இரட்டை மாஸ்க் அணிந்து மூதாட்டியிடம் 11 சவரன் கொள்ளை.. மாஸ்கை நீக்கி யாரென்று பார்த்தபோது அதிர்ச்சி
உசிலம்பட்டி: உசிலம்பட்டியில் கொரோனா பரிசோதனை செய்வது போல வந்து மூதாட்டியிடம் நகை கொள்ளையடித்த பெண் கைது செய்யப்பட்டுள்ளார்.
மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே மேக்கிழார்பட்டி கிராமத்தில் வசித்து வருபவர் அழகர் மனைவி முனியம்மாள் (70). இவரது கணவர் அழகர் இறந்துவிட்ட நிலையில் முனியம்மாள் வீட்டில் தனியாக வசித்து வந்தார்.
இந்தநிலையில் முனியம்மாள் வழக்கம்போல் வீட்டு வாசல் முன்பு தனியாக இருந்த போது இருசக்கர வாகனத்தில் வந்த பெண் ஒருவர் வங்கியில் இருந்து வருவதாகவும், உங்களுக்கு கடிதம் வந்துள்ளதாகவும் கூறி கடிதத்தில் கையொழுத்திடுமாறு தெரிவித்தார்.
கையெழுத்து
இதனால் மூதாட்டி வீட்டிற்குள் கையெழுத்துப்போடு பேனாவை எடுக்க சென்றார். இந்த சமயத்தை பயன்படுத்தி அந்த பெண் மூதாட்டியை வீட்டிற்குள் கட்டிப்போட்டு அவரது கழுத்தில் அணிந்திருந்த 11 பவுன் தங்க செயினை பறித்துகொண்டு அங்கிருந்து தப்பியோடினார்.
போலீஸாருக்கு தகவல்
மூதாட்டியின் அலறல் சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் உசிலம்பட்டி போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். தகவலறிந்த போலீசார் சம்பவஇடத்திற்கு விரைந்து சென்று மூதாட்டியிடம் விசாரணை நடத்தினர். மூதாட்டி முனியம்மாள் கொடுத்த புகாரின்பேரில் போலீசார் வழக்குபதிவு செய்து போலீசார் இளம்பெண்ணை தேடி வந்தனர்.
பெண்
இந்நிலையில் அன்னம்பார்பட்டியில் தனியார் நகை கடை வைத்து நடத்திவரும் சேதுராமன் மனைவி உஷாராணி (34) என்பவர் தனியார் நிதி நிறுவனத்தில் மூதாட்டியிடம் பறித்துவந்த தங்க செயினை அடகுவைத்தது தெரியவந்தது. அதனைதொடர்ந்து போலீசார் அந்த பெண்ணை மடக்கிபிடித்த போலீசார் பெண்ணை கைது செய்தனர்.
அதிர்ச்சி
அவரிடமிருந்து தங்கசெயினை பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். கடைசியில் அந்த பெண் அந்த பாட்டியின் பேத்தி என்பது தெரியவந்தது. சொந்த பேத்தியே பாட்டியிடம் நகைகளை கொள்ளையடித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.