காற்று மாசை குறைக்க அதிரடி திட்டம்.. உத்தரப் பிரதேச அரசு முன்னெடுக்கும் புது முயற்சி!
லக்னோ: உத்தரப் பிரதேசத்தில் காற்று மாசை குறைக்க தீவிரமான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாக கூறியுள்ள முதலமைச்சர் யோகி ஆதித்யநாத், மரங்கள் நடுவது, மின்சார வாகனங்களின் பயன்பாடுகளை ஊக்குவிப்பது ஆகியவற்றின் தொடர்ச்சியாக விவசாயிகளுக்கு சூரிய ஒளியில் இயங்கும் சோலார் மோட்டர் பம்புகள் விநியோகிக்கப்படும் என்று கூறியுள்ளார்.
உத்தரப் பிரதேசத்தில் யோகி ஆதித்யநாத் தலைமையில் பாஜக ஆட்சி நடைபெற்று வருகிறது. இந்த மாநிலத்தில் இதற்கு முன்னர் யாரும் தொடர்ச்சியாக 6 ஆண்டுகள் முதலமைச்சராக நீடித்தது கிடையாது. ஆனால் இந்த சாதனையை கடந்த சட்டமன்ற தேர்தலில் யோகி ஆதித்யநாத் முறியடித்துள்ளார். மக்களின் இந்த ஆதரவை நாடாளுமன்ற தேர்தலுக்கும் நீடிக்க வேண்டும் என்பதற்காக ஏராளமான புதிய திட்டங்களை அவர் தொடர்ந்து அறிவித்து வருகிறார். இதன் தொடர்ச்சியாக காற்று மாசை கட்டுப்படுத்துவது குறித்து எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகளையும் பட்டியலிட்டுள்ளார்.

பெட்ரோல், டீசல், நிலக்கரி பயன்பாட்டை குறைப்பதுதான் மூலம் காற்று மாசை கட்டுக்குள் கொண்டு வர தீவிரமாக திட்டமிடப்பட்டிருக்கிறது. எனவே மாநிலம் முழுவதும் மின்சார வாகனங்களை பயன்பாட்டுக்கு கொண்டுவர பாஜக அரசு முயன்று வருகிறது. இதற்காக சில சிறப்பு சலுகைகளையும், மானியங்களையும் அரசு அறிவித்தது. இந்த திட்டத்திற்கு மாநிலம் முழுவதும் பரவலாக வரவேற்பு கிடைத்துள்ள நிலையில், அடுத்தகட்டமாக விவசாயிகளுக்கு சோலார் பம்புகளை வழங்க யோகி அரசு முடிவெடுத்துள்ளது.
பிரதமரின் KUSUM திட்டத்தின் அடிப்படையில் உத்தரப் பிரதேசத்தில் முதல்கட்டமாக 30,000 விவசாயிகளுக்கு இந்த பம்புகள் வழங்கப்படும். இதற்காக மத்திய அரசு ரூ.217.09 கோடியும், மாநில அரசு ரூ.217.84 கோடியும் நிதியை ஒதுக்கியுள்ளன. இந்த திட்டத்தை வெற்றிகரமாக செயல்படுத்த 'உ.பியின் புதிய மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி நிறுவனத்திடம்' பொறுப்பு ஒப்படைக்கப்பட்டிருக்கிறது. தூய்மையான எரிசக்தி பயன்பாட்டை உறுதிப்படுத்தும் வகையில் இந்த திட்டம் செயல்படுத்தப்படுகிறது.
அரசு ஒருபுறம் இதற்காக நிதியளித்தாலும், பெரும் நிலம் வைத்துள்ள விவசாயிகள், சோலார் பம்புகளை பயன்படுத்த விரும்பினால் இதற்காக வங்கிகளில் கடன் வழங்கப்படும் என்றும், இதற்காக குறைந்தபட்ச வட்டி கொடுக்கப்படும் என்றும் உ.பி மாநில அரசு கூறியுள்ளது. இது மாநிலம் முழுவதும் சாத்தியமானால் சுற்றுச்சூழல் மாசு குறையும் எனவும் உ.பி அரசு நம்பிக்கை தெரிவித்திருக்கிறது. அதேபோல மாநிலம் முழுவதும் குறிப்பிட்ட அளவில் காடுகளை திட்டமிட்டு உருவாக்குவதன் மூலமும் மாசை குறைக்க முடியும் என யோகி ஆதித்யநாத் கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications