அமித்ஷா வருகை.. பாமகவை லைனுக்கு கொண்டு வர முயற்சி! கூட்டணி இறுதி செய்யப்படுகிறதா?
மதுரை: தமிழகத்தில் அடுத்த ஆண்டு சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ள நிலையில், அரசியல் கட்சிகள் கூட்டணியை இறுதி செய்து வருகின்றன. இந்நிலையில், இன்று மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா மதுரைக்கு வருகிறார். அவரது வருகயைின் பின்னணியில் கூட்டணி பேச்சுவார்த்தைகள், கூட்டணிக்குள் பாமகவை கொண்டுவருவது உள்ளிட்ட செயல் திட்டங்கள் இருக்கும் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன.
கடந்த சட்டமன்ற தேர்தலை போலவே இந்த தேர்தலிலும் தனது கட்டுப்பாட்டின் கீழ் அதிமுக, பாமக உள்ளிட்ட கட்சிகளை கொண்டுவர பாஜக தீவிரமாக முயன்று வருகிறது. மட்டுமல்லாது இந்த முறை கூடவே தேமுதிகவை விட்டுவிடக்கூடாது என்பதிலும் உறுதியாக இருக்கிறது.

இப்போது பாமகவுக்குள் நடக்கும் உட்கட்சி பஞ்சாயத்துக்கு காரணமும், எந்த கூட்டணியின் பக்கம் சாய்வது என்பதற்காகத்தான் நடக்கிறது என்று பேசப்பட்டு வருகிறது. அன்புமணியை கட்சியின் தலைவர் பொறுப்பிலிருந்து ராமதாஸ் தூக்கியது, மீண்டும் பாஜகவுடன் கூட்டணி என்கிற முடிவுக்கு கட்சியை இழுத்துவிட்டுவிடக்கூடாது என்பதால்தான். எனவே இந்த முறை முழு அதிகாரத்தையும் டேக் ஓவர் செய்து, இந்த சட்டமன்ற தேர்தலில் பாமகவை நிரூபித்து காட்ட வேண்டும் என்று ராமதாஸ் முடிவெடுத்திருப்பதாக தைலாபுரம் தோட்டத்திலிருந்து தகவல்கள் வெளியாகியுள்ளன. இதற்கு பாஜக சவாலாக மாறியிருக்கிறது.
அன்புமணி மீது இருக்கும் சிபிஐ வழக்கை காரணமாக வைத்து கட்சியை லைனுக்கு கொண்டுவர பாஜக தீவிரம் காட்டுகிறது. இப்படி இருக்கையில் அமித்ஷாவின் வருகை என்ன மாற்றத்தை ஏற்படுத்தும் என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
மறுபுறம் திமுக வலுவான கூட்டணியில் தொடர்கிறது. ஏறத்தாழ 2017லிருந்தே இந்த கூட்டணி இன்னும் பிசகாமல் இருப்பதால் பாஜகவுக்கு தமிழ்நாடு மிகப்பெரிய சவாலாக மாறியிருக்கிறது. இந்த கூட்டணியை உடைக்க போட்டப்பட்ட பிளான்கள் அனைத்தும் பெரிய அளவில் பலன் கொடுக்கவில்லை. விசிக, இடதுசாரிகள் கூட திமுக மீது விமர்சனங்கனை வைக்கிறார்களே தவிர, உடைத்துக்கொண்டு வர மாட்டேன் என்கிறார்கள். இப்படியே போனால் இந்த சட்டமன்ற தேர்தலிலும் பாஜக கூட்டணியால் கோலோச்ச முடியாது.
எனவே முதற்கட்டமாக அதிமுகவை முழுமையாக கூட்டணிக்குள் கொண்டுவருது. கூடவே பாமகவை இழுப்பதற்கான வேலைகளை தீவிரப்படுத்துவது என பாஜக களத்தில் முழு மூச்சாக இறங்கியுள்ளது. இதன் வெளிப்பாடுதான் நேற்று ஆடிட்டர் குருமூர்த்தி தைலாபுரம் தோட்டத்திற்கு விசிட் அடித்திருந்தது என அரசியல் விமர்சகர்கள் கூறுகின்றனர்.
அதேபோல, அமித்ஷா வருகையை ஒட்டி இன்றும் நாளையும் சிவகாசி மாவட்டத்தில் கிருஷ்ணசாமியின் கட்சி அலுவலகத்திலும், கோயம்பேடு தேமுதிக அலுவலகத்திலும் பாஜக சார்பில் பேச்சுவார்த்தைகள் மேற்கொள்ளப்படும் என்று சொல்லப்படுகிறது. இதில் தேமுதிகவை கூட்டணிக்குள் கொண்டுவர பாஜக சற்று கூடுதலாகவே மெனக்கெடும். 2021 கூட்டணியில் தேமுதிக இல்லாதது பலவீனமாக பார்க்கப்பட்டது. கேட்ட தொகுதிகளை கொடுக்காததால் அந்த தேர்தலில் அதிமுக+பாஜக கூட்டணியில் தேமுதிக இடம்பெறவில்லை.
அதிமுகவும் இதனை அலட்டிக்கொள்ளாத நிலையில், சமீபத்தில் நடந்த நாடாளுமன்ற தேர்தலில் விஜய பிரபாகரனை வைத்து தனது பலத்தை கட்சி நிரூபித்து காட்டியிருக்கிறது. பிரபாகரன் மிக சொற்ப வாக்குகளில்தான் வெற்றி வாய்ப்பை இழந்திருந்தார். எனவே, சட்டமன்ற தேர்தலில் வெற்றிக்கான அனைத்து புள்ளிகளையும் இணைத்து, கூட்டணியின் பலத்தை மேம்படுத்துவதே இப்போது பாஜகவின் நோக்கமாக இருக்கிறது. எனவே இதற்கான பணிகள் அமித்ஷா வருகையை ஒட்டி சூடுபிடிக்க தொடங்கியுள்ளன.












Click it and Unblock the Notifications