ராவண கோஷம்.. தலித் அரசியல்.. உ.பி யோகிக்கு எதிராக களமிறங்கும் "பீம் ஆர்மி" ஆசாத்? செம போட்டி!
லக்னோ: உத்தர பிரதேசத்தில் மிகப்பெரிய தலித் தலைவராகவும், சிறுபான்மையின தலைவராகவும் உருவெடுத்து வரும் பீம் ஆர்மி சந்திர சேகர் ஆசாத்.. அங்கு முதல்வர் யோகி ஆதித்யநாத்தை எதிர்த்து கோரக்பூர் தொகுதியில் போட்டியிட போவதாக தகவல்கள் வருகின்றன. இந்த தகவல் இன்னும் உறுதி செய்யப்படாத நிலையில்.. யார் இந்த முறுக்கு மீசை "பீம் ஆர்மி" ஆசாத் என்று பார்க்கலாம்..
தமிழ்நாட்டில் ராவண வழிபாடு என்பதெல்லாம் சாதாரண விஷயம்.. இப்போதும் கூட தங்களை ராவணர்களின் வாரிசு என்று அழைக்கும் மக்களும்.. அவரை ஒரு rebel leader ஆகவும் பார்க்கும் தமிழர்கள் பல கோடி பேர் உள்ளனர். ஆனால் இதே ராவண கோஷத்தை ஒரு அரசியல் தலைவர் வடநாட்டில் எழுப்புகிறார் என்றால் நம்ப முடியுமா?.. அதிலும் உத்தர பிரதேசத்தில் ஒருவர் ராவண கோஷம் என்று எழுப்புகிறார்.. அதை பல லட்சம் பேர் பாராட்டுகிறார்கள் என்றால் நம்ப முடியுமா?
உத்தர பிரதேச தேர்தல்: மாயாவதி போட்டியிடாத தேர்தல் களத்தில் பகுஜன் சமாஜ் கட்சி - என்ன பின்னணி?
உத்தர பிரதேசத்தில் தலித் மக்கள் பலரால்.. சிறுபான்மையினர் பலரால் ராவணா என்று அழைக்கப்படும் நபர்தான் பீம் ஆர்மி சந்திர சேகர் ஆசாத். 1986ல் உத்தர பிரதேசத்தில் பிறந்த இவர், மிக தீவிரமான அம்பேத்கார் பின்தொடர்ப்பாளர்.
சந்திர சேகர் ஆசாத்
உத்தர பிரதேசத்தில் தலித் - ராஜ்பூட் மக்கள் அதிகம் வாழ்ந்த கிராமத்தில் பிறந்த இவர் தலித் மக்கள் படும் அவதிகளை கண்டு பீம் அம்பேத்காரின் கொள்கையை படிக்க தொடங்கினார். இதனால் ஈர்க்கப்பட்ட அவர் சட்டம் படித்து வக்கீலும் ஆனார். தனது மாவட்டத்திலும் அண்டை மாவட்டங்களிலும் தலித் மக்களுக்காக சட்ட போராட்டம் நடத்தியவர் ராஜ்பூட் போன்ற ஆதிக்க ஜாதியினர் தலித் மக்களுக்கு செய்த கொடுமைகளை பார்த்து கொதித்தெழுந்தார்.
பீம் ஆர்மி
தொடக்கத்தில் சட்ட ரீதியாக தலித் மக்களுக்கு உதவியவர் அதன்பின் அமைப்பு ரீதியாக போராட முடிவு செய்தார். தன்னுடன் சட்ட போராட்டம் நடத்திய ஒருமித்த கொள்கை கொண்ட பலரை ஒன்று இணைத்தார். இதன் மூலம் இவர் உருவாக்கியதுதான் பீம் ஆர்மி. அதாவது அம்பேத்கர் ஆர்மி. சந்திரசேகர் ஆசாத், சதிஷ் குமார், வினய் ரத்தன் சிங் ஆகியோர் இணைந்து 2014ல் பீம் ஆர்மியை உருவாக்கினார்கள். இதில் தற்போது 5 லட்சம் பேர் உறுப்பினர்களாக இருக்கிறார்கள். தலித் மக்களுக்காக சட்ட போராட்டங்களை இந்த அமைப்பு முன்னெடுத்து வருகிறது.
பீம் ஆர்மி போராட்டம்
தலித் மக்களுக்கும், சிறுபான்மையினருக்கு எதிரான சட்டங்கள் வரும் போதெல்லாம் இவர்தான் முதலில் களத்தில் நிற்பார். தலித் மக்களுக்கு இலவச பள்ளிக்கூடம் கட்டுவது, படிப்பகம் கட்டுவது என்று இவர் பணிகளை செய்து வருகிறார். சிஏஏ போராட்டங்களின் போது 4 முறைக்கும் மேல் கைது செய்யப்பட்டார். ஒரு வழக்கில் வெளியே வந்தால்.. சிறை வாசலிலேயே இன்னொரு வழக்கில் இவர் கைது செய்யப்பட்டார். அப்போதுதான் இவருக்கும் யோகி ஆதித்யநாத் அரசுக்கும் இடையிலான பெரும் மோதல் ஏற்பட்டது.
ஆதித்யநாத்
முறுக்கிய மீசையோடு தமிழர் தோற்றத்தில் இருக்கும் இவர் அங்கு தலித் அரசியலை மாயாவதிக்கு பின் மீண்டும் முன்னெடுக்கும் தலைவராக பார்க்கப்படுகிறார். இவரின் பின்தொடர்பாளர்கள் எல்லாம் இவரை ராவணன் என்று அழைக்கிறார்கள். 2016ல் இருந்து இவர் 13 முறைக்கும் மேல் கைது செய்யப்பட்டுள்ளார். ராஜ்பூட் மக்களுக்கு எதிராக இவர் செய்த போராட்டம் உத்தர பிரதேசத்தில் இப்போது மிகப்பெரிய ஒன்றாக கருதப்படுகிறது. சிஏஏவிற்கு எதிராக டிசம்பர் 21ல் இவர் நடத்திய போராட்டத்தில் பல லட்சம் பேர் கலந்து கொண்டனர்.
சந்திரசேகர் ஆசாத்
தலித் மக்களுக்கு எதிரான போராட்டங்களில் முதலில் நிற்கும் இவர் உத்தர பிரதேசத்தில் மாற்று அரசியலை முன்னெடுக்க தொடங்கி உள்ளார். இவர் பாஜகவிற்கு எதிராக இருப்பதால் இந்த முறை இவருடன் கூட்டணி வைக்க அகிலேஷ் யாதவின் சமாஜ் வாதி முயன்றது. ஆனால் கூட்டணி பேரம் படியாததால் பீம் ஆர்மி தலித் மக்கள் அதிகம் உள்ள இடங்களில் தனித்து போட்டியிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இது ஒரு வகையில் வாக்குகளை பிரிக்கும் என்பதால் அகிலேஷ் யாதாவிற்கு அதிர்ச்சி அளிக்கும் செய்தியாக மாறியுள்ளது.
உத்தர பிரதேச தேர்தல்
இப்படிப்பட்ட நிலையில்தான் யோகி ஆதித்யநாத்தை அவரின் கோரக்பூர் தொகுதியில் சந்திரசேகர் ஆசாத் எதிர்க்க போவதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. உத்தர பிரதேசத்தில் அயோத்தி அல்லது மதுரா தொகுதியில்தான் ஆதித்யநாத் போட்டியிடுவார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அவர் கோரக்பூர் தொகுதியில் போட்டியிடுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் சந்திரசேகர் ஆசாத் முதல்வர் யோகி ஆதித்யநாத்தை எதிர்த்து கோரக்பூர் தொகுதியில் போட்டியிட போவதாக தகவல்கள் வருகின்றன.
கோரக்பூர் சந்திரசேகர் ஆசாத்
பீம் ஆர்மி என்ற அமைப்பை நடத்தி வரும் இவர் அதே கொள்கை கொண்ட Aazad Samaj Party என்ற கட்சியை நடத்தி வருகிறார். தேர்தலில் போட்டியிடுவதற்காக கடந்த 2020ல் இந்த கட்சி தொடங்கப்பட்ட நிலையில் இந்த கட்சி சார்பாக கோரக்பூரில் ஆசாத் போட்டியிட உள்ளதாக கூறப்படுகிறது. ஆனால் இந்த செய்தி இன்னும் உறுதிப்படுத்தப்படவில்லை. விரைவில் இதற்கான அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த செய்தி உறுதி செய்யப்படும் நிலையில் அது உ.பி அரசியல் சுவாரசிய திருப்பமாக கருதப்படும்.