தன்னிறைவு பெற்ற இந்தியாவின் மிகப்பெரிய பலம் உ.பியின் எம்எஸ்எம்இ துறை! யோகி ஆதித்யநாத் பெருமிதம்
லக்னோ: உத்தரப் பிரதேசத்தின் எம்எஸ்எம்இ தொழில்துறை, தன்னிறைவு பெற்ற இந்தியாவின் மிகப்பெரிய பலமாக உருவெடுத்திருக்கிறது என அம்மாநில முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் கூறியுள்ளார்.
உத்தரப் பிரதேசத்தில் யோகி ஆதித்யநாத் தலைமையில் பாஜக ஆட்சி நடைபெற்று வருகிறது. இந்த மாநிலத்தில் இதற்கு முன்னர் யாரும் தொடர்ச்சியாக 6 ஆண்டுகள் முதலமைச்சராக நீடித்தது கிடையாது. ஆனால் இந்த சாதனையை கடந்த சட்டமன்ற தேர்தலில் யோகி ஆதித்யநாத் முறியடித்துள்ளார். மக்களின் இந்த ஆதரவை நாடாளுமன்ற தேர்தலுக்கும் நீடிக்க வேண்டும் என்பதற்காக ஏராளமான புதிய திட்டங்களை அவர் தொடர்ந்து அறிவித்து வருகிறார்.

இந்நிலையில் மாநிலத்தில் எம்எஸ்எம்இ துறையின் வளர்ச்சி குறித்து பேசிய அவர், உத்தரப் பிரதேசத்தின் எம்எஸ்எம்இ தொழில்துறை, தன்னிறைவு பெற்ற இந்தியாவின் மிகப்பெரிய பலமாக உருவெடுத்திருக்கிறது என பெருமிதம் தெரிவித்துள்ளார். அதுபோல தயாரிப்புகளின் தரத்தில் சமரசம் செய்து கொள்ளக் கூடாது என்றும் தொழில் முனைவோர்களுக்கு அறிவுறுத்தியுள்ளார். தொடர்ந்து பேசிய அவர், "சர்வதேச வர்த்தகக் கண்காட்சி 2024க்கு இப்போதே நாம் தயாராக வேண்டும். உலகமே உத்தரப் பிரதேசத்தை நம்பிக்கையுடன் பார்த்துக்கொண்டிருக்கிறது.
கடந்த 2017ம் ஆண்டுக்கு முன் உத்தரப் பிரதேசத்தில் தொழில்முனைவோர் எதிர்கொண்ட சவால்கள் என்ன என்பது நமக்கு நன்றாக தெரியும். ஆனால் தற்போது நிலைமை மாறியிருக்கிறது. பாஜக ஆட்சிக்கு வந்ததிலிருந்து ஏராளமான புதிய திட்டங்களை தொழில் முனைவோர்களுக்காக செயல்படுத்தி வருகிறது. இந்த அரசின் முயற்சிகளை பாஜகவினர் மட்டுமல்லாது பல்வேறு தரப்பினரும் பாராட்டி வருகின்றனர். பிரதமர் மோடி தலைமையில் இந்தியா சீரான வளர்ச்சியை நோக்கி சென்றுக்கொண்டிருக்கிறது. அதற்கு உத்தரப் பிரதேசம் மிகப்பெரிய பங்களிப்பை செலுத்தி வருகிறது" என்று கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications