மதுரையில் அதிமுக மாநாடு.. டேக் டைவர்சன்.. வெளியூர் பஸ்கள் எந்த பக்கம் செல்வது.. முழு விபரம்
மதுரை: அதிமுக எழுச்சி மாநாட்டையொட்டி மதுரையில் நாளை போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது. மதுரை வலையங்குளம் கருப்புசாமி கோவில் அருகே அதிமுக மாநாடு நடைபெறவுள்ள நிலையில் போக்குவரத்து மாற்றப்பட்டுள்ளது. பிற மாவட்டங்களில் இருந்து மதுரை மார்க்கமாக செல்லும் வாகனம் மாற்றுப்பாதையில் செல்ல ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
அதிமுக மாநில மாநாடு மதுரை அருகே வலையங்குளத்தில் உள்ள 'ரிங்' ரோடு அருகே நாளைய தினம் நடைபெற உள்ளது. தமிழகம் முழுவதும் இருந்து அக்கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் சுமார் 10 லட்சம் பேர் வர உள்ளதாக கூறப்படுகிறது. அருப்புகோட்டை சாலை, திருநெல்வேலி சாலை, மதுரை சாலை மற்றும் கிராமங்களுக்கு பிரிந்து செல்லும் முக்கிய சாலைகள் மாநாடு நடக்கும் இடத்தில் சந்திக்கிறது. அதிமுக மாநாட்டில் லட்சக்கணக்கானோர் திரளும் நிலையில் அவர்கள் மாநாட்டு பந்தல் அருகே செல்லும் 'ரிங்' ரோட்டில் வாகனங்களை வரிசையாக நிறுத்துவதற்கு வாய்ப்புள்ளது. இதனால் அப்பகுதியில் போக்குவரத்து ஸ்தம்பிக்கும் நிலை உள்ளது.

மாநாட்டுக்கு வரும் வாகனங்கள் எந்த வழியாக வந்து செல்வது, எங்கு பார்க்கிங் செய்வது போன்றவை தொடர்பாக முறையான வழிகாட்டுதல்களை காவல் துறையினர் அறிவித்துள்ளனர். மதுரை வலையங்குளத்தில் நாளை ஞாயிற்றுக்கிழமை நடைபெற உள்ள அதிமுக மாநில மாநாட்டில் கட்சி நிர்வாகிகள், தொண்டர்களின் வாகனங்களில் எந்தெந்த வழியாக வரலாம் என்பது குறித்த விவரங்களை போக்குவரத்து காவல் துறையினர் அறிவித்துள்ளனர்.
அதன்படி தென் மாவட்டங்களில் இருந்து தொண்டர்களை அழைத்து வரும் வாகனங்கள் காரியாபட்டி, வலையங்குளம் வழியாகவும், திருமங்கலம், கப்பலூர் விமான நிலைய சுற்றுச்சாலை வழியாகவும் மாநாட்டு திடலை வந்தடைய வேண்டும்.
வட மாவட்டங்களில் இருந்து திண்டுக்கல், வாடிப்பட்டி வழியாக வரும் வாகனங்கள், நாகமலை புதுக்கோட்டை, தோப்பூர், கப்பலூர், விமான நிலைய சுற்றுச்சாலை வழியாக மாநாட்டு திடலுக்கு வர வேண்டும். வட மாவட்டங்களில் இருந்து மேலூர், ஒத்தக்கடை வழியாக வரும் வாகனங்கள், விரகனூர் சந்திப்பு, மண்டேலா நகர் வழியாக மாநாட்டு திடலை அடைய வேண்டும்.

நாளை காலை முதலே வெளியூர் வாகனங்கள் குவிய தொடங்கும் என்பதால், அதற்கேற்ப மதுரையில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட உள்ளது. தென் மாவட்டங்களை சேர்ந்தவர்கள், மதுரை நகருக்குள் வர கப்பலூர், திருப்பரங்குன்றம் வழிப் பாதையில் வரலாம். மேலூர் பகுதியில் இருந்து வரும் வாகனங்கள், மதுரை நகருக்குள் வந்து கப்பலூர் வழியாக தென் மாவட்டங்களுக்குச் செல்லலாம்.
காரியாபட்டியிலிருந்து மதுரைக்கு வரும் வாகனங்கள், நரிக்குடி மற்றும் திருமங்கலம் வழியாக மாற்றுப் பாதையில் திருப்பி விடப்படும். வலையங்குளம் முதல் விரகனூர், கப்பலூர் வரையுள்ள சுற்றுச் சாலையை பொதுமக்களின் வாகனங்கள் எளிதாக பயன்படுத்த முடியாத சூழல் இருக்கும் என்பதால், அந்த வாகனங்கள் உரிய மாற்றுப் பாதையை தேர்ந்தெடுத்துச் செல்ல வேண்டும் என்று போக்குவரத்து காவல்துறையினர் அறிவுறுத்தியுள்ளனர்.












Click it and Unblock the Notifications