அயோத்தியில் களைகட்டும் தீபாவளி.. 24 லட்சம் அகல் விளக்கு ஏற்றி கின்னஸ் சாதனை படைக்கும் உத்தரப் பிரதேசம்
லக்னோ: உத்தரப் பிரதேசத்தின் அயோத்தியில் சுமார் 24 லட்சம் அகல் விளக்குகள் இன்று மாலை ஏற்றப்பட்டு கின்னஸ் சாதனை படைக்கப்பட இருக்கிறது. இதற்காக உ.பி அரசு முழு வீச்சில் தயாராகி வருகிறது.
உத்தரப் பிரதேசத்தில் யோகி ஆதித்யநாத் தலைமையில் பாஜக ஆட்சி நடைபெற்று வருகிறது. இந்த மாநிலத்தில் இதற்கு முன்னர் யாரும் தொடர்ச்சியாக 6 ஆண்டுகள் முதலமைச்சராக நீடித்தது கிடையாது. ஆனால் இந்த சாதனையை கடந்த சட்டமன்ற தேர்தலில் யோகி ஆதித்யநாத் முறியடித்துள்ளார். மக்களின் இந்த ஆதரவை நாடாளுமன்ற தேர்தலுக்கும் நீடிக்க வேண்டும் என்பதற்காக ஏராளமான புதிய திட்டங்களை அவர் தொடர்ந்து அறிவித்து வருகிறார். இந்நிலையில் இன்று அயோத்தியில் 24 லட்சம் விளக்குகள் ஏற்றப்பட்டு கின்னஸ் சாதனை படைக்கப்பட இருக்கிறது.

தீபாவளி பண்டிகையை கொண்டாடும் விதமாக கோயில் நகரமான அயோத்தியில் தீபோத்சவ் நிகழ்ச்சி இன்று கோலாகலமாக கொண்டாடப்பட இருக்கிறது. அதாவது அயோத்தி முழுவதும் சுமார் 24 லட்சம் விளக்குகள் ஏற்றப்பட இருக்கிறது. இதில் மொத்தம் 25 ஆயிரம் தன்னார்வலர்கள் பங்கேற்கிறார்கள். எத்தனை விளக்குகள் ஏற்றப்படுகிறது? என்பதை ட்ரோன் கேமராக்கள் கண்காணிக்கும். இந்நிகழ்ச்சியில் ஏறத்தாழ உ.பியின் அனைத்து அமைச்சர்களும் பங்கேற்பார்கள்.
மாலை நடைபெறும் இந்நிகழ்ச்சியை முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் தொடங்கி வைக்கிறார். இந்நிகழ்வின் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து பேசிய அயோத்தி ரேஞ்ச் இன்ஸ்பெக்டர் ஜெனரல் (ஐஜி) பிரவீன் குமார், "அப்பகுதி 14 போலீஸ் மண்டலங்களாக பிரிக்கப்பட்டுள்ளது. செயற்கை நுண்ணறிவு உதவியும் பெற்றுள்ளோம். கூட்டமும் போக்குவரத்தும் ஒழுங்குபடுத்தப்படும்" என்று கூறியுள்ளார்.
இதேபோல கடந்த ஆண்டும் அயோத்தியின் சரயு நதிக்கரையில் சுமார் 20 ஆயிரம் தன்னார்வலர்கள் பங்கேற்று 15 லட்சம் விளக்குகளை ஏற்றியிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications