நலத்திட்டங்கள் மூலம் 100% பலன் பெரும் தலித் மக்கள்! பாஜகதான் காரணம்.. யோகி ஆதித்யநாத் பெருமிதம்
லக்னோ: உ.பியில் பாஜக ஆட்சிக்கு வந்த பின்னர்தான் தலித் மக்களுக்கு அரசின் நலத்திட்டங்கள் உரிய முறையில் சென்று சேர்ந்திருக்கின்றன என முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் கூறியுள்ளார்.
உத்தரப் பிரதேசத்தில் யோகி ஆதித்யநாத் தலைமையில் பாஜக ஆட்சி நடைபெற்று வருகிறது. இந்த மாநிலத்தில் இதற்கு முன்னர் யாரும் தொடர்ச்சியாக 6 ஆண்டுகள் முதலமைச்சராக நீடித்தது கிடையாது. ஆனால் இந்த சாதனையை கடந்த சட்டமன்ற தேர்தலில் யோகி ஆதித்யநாத் முறியடித்துள்ளார். மக்களின் இந்த ஆதரவை நாடாளுமன்ற தேர்தலுக்கும் நீடிக்க வேண்டும் என்பதற்காக ஏராளமான புதிய திட்டங்களை அவர் தொடர்ந்து அறிவித்து வருகிறார். இந்நிலையில் தலித் மற்றும் விளிம்பு நிலை மக்களுக்காக ரூ.3,357 கோடியில் புதிய திட்டங்களை அவர் தொடங்கியுள்ளார்.

பிரயாக்ராஜில் ரூ.3,357 கோடியில் 424 புதிய திட்டங்களை தொடங்கி வைத்த அவர், "தலித் மக்கள் 2017ம் ஆண்டு பாஜக ஆட்சிக்கு வந்த பின்னர்தான் ஏராளமான நலத்திட்டங்களை பெற்றிருக்கின்றனர்" என்று கூறியுள்ளார். தொடர்ந்து பேசிய அவர், "கடந்த 2017ம் ஆண்டுக்கு முன்னர் இருந்த அரசுகளால் தலித் மற்றும் விளிம்புநிலை மக்கள் நலத்திட்டங்களை பெறுவதிலிருந்து விலக்கி வைக்கப்பட்டனர். ஆனால் பாஜக அரசுதான் அவர்களுக்கான முக்கியத்துவத்தை மீட்டு கொடுத்தது. 2017ம் ஆண்டுக்கு பிறகு உத்தரப் பிரதேசத்தில் எனது தலைமையில் பாஜக ஆட்சி அமைந்தது. அதன் பின்னர் தலித் மக்களுக்கான நலத்திட்டங்கள் அவர்களுக்கு உரிய முறையில் சென்று சேர்கிறது.
நாட்டிற்கு அரசியலமைப்பை வழங்கிய டாக்டர் பி.ஆர்.அம்பேத்கருக்கு உண்மையான மரியாதை கொடுத்தவர் பிரதமர் நரேந்திர மோடி. டாக்டர் அம்பேத்கர் தொடர்பான இடங்கள் 'பஞ்சதீர்த்தம்' என மாற்றப்பட்டு, இங்கிலாந்தில் அவர் வாழ்ந்த இடத்தையும் கூட இந்திய அரசு அவரது நினைவாக விலைக்கு வாங்கியுள்ளது. மட்டுமல்லாது இங்கிலாந்தில் உள்ள தலித் மாணவர்களின் உயர் படிப்புக்கு அரசு உதவி தொகையை வழங்குகிறது. லக்னோவில் டாக்டர் அம்பேத்கரின் நினைவகம் கட்டப்பட்டு வருகிறது. அங்கு எஸ்சி மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை மற்றும் விடுதி வசதிகள் வழங்கப்பட்டு வருகிறது.












Click it and Unblock the Notifications