஆதரவு கேட்டுள்ளார்..
ஜாட் வாக்குகள்
மேற்கு உத்தரபிரதேசத்தில் ஜாட் சமுதாயத்தினர் பெரும்பான்மையாக இருக்கிறார்கள்.. இவர்களில் பெரும்பாலானவர்கள் விவசாயிகள்தான்.. கடந்த 2014, 2019 எம்பி தேர்தல்களாகட்டும், 2017-ல் நடந்த சட்டப்பேரவை தேர்தலாகட்டும், ஜாட் சமுதாயத்தினர் தான் பாஜகவை கை தூக்கி விட்டனர்.. பக்கபலமாக இருந்து ஆதரவு தெரிவித்தனர்.. ஆனால், இந்த முறை வேளாண் சட்டங்களை மத்திய அரசு கொண்டுவந்துவிடவும், இதே ஜாட் சமுதாயத்தினர்தான் ஒரு வருடத்துக்கும் மேலாக போராட்டத்தில் குதித்தனர்..
வேளாண் சட்டங்கள்
பாஜக மீது வெறுப்பு காட்டினர்.. என்னதான் வேளாண் சட்டங்களை திரும்ப பெற்றாலும், இப்போதுகூட அந்த அதிருப்தி விவசாயிகளுக்கு விலகவேயில்லை.. எனவேதான், இந்த கோபத்தை தணிக்க அமித்ஷா திட்டமிட்டார்.. நேற்றைய தினம் ஜாட் சமுதாய தலைவர்களை டெல்லியில் அழைத்து பேசியிருக்கிறார்..சஞ்சீவ் பல்யாண், உபி அமைச்சர் பூபேந்திர சவுத்ரி, உள்ளிட்ட நிறைய ஜாட் சமூகத்தின் தலைவர்கள் இதில் கலந்து கொண்டுள்ளனர்.. இவர்களை அமித்ஷா ஓரளவு சமாதானப்படுத்தியதாக தெரிகிறது.
கிளைமேக்ஸ்
எனினும் இந்த சமுதாயத்தை சேர்ந்த முக்கிய தலைவர்கள், அகிலேஷின் சமாஜ்வாதி கூட்டணியிலும் உள்ளதால், எந்த அளவுக்கு பாஜகவுக்கு ஆதரவு கிடைக்கும் என்று தெரியவில்லை.. ஆனால், ஜாட் சமூகத்தினரின் வாக்குகள் நிச்சயம் சிதறக்கூடும் என்றே தெரிகிறது.. அப்படி சிதறி செல்லும் வாக்குகள் அமித்ஷாவுக்கு சாதகமாக போகிறதா? அல்லது அகிலேஷூக்கு சாதகமாக போகிறதா? என்பதுதான் கிளைமேக்ஸே.. பார்ப்போம்..!
Recommended Video
ராஷ்டிரிய லோக் தளம்
அதேபோல, இந்தப் பகுதிகளில் ஏற்கெனவே வலுவாக இருப்பது ராஷ்ட்ரிய லோக் தளம்.. ஜாட் இனத்தை சேர்ந்த ஜெயந்த் சவுத்ரி, விவசாய போராட்டங்களில் தீவிரமாக கலந்துகொண்டவர்... மேற்கு உபியின் ஜாட் வாக்கு வங்கியை பெறுவதில் முன்னிலை வகிப்பவராகவும் ஜெயந்த் சவுத்ரி திகழ்ந்து வருகிறார்.. அதனால்தான், அகிலேஷ் இவர்களுடன் கூட்டணியும் வைத்தார்.. இப்போது இந்த கட்சிதான் தவிர்க்க முடியாத சக்தியாகவும் அங்கு உருவெடுத்துள்ளது.. ஜெயந்த் சவுத்ரியின் செல்வாக்குள்ள பகுதியான இந்த மேற்கு உத்தரப் பிரதேசத்தில், பாஜக கடும் பின்னடைவை சந்திக்கும் என்று ஏற்கனவே சில கருத்துக்கணிப்புகள் வெளியாகியிருந்த நிலையில், இதையும் அக்கட்சி எப்படி எதிர்கொள்ள போகிறது என்பதும் எதிர்பார்ப்பாக எழுந்துள்ளது.