மதுரைக்காரர்கள் மனசு இருக்கே..! ரூ.7.50 கோடி மதிப்பு நிலத்தை அரசு பள்ளிக்கு தானம் தந்த பூரணம் அம்மா!
மதுரை: மதுரை ஒத்தக்கடை அருகே உள்ள கொடிக்குளம் அரசு பள்ளிக்கு, தனது ரூ.7.50 கோடி மதிப்புள்ள 1.5 ஏக்கர் நிலத்தை தானமாக வழங்கியிருக்கிறார் ஆயிபூரணம் அம்மா.
அள்ளிக்கொள்ள ஆயிரம் பேர் உள்ள நிலையில் அள்ளிக்கொடுக்க ஆயிபூரணம் அம்மா போன்ற சிலர் தான் உள்ளார்கள் என மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன் நெகிழ்ந்துள்ளார். இந்த நிகழ்வு பற்றி சு.வெங்கடேசன் விடுத்துள்ள பதிவு வருமாறு;

''ஆயி பூரணம் அம்மாவினுடைய கைகளை பற்றிக்கொள்ளவில்லை என்றால் நான் ஒரு மக்கள் பிரதிநிதி இல்லை. அள்ளிக் கொள்வதற்கென்று நிறைய கைகள் உள்ளது? ஆனால் கொடுப்பதற்கு என்று சில கைகள் தான் உள்ளது. நான் அவர்களை நேரில் சந்தித்து வாழ்த்தி வணங்குதல் எனது கடன் என நினைக்கிறேன். மதுரையில் இதுபோன்று நல்ல செயல்களில் ஈடுபடுகிறவர்களை தொடர்ந்து பார்க்க முடிகிறது.
சில மாதங்களுக்கு முன் தத்தனேரியைச் சார்ந்த வத்தல் வணிகர் இராமச்சந்திரன் திரு.வி.க. மாநகராட்சிப் பள்ளிக்கு கூடுதல் கட்டிடம் கட்ட ஒரு கோடியே 10 லட்சம் ரூபாய் கொடுத்தார். அவரை நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்தோம்.
அதேபோல் தமிழறிஞர் ஐயா சாலமன் பாப்பையா வெள்ளிவீதியார் பெண்கள் மாநகராட்சி பள்ளிக்கு கூடுதல் கட்டிடம் கட்ட 25 லட்ச ரூபாய் வழங்கினார். இப்பொழுது ஆயி பூரணம் அம்மாள் ஒத்தக்கடை அருகில் உள்ள கொடிக்குளம் அரசு பள்ளிக்கு ரூபாய் 4.50 கோடி மதிப்பில் உள்ள 1.5 ஏக்கர் நிலத்தை வழங்கியுள்ளார். இதனுடைய சந்தை மதிப்பு 7.50 கோடி ஆகும்.
நடுநிலைப் பள்ளியாக உள்ள இந்த அரசுப்பள்ளியை உயர்நிலைப் பள்ளியாக மாற்றுவதற்கு இந்த நிலத்தை கொடுத்துள்ளேன் என்று கூறியுள்ளார். இந்த இடத்தையும் பள்ளி கல்வித்துறை அதிகாரியிடம் பதிவு செய்து கொடுத்துவிட்டு சத்தம் இல்லாமல் வந்து கனரா வங்கியில் ஊழியராக தனது அன்றாடப் பணி செய்து கொண்டிருக்கின்றார். இப்படிப்பட்டவர்கள் தான் உண்மையான மாணிக்கங்கள்!
இந்த உலகத்தில் பணம்தான் மிகப் பெரியது என்று பலரும் நினைக்கின்றார்கள். ஆனால் அதைவிட பெரியது இந்த உலகில் நிறைய உண்டு. ஆயி பூரணம் அம்மாளின் செயல் அதைத்தான் இந்த உலகிற்கு உரத்து சொல்கிறது. இவர்களுடைய உயர்ந்த எண்ணத்தை குணத்தை கொண்டாட வேண்டிய நேரம் இது அந்த வகையில் தான் பூரணம் அம்மாவை மதுரையின் மக்கள் பிரதிநிதி என்ற வகையில் நான் நேரில் சந்தித்து வாழ்த்தி வணங்கினேன்.''












Click it and Unblock the Notifications