பாஜகவின் 8 ஆண்டு ஆட்சி என்பது சாதனையல்ல.. தமிழகத்துக்கான வேதனை.. கே பாலகிருஷ்ணன் சுளீர்
மதுரை: ‛‛பாஜகவின் 8 ஆண்டு சாதனைகள் என்பது தமிழகத்துக்கான வேதனை தான். பாஜகவின் இன்னும் 2 ஆண்டு ஆட்சியில் என்னவெல்லாம் நடக்கபோகிறதோ'' என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் கே பாலகிருஷ்ணன் கூறினார்.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளராக இருப்பவர் கே பாலகிருஷ்ணன். இவர் மதுரையில் நிருபர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:
மோடி அரசு பத்திரிகை சுதந்திரத்தை காலில் போட்டு மிதிக்கின்றது. உள்நாட்டில் நடப்பது தெரியாமல் வெளிநாடுகளில் ஜனநாயகம் இல்லை என பேசிவருகின்றனர். பாஜக அரசு பத்திரிகை சுதந்திரத்தை நசுக்குகிறது. நாடாளுமன்றத்தில் ஜனநாயக உரிமையை மிதிக்கிறது. எனவே ஜனநாயகம் குறித்து மோடிக்கு பேச தகுதி இல்லை எனவும்,

சாதனையல்ல வேதனை
தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கூறும் பாஜகவின் 8 ஆண்டு சாதனைகள் என்பது தமிழக மக்களுக்கு வேதனைகள் தான். பாஜகவின் இன்னும் இரு ஆண்டுகள் ஆட்சியில் என்னவெல்லாம் வேதனை நடக்கபோகிறதோ? என்ற அச்சத்தில் பொதுமக்கள் உள்ளனர். ஐவுளி தொழிலை அழிவுப்பாதைக்கு கொண்டு சென்றது மோடி அரசின் சாதனை.

ஜனநாயகத்துக்கு எதிரான அடக்குமுறை
ஜனநாயகத்திற்காக குரல் எழுப்பும் சமூக ஆர்வலர்கள், பத்திரிக்கையாளர்களை தொடர்ந்து கைது செய்யும் அவலம் தொடர்கிறது. ஜனநாயத்திற்கு எதிரான அடக்குமுறைகளுக்கு எதிராக அனைத்து ஜனநாயக கட்சிகளும் குரல் கொடுக்க வேண்டும்.

பணி நிரந்தரம் செய்ய வேண்டும்
திமுக அரசு தேர்தல் வாக்குறுதிகள நிறைவேற்றி வருவது பாராட்டுதலுக்குரியது. இதுபோன்று குடும்ப தலைவிக்கு ஆயிரம் ரூபாய் உதவித்தொகை, பழைய பென்சன் திட்டம் ஆகியவற்றை விரைவாக நிறைவேற்ற வேண்டும். போராட்டத்தில் ஈடுபட்டுவரும் மருத்துவர்களின் கோரிக்கையை முதலமைச்சர் தலையிட்டு நிறைவேற்ற வேண்டும், பள்ளிக்கல்வித்துறை காலிப்பணியிடங்களை தற்காலிக பணியிடமாக நிரப்புவது வேதனை அளிக்கிறது, தூய்மை பணியாளர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும்.

அதிமுக பற்றி பேச தேவையில்லை
அதிமுகவில் ஏற்பட்ட பிரச்சினையை பற்றி அதிகமாக பேச தேவையில்லை. ஒற்றைத்தலைமை குறித்து சண்டைபோடும் அதிமுக மோடி அரசின்கீழ் நடைபெறும் மக்கள் விரோத திட்டங்களை பற்றி ஏன் எதிர்த்து பேசுவதில்லை. பாஜகவின் மக்கள் விரோத திட்டங்களுக்கு வெண்சாமரம் வீசி அதிமுகவினர் வரவேற்கின்றனர்.

பாஜக தோற்கும்
தமிழகத்தில் பாஜகவிற்கு 25 சீட் கிடைக்கும் என்ற அண்ணாமலை பேசுவது பொய்யான நம்பிக்கை பாஜக - அதிமுக கூட்டணிக்கு அடுத்தடுத்து தோல்வி தான் கிடைக்கும். வரும் நாடாளுமன்ற தேர்தலில் நாடு முழுவதிலும் தோற்கவுள்ள கட்சியான பாஜக கட்சி தமிழகத்தில் மட்டும் எப்படி வெற்றிபெறும்?'' என்றார்.












Click it and Unblock the Notifications