பொங்கல் பரிசு.. கரும்பு கொடுப்பதால் அரசின் பட்ஜெட்டில் துண்டு விழப்போகிறதா? ஆர்பி உதயகுமார் கேள்வி!
மதுரை: பொங்கல் பரிசுத் தொகுப்பில் கரும்பு வழங்காததை கண்டித்து அதிமுக சார்பில் வரும் ஜன.2ம் தேதி ஆர்ப்பாட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர்பி உதயகுமார், பொங்கல் பரிசுத் தொகுப்பில், துண்டு கரும்பு கொடுப்பதனால் தமிழக அரசின் பட்ஜெட்டில் துண்டு விழப் போகிறதா என்று கேள்வி எழுப்பியுள்ளார். அதேபோல் அதிமுக ஆட்சி காலத்தில், ரூ.2,500 பொங்கல் பரிசுத் தொகுப்புடன் கொடுத்த போது, அன்றைய எதிர்க்கட்சி தலைவராக இருந்த முக ஸ்டாலின், ரூ.5,000 வழங்க வேண்டும் என்று கூறியதையும் சுட்டிக் காட்டியுள்ளார்.
வரும் பொங்கல் பண்டிகைக்கு ஆயிரம் ரூபாயுடன், அரிசி, சர்க்கரை ஆகியவை பொங்கல் பரிசு தொகுப்பாக வழங்கப்படும் என கடந்த 22-ம் தேதி என தமிழக அரசு அறிவித்தது. ஆனால் பரிசுத் தொகுப்பில் கரும்பு இடம் பெறாதது குறித்து பல தரப்பினரும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில் பொங்கல் பரிசு தொகுப்பில் கரும்பு வழங்காததை கண்டித்து அதிமுக சார்பில் ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி, ஜனவரி 2ம் தேதி திருவண்ணாமலையில் நடைபெறும் கண்டன ஆர்ப்பாட்டத்தில், பொங்கல் பரிசு தொகுப்பில் கரும்பு வழங்காததை கண்டித்தும், அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் ரூ. 5 ஆயிரம் வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை வலிறுத்தியும் அதிமுக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட உள்ளது.
திமுக அரசின் பொங்கல் பரிசு ஆயிரம் பத்தாது.. 5 ஆயிரம் கொடுக்கனும்.. ஆர்.பி உதயகுமார் வலியுறுத்தல்
ஆர்பி உதயகுமார் அறிக்கை
இந்த நிலையில் பொங்கல் பரிசுத் தொகுப்பில் கரும்பு வழங்காததை கண்டித்து அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர்பி உதயகுமார் கண்டனன் அறிக்கை வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கையில், தமிழகத்தில் 43 ஆயிரம் ஏக்கருக்கு மேல் விவசாயிகள் செங்கரும்பு நடவு செய்துள்ளனர். இதை நம்பி ஏக்கருக்கு 45 ஆயிரம் முதல் 60 ஆயிரம் வரை செலவு செய்த விவசாயிகள், இதை அரசு கொள்முதல் செய்து பொங்கல் பரிசு தொகுப்போடு வழங்கும் என்கிற நம்பிக்கையோடு விதைத்து வளர்த்து வைத்திருக்கிறார்கள்.
விவசாயிகள் பாதிப்பு
அதிமுக ஆட்சி காலங்களில் ஒவ்வொரு ஆண்டும் கரும்பு வழங்கப்பட்டது. கடந்த 2022ம் ஆண்டு கரும்பு கொள்முதல் செய்ய ரூ.71 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாக செய்திகள் இருக்கிறது. ஒவ்வொரு ஆண்டும் பலன் அடைந்து வந்தவர்கள் இன்றைக்கு கண்ணீரிலே தத்தளித்து கொண்டிருக்கிறார்கள். பொருளாதார ரீதியாக கரும்பு விவசாயிகள் வஞ்சிக்கப்பட்டு இருக்கிறார்கள். பொருளாதார தாக்குதல் அவர்கள் மீது தொடுக்கப்பட்டு இருக்கிறது. இதனால் கண்ணீரும் கம்பலையுமாக கவலையோடு இருக்கிறார்கள்.
கரும்பு ஏன் இல்லை?
கரும்பு ஏன் வழங்கவில்லை என்று சொன்னால் அதற்கு பணம் தருகிறோம் வாங்கிக் கொள்ளுங்கள் என்று விளக்கம் தருகிறார்கள். முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான ஆட்சியில், பொங்கல் தொகுப்பில் ரூ.2,500 ரொக்கம் அரிசி, சர்க்கரை, ஏலக்காய், முந்திரி, ஒரு மூல நீல கரும்பு ஆகியவை 2.10 லட்சம் குடும்பங்களுக்கு வழங்கப்பட்டது.
2022 பொங்கல் பரிசு
கடந்த 2022 ஆண்டில் திமுக ஆட்சியல் 21 வகை பொருள்கள் வழங்கப்பட்டதாக சொல்லி, அதில் எத்தனை லட்சம் புகார்கள் இந்த அரசு சந்தித்தது என்பது நமக்கு நினைவிலே இருக்கிறது. ஏற்கனவே இருந்த நடைமுறை மரபுகளை கடைப்பிடிப்பதனால் இந்த மக்களுக்கு கிடைக்கக்கூடிய நன்மைகள் என்ன என்று கூட முதலமைச்சர் சிந்தித்துப் பார்க்க வேண்டாமா?
அதிமுக திட்டங்கள் முடக்கம்
இந்த பொங்கலில் மக்கள் மகிழ்ச்சியோடு இருக்க வேண்டாமா? இது அரசின்மீது நம்பிக்கை வைத்து வாக்களித்த மக்கள் வேதனையில் இருக்கிறார்கள். இந்த கரும்பு கொடுப்பதனாலே உங்களுடைய இந்த பட்ஜெட்ல என்ன துண்டு விழுவா போகிறது. துண்டு கரும்பு கொடுப்பதனாலே பட்ஜெட்டில் துண்டு விழப் போகிறதா? பட்ஜெட்டில் துண்டு விழுவதாக தெரியவில்லை. ஏற்கெனவே அதிமுக அரசின் திட்டங்கள் முடக்கப்பட்டு இருக்கிறது. இன்றைய முதலமைச்சர் அன்றைக்கு எதிர்கட்சித் தலைவராக இருக்கும்போது சொன்னதை மறந்து விட்டீர்களா?
ரூ.5,000 நினைவிருக்கிறதா?
எடப்பாடி பழனிசாமி ரூ.2,500 வழங்கிய போது, நீங்கள் அப்போது ஐயாயிரம் ரூபாய் வழங்க வேண்டும் என்று சொன்னீர்களே? சொன்னது என்ன ஆச்சு ஸ்டாலின் அண்ணாச்சி அவர்களே, இந்த கரும்பை கொள்முதல் செய்வதால் விவசாயிகளுடைய கண்ணீரைத் துடைக்கிற அந்த நல்ல காரியம் அல்லவா நடைபெறும். அதிலே என்ன உங்களுக்கு வருத்தம் என்ன என்று தெரியவில்லை. ஆகவே அரசை நம்பி விதைத்திருக்கிற கரும்பை கொள்முதல் செய்வதற்கு இந்த அரசு முன் வரவேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.