விவசாயிகளின் கடின உழைப்பால்தான் உத்தரப் பிரதேசம் வளர்ந்திருக்கிறது! யோகி ஆதித்யநாத் பெருமிதம்
லக்னோ: உத்தரப் பிரதேசம் இந்த அளவுக்கு வலிமையான மாநிலமாக உருவாகியுள்ளதற்கு விவசாயிகளின் கடின உழைப்புதான் காரணம் என்று முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் பெருமிதம் தெரிவித்துள்ளார்.
எதிர் வரும் நாடாளுமன்ற தேர்தலில் பாஜக மீண்டும் வெற்றி பெற வேண்டும் என முயன்று வருகிறது. இதில் வெற்றி பெற வேண்டும் எனில் அதிகப்படியான எம்பிக்கள் பாஜகாவை சேர்ந்தவர்களாக இருக்க வேண்டும். எனவே அதிக எம்பி தொகுதிகள் கொண்ட உத்தரப் பிரதேசத்தை பாஜக குறி வைத்திருக்கிறது. ஏற்கெனவே இங்கு பாஜகவின் ஆட்சிதான் நடைபெற்று வருகிறது என்பதால் தங்களது சாதனைகளை மக்கள் மத்தியில் பிரசாரமாக கொண்டு செல்ல கட்சி திட்டமிட்டுள்ளது.

அந்த வகையில், பிரதம மந்திரி கிசான் சம்மன் நிதி திட்டத்தின் கீழ் விவசாயிகளை இணைப்பது குறித்து மெகா பிரசாரத்தை தொடங்கியுள்ளது. இந்த பிரசாரத்தின் கூட்டங்களில் எம்எல்ஏக்கள், அமைச்சர்கள் பங்கேற்று பேசி வருகின்றனர். இது குறித்து யோகி ஆதித்யநாத் கூறுகையில், "கடந்த 9 ஆண்டுகளில் நாடு முழுவதும் உள்ள விவசாயிகளுக்கு பாஜக அரசு நலத்திட்டங்களை சரியான முறையில் கொண்டு சேர்த்துள்ளது.
விவசாயிகள் எந்த சாதி, எந்த மதம் என்பதை இந்த அரசு பார்ப்பதில்லை. அவர்கள்தான் இந்த நாட்டின் பொருளாதாரத்திற்கு முக்கிய பங்காற்றுகிறார்கள். அவர்களுக்கு இந்த அரசு நியாயம் செய்கிறது. உத்தரப் பிரதேசத்தை பொறுத்த அளவில் நாங்கள் மாநிலம் முழுவதும் உள்ள விவசாயிகளை கணக்கெடுத்து வருகிறோம். பிரதம மந்திரி கிசான் சம்மன் நிதி திட்டத்தை அனைத்து விவசாயிகளுக்கும் கொண்டு சேர்ப்பதுதான் எங்களின் நோக்கமாக இருக்கிறது.
எனவே ஜூன் 10ம் தேதிக்கு முன்னர் இம்மாநிலத்தில் உள்ள அனைத்து விவசாயிகளும் இந்த திட்டத்தின் கீழ் இணைக்கப்படுவார்கள். இதனை துறை சார்ந்த அதிகாரிகள் உறுதி செய்வார்கள். தற்போது வரை இதுவரை 2.63 கோடி விவசாயிகள் இந்த திட்டத்தின் கீழ் சேர்க்கப்பட்டுள்ளனர். இவர்களுக்கு ரூ. 55,800 கோடி பணம் நேரடி வங்கிக்கணக்கில் செலுத்தப்பட்டிருக்கிறது" என்று கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications