"மிளகாய் பொடி கொட்டி.. தண்ணீர் கூட கொடுக்காமல்" அஜித் குமாருடன் விசாரணையில் இருந்தவரின் வாக்குமூலம்!
சிவகங்கை: மடப்புரம் காளியம்மன் கோயில் பின்புறமாக வைத்து போலீசார் அஜித் குமாருக்கு தண்ணீர் கூட கொடுக்காமல் வாயில் மிளகாய் பொடி கொட்டி அடித்த போது, அவருக்கு சுயநினைவு இழந்து வலிப்பு ஏற்பட்டதாக அவருடன் விசாரணையில் இருந்த வினோத் தெரிவித்துள்ளார். வலிப்பு வந்த போது, கையில் இரும்பு கொடுத்த போதும் நிற்கவில்லை என்று கூறிய அவர், அஜித் குமாருக்கு அப்போது சிறுநீர் ரத்தத்துடன் வெளியேறியதாக கூறி இருக்கிறார்.
சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அருகே உள்ள மடப்புரம் காளியம்மன் கோயிலில் காவலாளியாக பணியாற்றிய இளைஞர் அஜித் குமாரை போலீசார் திருட்டு வழக்கு விசாரணைக்காக அழைத்து சென்றுள்ளனர். அவர் மீது எப்ஐஆர் கூட பதிவு செய்யாமல், தனிப்படை காவல்துறையினர் அஜித் குமாரை சரமாரியாக அடித்து தாக்கி இருக்கின்றனர்.

வெளியான வீடியோ
இந்த தாக்குதலால் இளைஞர் அஜித்குமார் மரணம் அடைந்தார். இது அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கும் சூழலில், தாக்குதலில் ஈடுபட்ட 5 காவலர்கள் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இந்த நிலையில் மடப்புரம் காளியம்மன் கோயிலுக்கு பின்புறம் அவரை பைப்பை வைத்து அடிக்கும் காட்சிகள் வெளியாகி இருக்கிறது.
வினோத் வாக்குமூலம்
தற்போது அஜித் குமாரை காவலர்கள் எப்படியெல்லாம் கொடுமைப்படுத்தி இருக்கிறார்கள் என்பது குறித்து அவருடன் விசாரணையில் இருந்த வினோத் என்ற இளைஞர் கூறி இருக்கிறார். வினோத் பேசுகையில், காளியம்மன் கோயிலுக்கு பின் நகை இருப்பதாக அழைத்து வந்து பார்த்தனர். ஆனால் நகை அங்கு இல்லை. இதன்பின் உடனடியாக காவலர்கள் அடிக்க கிளம்பிவிட்டனர்.
மிளகாய் பொடி டார்ச்சர்
அந்த நேரத்தில் அஜித் குமார் தண்ணீர் கேட்டார். ஆனால் காவலர்கள் தண்ணீர் கொடுக்காமல் மிளகாய் பொடியை எடுத்து வாயில் கொட்டினார்கள். அவர் தண்ணீர்.. தண்ணீர் என்று கேட்க கேட்க, போலீசார் மீண்டும் மீண்டும் 3, 4 முறை மிளகாய் பொடியை வாயில் கொட்டினார்கள். கடைசியில் அஜித் குமாருக்கு வலிப்பு வந்துவிட்டது. உடனடியாக இரும்பு கம்பியை போலீசார் கொடுத்த போதும், வலிப்பு நிற்கவில்லை.
சிறுநீருடன் ரத்தம் வந்தது
அப்போதே சிறுநீருடன் ரத்தமும் வெளியேறியது. பின்னர் மருத்துவமனைக்கு தூக்கிய போது, அந்த அலுவலகம் முன் உயிர் போய்விட்டது. மதியம் 2.30 முதல் 3 மணியளவில் எங்களை மடப்புரம் கோயிலுக்கு பின் அழைத்து வந்தார்கள். மொத்தமாக 5 காவலர்கள் எங்களை அடித்தார்கள். பைப்பை வைத்து அடித்து உடைந்துவிட்டது, மூங்கில் கம்பி உடைந்துவிட்டது. அஜித் குமார் அடி வாங்கிய போது, சுய நினைவிலேயே இல்லை.
மிளகாய் பொடி கொடுத்த கோயில் நிர்வாகிகள்
தண்ணீர் கொடுத்திருந்தால் கூட உயிர் பிழைத்திருப்பார். ஆனால் அப்போதும் கூட மிளகாய் பொடியே கொடுத்தார்கள். கோயில் நிர்வாகிகள் யாரும் போலீசாரை தடுத்து நிறுத்தவில்லை. மிளகாய் பொடியை வாங்கி கொடுத்ததும் அவர்கள் தான் என்று தெரிவித்துள்ளார். வினோத்தின் இந்த வாக்குமூலம் முக்கிய ஆதாரமாக இருக்கும் என்று பார்க்கப்படுகிறது.












Click it and Unblock the Notifications