மதுரையை "ஆட வைத்த" ஓபிஎஸ் ஆதரவாளர்கள்! அதிகாலையில் நடந்த "சீக்ரெட்" ஆலோசனை! எடப்பாடிக்கு செக்?
சென்னை: அதிமுகவில் உட்கட்சி விவகாரம் தீவிரம் அடைந்துள்ள நிலையில், ஓபிஎஸ் தரப்பு அடுத்தடுத்து ஆக்ஷனில் இறங்கி உள்ளது.
அதிமுக உட்கட்சி விவகாரம் தான் கடந்த சில மாதங்களாகத் தமிழக அரசியலில் பேசுபொருளாக உள்ளது. இரு ஆண்டுகளாகவே ஓபிஎஸ்- ஈபிஎஸ் இடையே பூசல் என்ற செய்தி வெளியானாலும் அது இப்போது தான் பகிரங்கானது.
அதன் பின்னர் நடக்கும் ஒவ்வொரு செயல்பாடுகளை அதிமுக தொண்டர்களிடையே கவலையை ஏற்படுத்துவதாக உள்ளது. எங்குக் கட்சி மீண்டும் பிளவுப்படுமோ என்று அவர்கள் அஞ்சுகின்றனர்.

அதிமுக
அதிமுகவுக்கு ஒற்றை தலைமை வேண்டும் என்று முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கூறியதே இதன் தொடக்கப் புள்ளியாகப் பார்க்கப்படுகிறது. அதன் பின்னர் பொதுக்குழு கூட்டப்பட்ட எடப்பாடி இடைக்கால பொதுச்செயலாளர் ஆனார். மேலும், ஓபிஎஸ் மற்றும் அவரது ஆதரவாளர்களைக் கட்சியில் இருந்தே நீக்குவதாக அதிரடி அறிவிப்பை வெளியிட்டார். இந்தத் தெம்புடன் அவர் தென் மாவட்டங்களுக்குச் சுற்றுப் பயணமும் மேற்கொள்ள உள்ளார்.

உட்கட்சி விவகாரம்
உட்கட்சி விவகாரத்தைத் தொடர்ந்து அதிமுக தலைமை அலுவலகம் மூடி சீல் வைக்கப்பட்டது. இது தொடர்பான வழக்கில் சாவியையும் அதிமுக கணக்கு வழக்குகளையும் எடப்பாடியிடம் ஒப்படைக்கச் சொன்னது நீதிமன்றம். இந்த நடவடிக்கைகளால் எடப்பாடியின் கை சற்று ஓங்கியது. அதேநேரம் ஓபிஎஸ் அமைதியாக இருந்து வந்தார். இது ஓபிஎஸ் ஆதரவாளர்களிடையே குழப்பத்தை ஏற்படுத்தியது.

ஓபிஎஸ் தரப்பு
இந்தச் சூழலில் ஒரு வழியாக இப்போது ஓபிஎஸ் தரப்பு தீவிரம் காட்டத் தொடங்கி உள்ளது. பொதுக்குழுவுக்கு எதிரான வழக்கிலும் ஓபிஎஸ் தீவிரம் காட்டத் தொடங்கி உள்ளார். மேலும், இன்று அதிகாலை ஓபிஎஸ் தான நியமித்த கட்சி நிர்வாகிகள் உடன் இன்று தீவிர ஆலோசனையில் ஈடுபட்டார். அதில் பல முக்கிய விவகாரங்கள் குறித்து ஆலோசிக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது. குறிப்பாக, போட்டி பொதுக்குழு நடத்துவது குறித்து ஓபிஎஸ் யோசித்து வருவதாகக் கூறப்படும் நிலையில், அது குறித்தும் ஆலோசிக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது.

உற்சாகம்
இந்தச் சந்திப்பு ஓபிஎஸ் ஆதரவாளர்களுக்கு இடையே உற்சாகத்தை ஏற்படுத்தி உள்ளது. உட்கட்சி விவகாரம் தொடங்கியது முதலே எடப்பாடி கை ஓங்கி இருந்த நிலையில், அதை காலி செய்யும் வகையில் ஓபிஎஸ் தனது அடுத்தகட்ட நகர்வுகளைத் திட்டமிட்டு வருகிறாராம். பொதுக்குழு தொடர்பான வழக்கில் தனக்குச் சாதகமான தீர்ப்பே கிடைக்கும் என நம்புகிறது ஓபிஎஸ் தரப்பு! அப்படி நடந்தால் எடப்பாடியைத் தற்காலிக பொதுச்செயலாளராக அறிவித்ததே செல்லாததாகிவிடும்.

பேரணி
இன்று காலை ஓபிஎஸ் தனது வீட்டில் நிர்வாகிகள் உடன் ஆலோசனை நடத்திய நிலையில், கொஞ்ச நேரத்திலேயே மதுரையில் அவரது ஆதரவாளர்கள் பேரணியில் ஈடுபட்டனர். இந்த பேரணியில் ஓபிஎஸ் ஆதரவாளர்கள் அதிகப்படியான எண்ணிக்கையில் கலந்து கொண்டனர். பேரணியாகச் சென்ற அவர்கள், மதுரையில் உள்ள எம்ஜிஆர் மற்றும் ஜெயலலிதா சிலைகளுக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
Recommended Video

முக்கியம்
அதிமுக உட்கட்சி விவகாரத்தில் நாளுக்கு நாள் பல்வேறு திருப்பங்கள் அரங்கேறி வரும் நிலையில், இன்றைய நிகழ்வுகள் முக்கியமானதாகப் பார்க்கப்படுகிறது. ஒருபுறம் ஆலோசனை மறுபுறம் பேரணி என்று உற்சாகம் எடப்பாடி தரப்புக்குப் போட்டியாகத் தீவிரமாகச் செயல்படத் தொடங்கி உள்ளது. எடப்பாடியின் தென் மாவட்ட பயணத்திற்கும் பதிலடி கொடுக்க ஓபிஎஸ் திட்டமிட்டுள்ள நிலையில், அதன் ஒரு பகுதியாக இந்த பேரணி இருக்கலாம் என்றும் கூறப்படுகிறது.












Click it and Unblock the Notifications