மதரசா பள்ளிகளுக்கு யோகி அரசு கிடுக்கிப்பிடி.. கண்டிப்பாக தேசிய கீதம் பாட வேண்டும் என உத்தரவு
லக்னோ: உத்தர பிரதேசத்தில் அரசு மானியத்தில் செயல்படும் 560 மதரசா பள்ளிகள் உள்பட மொத்தமுள்ள 16 ஆயிரத்து 461 மதரசா பள்ளிகள் உள்ளன. ரம்ஜான் விடுமுறைக்கு பிறகு மதரசா பள்ளிகள் திறக்கப்பட்ட நிலையில் புதிய நடைமுறை ஒன்றை பின்பற்ற மதரசா கல்வி வாரியம் உத்தரவிட்டுள்ளது.
உத்தர பிரதேசத்தில் பாஜக தொடர்ந்து 2வது முறையாக ஆட்சியை பிடித்துள்ளது. யோகி ஆதித்யநாத் மீண்டும் முதல்வராக பதவியேற்று செயல்பட்டு வருகிறார்.
இந்த மாநிலத்தில் மொத்தம் 16 ஆயிரத்து 461 மதரசா பள்ளிகள் உள்ளன. இதில் 560 பள்ளிகள் அரசு மானியத்துடன் இயங்கி வருகின்றன. மாநிலம் முழுவதும் மதரசா பள்ளிகளுக்கு ஏராளமான மாணவர்கள் சென்று வருகின்றனர்.
பயங்கர சத்தம் கேட்டு பீதியில் விழித்தோம்.. இந்திய தாக்குதல் பற்றி பாலகோட் மதரசா மாணவர்கள் சொன்னது
ஆலோசனை கூட்டம்
இந்நிலையில் தான் மதரசா பள்ளிகளின் ஒருசில இடங்களில் தேசியகீதம் பாடப்பட்டு வருகிறது. பல இடங்களில் பாடுவது இல்லை என்ற புகார் எழுந்தன. இதுபற்றி உத்தர பிரதேச மதரசா கல்வி வாரிய கூட்டத்தில் ஆலோசிக்கப்ட்டது. அப்போது அனைத்து மதரசா பள்ளிகளிலும் தேசியக்கீதம் கட்டாயமாக்க முடிவு செய்யப்பட்டது. இந்த கூட்டம் மார்ச் 24ல் நடந்தது. இதை செயல்படுத்துவதற்கான நடைமுறைகள் துவங்கின.
மீண்டும் பள்ளிகள் திறப்பு
இதற்கிடையே, ரம்ஜான் மாதத்தையொட்டி மதரசா பள்ளிகளுக்கு மார்ச் 30 வரை மே 11 வரை விடுமுறை அளிக்கப்பட்டன. இதையடுத்து அந்த முடிவு நிலுவையில் இருந்தது. தற்போது ரம்ஜான் விடுமுறை முடிந்து மீண்டும் மதரசா பள்ளிகள் திறக்கப்பட்டுள்ளன. மாணவர்கள் மதரசா பள்ளிகளுக்கு வர துவங்கி உள்ளனர்.
தேசியகீதம் கட்டாயம் என உத்தரவு
இந்நிலையில் தான் உத்தர பிரதேச மதரசா கல்வி வாரியத்தின் பதிவாளர் எஸ்என் பாண்டே அனைத்து மாவட்ட சிறுபான்மை நலத்துறை அதிகாரிகளுக்கும் உத்தரவு பிறப்பித்துள்ளார். அதில் இறைவணக்கத்தின்போது ஆசிரியர்களும், மாணவர்களும் கட்டாயமாக தேசிய கீதம் பாட வேண்டும். இதை பின்பற்றுவதை மாவட்ட சிறுபான்மை நல அதிகாரிகள் கண்காணிக்க வேண்டும் என உத்தரவு பிறப்பித்துள்ளார்.
அமைச்சர் கூறுவது என்ன?
இதுபற்றி சிறுபான்மை நலத்துறை அமைச்சர் டேனிஷ் அசாத் அன்சாரி கூறுகையில், ‛‛சிறுபான்மை மக்களுக்கு மதரசா பள்ளியின் கல்வி முக்கியமானது. இதனுடன் தேசியகீதம் பாடும்போது அவர்கள் சமூகத்தின் மதிப்பை நன்கு அறிவார்கள். இப்போது கணிதம், அறிவியல் கணினி உள்ளிட்ட பிற பாடங்களுடன் இஸ்லாமிய மதநூல்களையும் மாணவர்கள் படித்து வருகின்றனர். மாநில அரசு மதரசா பள்ளிகளின் கல்வித்தரத்தை உயர்த்த முயற்சி மேற்கொண்டு வருகிறார்'' என்றார்.