உத்தரப் பிரதேசத்தில் விரைவில் உள்நாட்டு நீர் வழிகள் ஆணையம்! முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் அறிவிப்பு
லக்னோ: உத்தரப் பிரதேசத்தில் உள்நாட்டு நீர்வழிகள் ஆணையம் விரைவில் அமைக்கப்படும் என்று முதல்வர் யோகி ஆதித்யநாத் கூறியுள்ளார். நேற்று மாலை நடைபெற்ற உயர்மட்டக் கூட்டத்தில் இதனை அவர் அறிவித்துள்ளார்.
உத்தரப் பிரதேசத்தில் நீர் வழி போக்குவரத்து தொடங்கப்பட வேண்டும் என்று அம்மாநில பாஜக அரசு நீண்ட காலமாக யோசனை செய்து வந்திருந்தது. இந்நிலையில் நீர் வழி போக்குவரத்தை ஒழுங்குபடுத்தும் நீர்வழிகள் ஆணையம் தற்போது அமையும் என்று மாநில அரசு கூறியிருப்பது, பொதுமக்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நேற்று நடைபெற்ற இது தொடர்பான உயர்மட்ட கூட்டத்தில் பேசிய முதலமைச்சர் யோகி அதித்யநாத், உள்நாட்டு நீர்வழி ஆணையம் அமைப்பது தொடர்பான ஆய்வுக் கூட்டத்தை நடத்தி, விரைவில் அதன் உருவாக்கத்தை முடிக்க அறிவுறுத்தியுள்ளார்.

இது குறித்து அவர் மேலும் பேசியதாவது, "ஆணையத்தின் தலைவர் மற்றும் துணைத் தலைவர் பதவிகளில் தலைசிறந்த நிபுணர்களுக்கு பொறுப்பு வழங்கப்பட வேண்டும். மாநில போக்குவரத்து ஆணையரை அதன் தலைமை நிர்வாக அதிகாரியாக நியமிக்க வேண்டும் என்று யோசனை இருக்கிறது. இந்த ஆணையம் இந்திய உள்நாட்டு நீர்வழிகள் ஆணையத்துடன் ஒருங்கிணைந்து பயணிக்கும். உள்நாட்டு நீர் போக்குவரத்து மற்றும் சுற்றுலா தொடர்பான அனைத்து நடவடிக்கைகளும் இந்த ஆணையத்தால் கட்டுப்படுத்தப்படும்
உள்நாட்டு நீர் போக்குவரத்து தரவுகளை ஆணையம் முறையாக ஆய்வு செய்ய வேண்டும். உள்நாட்டு நீர் போக்குவரத்து, சுற்றுலா மற்றும் கப்பல் போக்குவரத்து போன்றவை தொடர்பாக அறிவியல் ஆய்வுகள் மேற்கொள்ளப்பட வேண்டும். உள்நாட்டு நீர் போக்குவரத்து தொடர்பான பங்குதாரர்கள் மற்றும் அதிகாரிகள் மற்றும் பணியாளர்களுக்கும் தொழில்நுட்ப பயிற்சி அளிக்கப்பட வேண்டும். மற்ற போக்குவரத்து முறைகளுடன் நீர் போக்குவரத்தை ஒருங்கிணைத்தல் மற்றும் பொது-தனியார் கூட்டாண்மை மற்றும் தனியார் கூட்டாண்மையை ஊக்குவித்தல் பொன்ற பணிகள் இனி வரும் நாட்களில் மேற்கொள்ளப்படும். இது உத்தரப் பிரதேசத்தின் தனி அடையாளமாக இருக்கும்" என்று கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications