இஸ்லாமியர்களே திமுக அரசின் நடவடிக்கையை விரும்பவில்லை.. திருப்பரங்குன்றத்தில் நயினார் நாகேந்திரன் பேச்சு
மதுரை: திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள தீபத்தூணில் தீபம் ஏற்ற மதுரை உயர் நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்ட நிலையில் திருப்பரங்குன்றத்தில் செய்தியாளர்களை சந்தித்த பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் திமுக அரசின் நடவடிக்கைகளை இஸ்லாமியர்களே விரும்பவில்லை என்று கூறியுள்ளார்.
திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள தீபத்தூணில் தீபம் ஏற்ற உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டது. வழக்கமாக கோயிலில் உள்ள உச்சி பிள்ளையார்கோவில் அருகே தான் ஏற்றப்பட்டு வந்தது. இந்த நிலையில் நேற்று உயர்நீதிமன்ற தனி நீதிபதி ஜி ஆர் சுவாமிநாதன் தீர்ப்பை மீறி ஆண்டுதோறும் ஏற்றப்படும் உச்சி பிள்ளையார்கோவில் அருகே தீபம் ஏற்றப்பட்டது.

இதனால் இந்து முன்னணியினர் கோவில் வளாகத்தில் ஆர்ப்பாட்டம் நடத்தினர். இதனால் அங்கு பதற்றம் ஏற்பட்டது. மேலும் நீதிமன்ற உத்தரவை மீறியதால் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரப்பட்டது. இதேபோல் நீதிபதி ஜி ஆர் சுவாமிநாதன் உத்தரவுக்கு எதிராக தமிழக அரசு மேல் முறையீடு செய்யப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த இரு நீதிபதிகள் அமர்வு தமிழக அரசின் மேல்முறையீடுமனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.
தொடர்ந்து நீதிமன்ற அவமதிப்பு வழக்கை விசாரித்த நீதிபதி ஜி ஆர் சுவாமிநாதன், இன்று இரவு 7 மணிக்குள் திருப்பரங்குன்றம் தீபத்தூணில் தீபம் ஏற்ற வேண்டும் என்று உத்தரவிட்டார். நீதிபதியின் தீர்ப்புக்கு பாஜக, அதிமுக கட்சிகள் வரவேற்பு தெரிவித்தன. தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன், இஸ்லாமியர்களே திமுக அரசின் நடவடிக்கையை விரும்பவில்லை என கூறினார். அவர் கூறியதாவது:-
திருப்பரங்குன்றத்தில் தீபம் ஏற்றுவது இறைவனின் தீர்ப்பு போல நீதிபதி ஜி ஆர் சுவாமிநாதன் இந்த உத்தரவினை பிறப்பித்து உள்ளார். நேற்றே அனுமதித்து இருந்தால் எந்தவித ஆர்ப்பாட்டமும் இல்லாமல் திருப்பரங்குன்றத்தில் தீபம் ஏற்றப்பட்டிருக்கும். ஆனால் வாக்கு வங்கிக்காக தமிழக முதல்வர் ஒருதலைபட்சமாக செயல்படுகிறார்.
திமுக அரசின் நடவடிக்கையை இஸ்லாமியர்களே விரும்பவில்லை. எனக்கு நிறைய இஸ்லாமிய நண்பர்கள் இருக்கிறார்கள். அவர்களே இதனை விரும்பவில்லை. பொது அமைதிக்கு இங்கு இருப்பவர்கள் யாரும் குந்தகம் விளைவிக்கவில்லை. இவ்வாறு நயினார் நாகேந்திரன் கூறினார். இந்து விரோத போக்கு கொண்ட திமுக அரசுக்கு நீதிமன்றம் தீர்ப்பின் மூலமாக குட்டு வைத்துள்ளது என மத்திய இணை அமைச்சர் எல் முருகன் தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications