ஆண்டிப்பட்டியே அலறி போச்சே.. வெறும் சிகரெட்தான்.. ஊசலாடிய உயிர்.. பீதி கிளப்பிய அகோரி!
ஆண்டிப்பட்டியில் வேள்வி பூஜை செய்ய முயன்ற அகோரியை தடுத்து நிறுத்தினர் போலீசார்
மதுரை: "நானெல்லாம் சாப்பாடு சாப்பிட்டே 25 வருஷமாச்சு.. வெறும் சிகரெட்டில்தான்உயிர் ஓடிக் கொண்டிருக்கிறது.. அகோரிகள் கோபப்பட்டால் மனிதர்கள் தாங்க மாட்டார்கள்" என்று அடுக்கடுக்காக சொல்லி போலீசாரையே மிரள வைத்துள்ளார் ஒரு அகோரி.
தேனி மாவட்டம், ஆண்டிப்பட்டி அருகேயுள்ளது மொட்டனூத்து கிராமம்.. இங்கு வசித்து வந்தவர் சொக்கநாதர்.. இவர்தன்னுடைய 13 வயசிலேயே ஊரைவிட்டு போய்விட்டாராம்.
நேராக காசிக்கு போய் சிவனடியார்களிடம் தீட்சை பெற்று அகோரியாக மாறி விட்டார்.. கொஞ்ச நாளைக்கு முன்னாடி சொந்த கிராமத்துக்கு சொக்கநாதர் வந்திருக்கிறார். இப்போது இவர் பெயர் சொக்கநாதர் அகோரி என்பதாகும்.
இந்நிலையில், இன்று காலை திடீரென அங்கிருந்த தோட்டம் ஒரு பெரிய குழியை 9 அடிக்கு வெட்டி, அதற்குள் சிவன் படத்தை வைத்தார் .பிறகு ருத்ராட்ச மாலைகளை ஒவ்வொன்றாக அடுக்கி வைத்து, அந்த குழிக்குள் இறங்கி தவம் செய்ய போவதாகவும், சிமெண்ட் சிலாப்புகளை வைத்து தன்னை மூடி விடும்படியும் அவருடைய பக்தர்களிடம் சொல்லிவிட்டு குழிக்குள் போய் உட்கார்ந்து கொண்டார்.
உடனே பக்தர்களும் சிமெண்ட் சிலாப்புகளுக்கு ஏற்பாடு செய்து கொண்டிருந்தனர்.. இதையெல்லாம் பார்த்த கிராம மக்கள் போலீசுக்கு விஷயத்தை சொல்லவும் அவர்கள் விரைந்து சாமியாரிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்..
அப்போது சாமியார் பேசியதை கேட்டு போலீசாரே ஆடிப்போய்விட்டனர்.. இவர் சாப்பாடு சாப்பிட்டே 25 வருஷமாச்சாம்.. 25 வருஷமாக தண்ணீரும் குடித்தது இல்லையாம்.. இப்போதைக்கு அவர் உயிர்வாழ்வதே சிகரெட் பிடித்து கொண்டிருப்பதால்தான் என்று கூறி அதிர வைத்தார்.
மேலும், "நாட்டில் ஜனங்க எல்லாரும் கஷ்டப்பட்டு கொண்டிருக்கிறார்கள்.. இந்த நேரத்தில்கூட நான் உதவி செய்யாவிட்டால் எப்படி? அதனால்தான் பூமி பூஜையில் இறங்கினேன்.. 9 நாள்தான்.. தீபாவளிக்கு முதல்நாள் வெளியே வந்துடுவேன்.. அகோரிகள் கோபப்பட்டால் மனிதர்கள் தாங்க மாட்டார்கள்" என்று ஒரு குண்டையும் தூக்கி போட்டார்.
பிறகு போலீசாரோ, "இப்படியெல்லாம் குழிக்குள் இறங்கி பூஜை செய்யக்கூடாது, அதற்கு அரசு அனுமதியும் இல்லை.. அதனால் குழியை விட்டு வெளியே வாங்க" என்று கூறினர்.. அதற்குள் சுற்றுவட்டாரத்தில் இருந்து மக்கள் அதிகமாக கூடிவிட்டனர்.. கிட்டத்தட்ட 2 மணி நேரம் சாமியார் அந்த குழிக்குள்ளேயே இருந்து போலீசாரிடம் பேசி கொண்டிருந்தார்..
அதன்பிறகே வெளியே வந்தார்.. இருந்தாலும் மறுபடியும் குழிக்குள் இறங்கிவிடக்கூடாது என்று போலீசார் அந்த குழி பக்கத்திலேயே பாதுபாப்பு பணியில் ஈடுபட்டு வருகிறார்களாம். ஆனால், அகோரி அத்துடன் விடவில்லையே .. குழிக்கு வெளியே உட்கார்ந்து தவம் செய்து கொண்டிருக்கிறார்.