அயிரை மீன் குழம்பு ரசிச்சு ருசிச்சு அப்படியே சாப்பிடலாம்... என்னென்ன சத்து இருக்கு தெரியுமா
வாழ்வதே சாப்பிடுவதற்குத்தான். அதுவும் ருசியோடு சாப்பிட்டால் ஆயுள் அதிகரிக்கும். மனதிற்கு பிடித்த உணவை சாப்பிட்டாலே மன அழுத்தம் நீங்கும்.
மதுரை: அயிரை மீன் குழம்பு என்று சொன்னாலே மதுரைக்காரர்கள் சப்புக்கொட்டுவார்கள். சென்னை உள்ளிட்ட பல நகரங்களில் மதுரை அயிரை மீன் குழம்பு என்று போர்டு வைத்து சாப்பாட்டு பிரியர்களை சுண்டி இழுப்பார்கள். இந்த மீன் கிடைப்பது அரிதானது என்பதால் விலையும் அதிகம். ஒரு கிலோ 2000 ரூபாய் வரை விற்பனை செய்யப்படுகிறது. ருசியான சத்தான இந்த மீனை வாங்கி சாப்பிட்டால் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும் என்பது ஊட்ட சத்து நிபுணர்களின் கருத்தாகும்.
நித்தம் நித்தம் நெல்லுச்சோறு... நெய்மணக்கும் கத்திரிக்கா நேத்து வச்ச மீன் குழம்பு என்னை இழுக்குதையா என்று ஒரு பெண் தனது கணவனிடம் தன்னுடைய பிரியமான உணவு ஆசையை வெளிப்படுத்துவார். அயிரை மீன் பிரியர்கள் பலரும் இப்படித்தான் விலை எவ்வளவு என்றாலும் கவலைப்படாமல் சமைத்து சாப்பிடுவார்கள். அந்த மீனைப் பார்க்கும் போதே நாவில் நீர் ஊறும். அப்படி என்னதான் அந்த மீனில் விசேஷம் என்று பலரும் கேட்கலாம். அவர்களுக்காகவே இந்த பதிவு.
நல்லாதான் பேசினேன்.. அவர் சொன்ன அந்த வார்த்தைதான் கோபத்தைத் தூண்டியது.. பெண் வக்கீல் விளக்கம்
அயிரை மீன் நல்ல தண்ணீர் உள்ள வாய்க்கால் மற்றும் வயல்களிலும், கண்மாய்கள், நீரோடைகளில் மட்டுமே உயிர் வாழும் தன்மை கொண்டது. மழை பெய்யும் காலங்களில் நீரோடைகளில் நீந்தி வரும் மீனை பிடித்து விற்பனைக்கு கொண்டு வருவார்கள்.
நோய் எதிர்ப்பு சக்தி
அயிரை மீனில் உள்ள அமினோ அமிலங்கள், நோயெதிர்ப்பு மண்டலத்தை வலிமைப்படுத்தி, நோய்களின் தாக்கத்தில் இருந்து உடலைப் பாதுகாக்கும். அயிரை மீன்களில் அதிகளவு புரோட்டீன், ஏராளமான வைட்டமின்கள் மற்றும் கனிமச்சத்துக்கள் உள்ளன. மேலும் இதில் கெட்ட கொழுப்புக்கள் குறைவாகவும்,நல்ல கொழுப்புக்கள் அதிகமான அளவிலும் உள்ளது. அதுமட்டுமின்றி, இதில் ஒமேகா-3 மற்றும் ஒமேகா-6 கொழுப்பு அமிலங்களும் உள்ளது
நல்ல கொழுப்புகள் அதிகம்
அயிரை மீன்களை குழந்தைகள் பெரியவர்கள் வரை சமைத்து சாப்பிடலாம். இது எளிதில் செரிமானமாகிவிடும். அயிரை மீன்களில் அதிகளவு புரோட்டீன், ஏராளமான வைட்டமின்கள் மற்றும் கனிமச்சத்துக்கள் உள்ளன. நல்ல கொழுப்புகள் அதிகம் உள்ளன. ஒமேகா-3 மற்றும் ஒமேகா-6 கொழுப்பு அமிலங்களும் இந்த மீன்களில் உள்ளது.
மூளை வளர்ச்சிக்கு உதவும்
நல்ல தண்ணீரில் மட்டுமே இந்த அயிரை மீன் வளரும். இந்த மீனில் உள்ள வைட்டமின்கள் மற்றும் கனிமச்சத்துக்கள், பார்வைக் கோளாறு ஏற்படுவதைத் தடுக்கும். மேலும் மாலைக் கண் நோய் மற்றும் சில நாள்பட்ட கண் நோய்களையும் தடுக்கும். இதில் உள்ள ஒமேகா-3 மற்றும் பாஸ்பரஸ், மூளையின் வளர்ச்சிக்கு உதவும்.
புற்றுநோயின் தாக்கம் குறையும்
இந்த சிறிய மீனில் உள்ள கொழுப்பு அமிலங்கள், இரத்த ஓட்டத்தை சீராகப் பராமரித்து, இரத்தம் உறைவதைத் தடுத்து, இதயத்தின் செயல்பாட்டை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ளும். உயர் இரத்த அழுத்த பிரச்சனை இருப்பவர்கள் இந்த மீனை அடிக்கடி உணவில் சேர்த்துக் கொள்வதன் மூலம் இரத்த அழுத்தத்தை சீராகப் பராமரிக்கலாம். அயிரை மீனை உட்கொண்டால், மார்பக புற்றுநோயின் அபாயத்தைக் குறைக்கலாம். இந்த மீனை உண்பதால், சர்க்கரை நோய்க்கான அபாயம் குறைவதாக கூறுகின்றனர்.
குழந்தைகள் மாணவர்கள்
கர்ப்பிணிகள் மற்றும் வளர் இளம் பருவ குழந்தைகளுக்கு ஊட்டச்சத்து குறைபாடு ஏற்படாமல் இருக்க அயிரை மீனை சமைத்துக் கொடுக்கலாம். இதில் உள்ள காம்ப்ளக்ஸ் சத்துக்கள், கர்ப்பிணிகள் மற்றும் வயிற்றில் உள்ள குழந்தைகளின் ஆரோக்கியத்தை அதிகரிக்கும். உங்கள் குழந்தை புத்திசாலியாக இருக்க வேண்டுமானால், அவர்களுக்கு அயிரை மீனை சமைத்துக் கொடுக்கலாம். மாணவர்களின் நினைவாற்றல் அதிகரிக்கும்
சத்துக்கள் அதிகம்
அயிரை மீனில் உள்ள அமினோ அமிலங்கள், நோயெதிர்ப்பு மண்டலத்தை வலிமைப்படுத்தி, நோய்களின் தாக்கத்தில் இருந்து உடலைப் பாதுகாக்கும். இந்த மீனில் பாஸ்பரஸ் மட்டுமின்றி, எலும்புகளை வலிமையாக்கத் தேவையான கால்சியமும் உள்ளதால் வளரும் குழந்தைகளுக்கு அயிரை மீனை அடிக்கடி சமைத்துக் கொடுத்தால் குழந்தைகளின் எலும்பு வளர்ச்சி பெறுவதோடு, வலிமையடையும்.
புரதச்சத்து ஏராளமான அளவில் உள்ளது. எனவே உடலில் இருக்கும் சேதமடைந்த திசுக்களை வேகமாக சரிசெய்ய அயிரை மீனை அடிக்கடி சாப்பிடுவது நல்லது என்று ஊட்டச்சத்து நிபுணர்கள் கூறியுள்ளனர்.
குழம்பும் கிரேவியும்
அயிரை மீனை எப்படி வேண்டுமானாலும் சமைத்து சாப்பிடலாம். குழம்பு வைத்தும் கிரேவியாகவும் சமைத்து சாப்பிடலாம். சிலர் அயிரை பொறியலும் செய்வார்கள். அயிரை டிரை சில்லி, அயிரை மீனை ப்ரை செய்யக்கூடாது.
சமைக்க தயார்
அயிரை மீன் உயிரோடு துள்ளி விளையாடும் போது அதை எப்படி கொல்ல முடியும்? என்று கேட்கறீர்களா? இருக்கவே இருக்கு கல் உப்பு. ஒரு கைப்பிடி கல் உப்பை எடுத்து அயிரை மீன் உள்ள சட்டிக்குள் போட்டு மூடி வைத்து விட வேண்டும். 10 நிமிடத்தில் அத்தனை மீனும் மயங்கி விடும். கைகளால் நன்றாக உரசி கழுவி, நல்லெண்ணை ஊற்றி மூடி வைத்து விட்டால் சமைக்க தயாராகிவிடும் எதுவும் நீக்கத் தேவையில்லை.
ஒரு கிலோ ரூ. 2000
அபூர்வமாக கிடைக்கும் மீன் என்பதால் அயிரை மீன்கள் 1 கிலோ தற்போது 2000 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. சளி தொந்தரவு மற்றும் இதய நோய் உள்ளவர்களுக்கு அயிரை மீன் நல்ல மருந்தாக இருப்பதால் மார்க்கெட்டில் அயிரை மீனுக்கு கடும் வரவேற்பு உள்ளது. அயிரை மீன் எவ்வளவு தான் ஆரோக்கியமானதாக இருந்தாலும், வாரத்திற்கு 3 முறைக்கு மேல் சாப்பிடக் கூடாது என மருத்துவர்களும், ஊட்டச்சத்து நிபுணர்களும் கூறுகின்றனர்.
ஆரோக்கியமான உணவு
வெந்ததைத் தின்று விதி வந்தால் சாவோம் என்று இல்லாமல் வாழும் காலத்தில் நன்றாக ரசித்து ருசித்து சாப்பிட்டாலே நோய் நொடியின்றி ஆரோக்கியமாக வாழலாம். அதனால்தான் நொறுங்கத்தின்றால் நூறு வயது என்று முன்னோர்கள் கூறியுள்ளனர். மனதிற்கு பிடித்த உணவை சாப்பிட்டாலே மன அழுத்தம் இன்றி வாழலாம். அப்புறம் என்ன அயிரை மீன் எங்கே கிடைக்கும் என்று தேட ஆரம்பிங்க மக்களே.