முதல்வர் இப்படி பேசலாமா? நான் அமைச்சரா இருந்தபோது ஜெ. என்ன செஞ்சாங்க தெரியுமா? செல்லூர் ராஜூ சுளீர்!
மதுரை : ஜெயலலிதா, அதிகாரி அமைச்சர் என யாராக இருந்தாலும் விடமாட்டார், முதல்வர் ஸ்டாலின் இப்படி மனம் வெதும்பி பேசுவது தலைமை பதவிக்கு அழகல்ல என விமர்சித்துள்ளார் அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ.
முதல்வரும் திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் கடந்த ஞாயிற்றுக்கிழமை நடந்த திமுக பொதுக்குழுவில், அமைச்சர்களின் செயல்கள் பற்றி வேதனையுடன் பேசியது பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்நிலையில், தவறு செய்தது யாராக இருந்தாலும் ஜெயலலிதா போல நடவடிக்கை எடுக்கவேண்டும் எனக் கூறி, தனக்கு நடந்த சம்பவத்தை நினைவுகூர்ந்துள்ளார் அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ.

ஜெயலலிதா என்னை அழைத்தார்
மதுரையில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய செல்லூர் ராஜூ, முதல்வர் ஸ்டாலின் பேச்சு பற்றிய கேள்விக்கு பதிலளிக்கையில், "ஜெயலலிதா ஆட்சியில் அதிகாரி முதல் அமைச்சர் வரை யாராக இருந்தாலும் உடனடியாக நடவடிக்கை எடுப்பார். உதாரணம் சொல்கிறேன். நான் கூட்டுறவுத் துறை அமைச்சராக பொறுப்பேற்ற ஒரு மாதத்திலேயே என் மீது ஜெயலலிதாவிடம் ஒரு புகார் சென்றது. நான் ரேஷன் கடையில் லஞ்சம் வாங்கியதாக ஜெயலலிதாவிடம் எனக்கு நெருக்கமான ஒருவர் புகார் அளித்துவிட்டார். இதை அறிந்தபோது என்னை உடனடியாக அழைத்து விசாரித்தார்.

தூக்கிவாரிப்போட்டது
நான் சென்றதும், என்ன ராஜூ இப்பவே பொட்டு சுரேஷ், அழகிரியை தாண்டி பணக்காரனாக திட்டம் போட்டுட்டீங்களாமே எனக் கேட்டார். எனக்குத் தூக்கிவாரிப் போட்டுவிட்டது. நான் 2001 முதல் மாவட்ட செயலாளராக இருந்தாலும், எந்த டெண்டரிலும் கூட நான் கலந்துகொள்ள மாட்டேன். அமைச்சர்களுக்கு துண்டு சீட்டு கொடுப்பது என்ற எந்த நடவடிக்கையிலும் ஈடுபட்டதில்லை. நான் தொழில் மூலம் வரும் வருமானத்தில் தான் செலவு செய்கிறேன் என்றேன். இல்லை, எனக்கு தகவல் வந்திருக்கே என்றார் ஜெயலலிதா.

என்ன எதிர்த்து பேசுறீங்க
உங்களுக்கு வந்திருப்பது தவறான தகவல் என்றேன். என்ன நான் பேசுவதற்கு எதிர்த்துப் பேசுகிறீர்கள் எனக் கேட்டார். நான் தவறு செய்யாதபோது என்னை குற்றம்சாட்டுகிறீர்கள் எனப் பேசினேன். அப்படியென்றால், எனக்கு உளவுத்துறை கொடுத்த தகவல் பொய்யா எனக் கோபமாகக் கேட்டார். உளவுத்துறை அப்படி தகவல் கொடுத்திருந்தால் அது தவறுதான் என ஆணித்தரமாகச் சொன்னேன். உடனே அவர் கோபமடைந்து, என் ஆளுகைக்கு கீழ் வரும் உளவுத்துறை ரிப்போர்ட் தவறா எனக் கேட்டு என்னை வெளியே போகச் சொல்லிவிட்டார்.

மா.செ பதவி காலி
நான் வெளியே வந்ததுமே என்னுடைய மாவட்ட செயலாளர் பதவியை பறித்தார். அவருடைய ஆளுமையை புரிந்துகொள்ள வேண்டும். நான் வீட்டுக்கு வந்ததுமே, எல்லாரும் ரெடியா இருங்க.. எப்ப வேணாலும் அமைச்சர் பதவி பறிக்கப்படலாம் எனச் சொன்னேன். பின்னர் என் மீதான புகார் பற்றி விசாரித்து, என் மீது தவறு இல்லை என கண்டறிந்து என் அமைச்சர் பதவியை பறிக்கவில்லை. அதன்பிறகு என் மீது எந்த புகார் வந்தாலும் அவர் நம்பமாட்டார். அப்படி கூப்பிட்டு கண்டித்தால், தவறு செய்ய மனம் வருமா?

ஸ்டாலின்
அதுபோல முதலமைச்சர் ஸ்டாலின், அதிகாரிகள், அமைச்சர்கள் என யார் தவறு செய்தாலும் நடவடிக்கை எடுக்க வேண்டும். மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட முதல்வராக இருக்கும் மு.க.ஸ்டாலின் இப்படி 'நான் ஒவ்வொரு நாளும் மன உளைச்சலோடு இருக்கிறேன்' எனப் பேசியது திடமான தலைமைக்கு அழகல்ல. எந்த முதலமைச்சரும் இவ்வளவு மனம் வெதும்பி பேசியதாக வரலாறு இல்லை." எனத் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications