இந்தியா பற்றிய உலக நாடுகளின் பார்வையை மாற்றியது பிரதமர் நரேந்திர மோடிதான்! யோகி ஆதித்யநாத் பெருமிதம்
லக்னோ: இந்தியாவை பற்றிய உலக நாடுகளின் பார்வை மாறியுள்ளது. இதற்கு பிரதமர் நரேந்திர மோடிதான் காரணம் என யோகி ஆதித்யநாத் பெருமிதம் தெரிவித்துள்ளார்.
நேற்று உத்தரப் பிரதேசத்தின் அம்பேத்கர் நகரில் 2,339 வளர்ச்சித் திட்டங்களுக்கு யோகி ஆதித்யநாத் அடிக்கல் நாட்டினார். பின்னர் சிறப்புரையாற்றிய அவர், "இந்தியா வல்லரசாக உருவெடுத்து வருவதை உலகமே அறிந்திருப்பதால், இந்தியாவை யாரும் இலகுவாகக் கருதுவதில்லை. தற்போது இந்தியா பற்றிய பார்வை மாறியுள்ளது. இதற்கு திறமையான தலைமைதான் காரணம். பிரதமர் நரேந்திர மோடிதான் அந்த திறமையான நபர்.

பொருளாதார ரீதியில் இந்தியாவின் வளர்ச்சி அபரிமிதமானதாக இருக்கிறது. பிரிட்டனை பின்னுக்கு தள்ளி உலகின் 5வது மிகப்பெரிய பொருளாதாரம் கொண்ட நாடாக இந்தியா உருவெடுத்துள்ளது. அதேபோல ஜி20 நாடுகளிலும் இந்தியா முன்னிலை வகித்து வருகிறது. ஆனால் இதே அண்டை நாட்டை பாருங்கள். பாகிஸ்தானில் எதும் சரியில்லை. மக்களுக்கான அடிப்படை வசதிகள் தொடங்கி, உணவு, கல்வி, வேலை வாய்ப்பு பொருளாதாரம் என எதுவும் சரியில்லை.
ஆனால் இந்தியாவின் நிலைமை கடந்த 9 ஆண்டுகளில் தலைகீழாக மாறியிருக்கிறது. உத்தரப் பிரதேசத்தை பொறுத்த அளவில், பாஜக அரசு ஏராளமான திட்டங்களை அறிவித்துள்ளது. இதில் பெண்கள் மற்றும் குழந்தைகளின் நலன் சார்ந்த திட்டங்கள்தான் அதிகம். இந்த திட்டங்கள் எதிர்காலத்தை பிரதிபலிக்கும் நோக்கத்துடன் அமல்படுத்தப்பட்டது. உதாரணமாக உத்தரப் பிரதேசத்தில் அரசு பள்ளிகளை தரம் உயர்த்த ரூ.2,000 கோடி நாங்கள் ஒதுக்கியிருந்தோம். இதன் மூலம் 2023-2024ம் ஆண்டுகளில் அரசு பள்ளிகளின் தரம் தனியார் பள்ளிகள் அளவுக்கு உயரும்.
மாநிலம் முழுவதும் 880 அரசு தொடக்கப்பள்ளிகள் இருக்கின்றன. இந்த பள்ளிகளை மேம்படுத்த முதற்கட்டமாக ரூ.1,000 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. அதேபோல அடுத்த 3 ஆண்டுகளில் சுமார் 4,000 அபியுதயா கூட்டுப் பள்ளிகளை உருவாக்கவும் அரசு திட்டமிட்டிருக்கிறது. இதற்கான திட்டங்களையும் பள்ளிக்கல்வித்துறை தயாரிக்க தொடங்கியுள்ளது. இதன் மூலம் ஒவ்வொரு மாணவருக்கும் மாநில அரசு தரமான கல்வியை உறுதி செய்யும். அதேபோல சர்வதேச அளவில் மாணவர்களின் திறன்களை வளர்க்கவும் இந்த திட்டம் உதவும்" என்று கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications