சிஏஏ போராட்ட வன்முறை.. சாட்டையை சுழற்றிய யோகி அரசு.. ரூ.57 லட்சம் செலுத்த 60 பேருக்கு நோட்டீஸ்
லக்னோ: சிஏஏ போராட்டத்தில் ஏற்பட்ட வன்முறையில் பொதுச்சொத்துகள் சேதப்படுத்தப்பட்ட நிலையில் ரூ.57 லட்சத்தை நஷ்டஈடாக வழங்ககோரி 60 பேருக்கு உத்தர பிரதேச போலீசார் நோட்டீஸ் அனுப்பி உள்ளனர்.
உத்தர பிரதேச மாநிலத்தில் பாஜக ஆட்சி நடக்கிறது. யோகி ஆதித்யநாத் முதல்வராக உள்ளார். இங்கு கலவரம், வன்முறையில் ஈடுபடுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
பொது அமைதிக்கு குந்தகம் விளைவிப்பர்களின் வீடுகள் புல்டோசர் மூலம் இடிக்கப்பட்டு வருகிறது. அதுமட்டுமின்றி கலவரம், வன்முறையில் பொதுச்சொத்துகளை சேதப்படுத்தினால் அதற்கான இழப்பீட்டை வன்முறையாளர்கள், கலவரக்காரர்களிடம் இருந்து வசூலிக்கும் முறை நடைமுறையில் உள்ளது.
100 சதவீதம்.. விரைவில் யோகி ஆதித்யநாத் பிரதமர்.. பாகிஸ்தான் நாடே இருக்காது.. பிரபல ஜோதிடர் கணிப்பு
சிஏஏ எதிர்ப்பு போராட்டம்
இந்நிலையில் தான் மத்திய அரசு சார்பில் நாட்டில் குடியுரிமை திருத்த சட்டம் (சிஏஏ)அமல்படுத்தப்படும் என்ற தகவல் வெளியானது. இதனை எதிர்த்து இந்தியா முழுவதும் கடும் போராட்டங்கள் வெடித்தன. உத்தர பிரதேச மாநிலம் பிஜ்னோர் அருகே நஹ்தூர் போலீஸ் நிலைய பகுதியில் சிஏஏவுக்கு எதிர்ப்பு தெரிவித்து கடும் போராட்டம் நடந்தது. இது வன்முறையாக மாறியது.
2 பேர் கொலை-சொத்துகள் சேதம்
அனாஸ், சல்மான் ஆகியோர் கொலை செய்யப்பட்டனர். போலீஸ் ஜீப் தீவைத்து எரிக்கப்பட்டது. மேலும் பொதுச்சொத்துகள் அடித்து உடைக்கப்பட்டன. போலீஸ்காரர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டது. இதையடுத்து போலீசார் துப்பாக்கிச்சூடு நடத்தி வன்முறையை கட்டுக்குள் கொண்டு வந்தனர்.
60 பேருக்கு நோட்டீஸ்
இதையடுத்து வன்முறையாளர்களிடம் இழப்பீட்டு தொகையை வசூலிக்க முடிவு செய்யப்பட்டது. அதன்படி சிஏஏ எதிர்ப்பு போராட்ட வன்முறை தொடர்பாக 60 பேருக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளதா நஹ்தூர் போலீசார் தெரிவித்துள்ளனர். அதில் ரூ.57 லட்சம் நஷ்டஈடு கேட்கப்பட்டுள்ளது என நஹ்தூர் போலீஸ் நிலைய அதிகாரிகள் தெரிவித்தனர்.
சிஏஏ என்றால் என்ன?
இந்தியாவில் சிஏஏ எனும் குடியுரிமை சட்டம் என்பது பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், வங்கதேசம் ஆகிய நாடுகளில் இருந்து மத ரீதியான துன்புறுத்தல் காரணமாக இந்தியா வரும் இந்துக்கள், கிறிஸ்துவர்கள், சீக்கியர்கள், பார்ஸிகள், சமணர்கள், புவுத்தர்கள் ஆகியோருக்கு இந்திய குடியுரிமை வழங்க வழி செய்கிறது. இதில் முஸ்லிம்கள் இல்லை என்பதால் அவர்கள் நாடு முழுவதும் கடும் போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் சிஏஏவை இந்தியாவில் அமல்படுத்தக்கூடாது என அவர்கள் கோரினர் என்பது குறிப்பிடத்தக்கது.