தடைக்கல்லா பாஜக? பாஜக அண்ணாமலை VS திமுக சேகர்பாபு.. நீடிக்கும் வார்த்தைப் போர்
மதுரை: இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு கண்ணாடி முன்பு நின்று தன்னை சுயபரிசோதனை செய்து கொள்ள வேண்டும் எனவும், பாஜக எப்போதுமே தமிழகத்திற்கு படிக்கல்லாக தான் இருக்கும் என பாஜக தமிழக தலைவர் அண்ணாமலை கூறியுள்ளார்.
Recommended Video
பாஜக தமிழக தலைவராக பொறுப்பேற்றதில் இருந்தே அண்ணாமலைக்கும் திமுகவினருக்கும் கடும் வார்த்தைப்போர் நீடித்து வருகிறது. தினந்தோறும் ட்விட்டுகள், அறிக்கைகள், பேட்டிகள் மூலம் திமுகவையும் அக்கட்சியினரையும் கடுமையாக விமர்சித்து வருகிறார். அதற்கு திமுகவினரும் தக்க பதிலடிகள் கொடுத்து வருகின்றனர்.
குறிப்பாக இந்து சமய அறநிலையத்துறை அமைச்சராக இருக்கும் சேகர்பாவுக்கும், தமிழக பாஜக தலைவர் அண்ணாமலைக்கும் கடுமையான வார்த்தைப்போர் நீடித்து வருகிறது. பாஜககவின் மீது முடிந்தால் கை வைத்துப் பாருங்கள் என அண்ணாமலை கூற, அன்பினால் கூட ஒருவர் மீது கை வைக்கலாம் என விளக்கமளித்தார் சேகர்பாபு..

அமைச்சர் சேகர்பாபு
இந்நிலையில் நாமக்கல்லில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்ட இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு, நேற்று செய்தியாளர்களிடம் பேசுகையில், உறவுக்கு கைகொடுப்போம் உரிமைக்கு குரல் கொடுப்போம் என்ற கொள்கையின் படி மத்திய அரசின் நல்ல திட்டங்களுக்கு தமிழக முதலமைச்சர் ஆதரவளிப்பார் எனவும் மக்களை பாதிக்கும் திட்டம் என்றால் அதை எதிர்ப்பார் என இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு கூறியிருந்தார்.

தடைக்கல்லாக மத்திய அரசு
மேலும், மத்திய அரசின் நல்ல திட்டங்களுக்கு தமிழக முதலமைச்சர் ஆதரவளிப்பார் எனக் கூறிய இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு, மக்களை பாதிக்கும் திட்டம் என்றால் அதை எதிர்ப்பார் எனவும், தமிழகத்தின் ஆக்கபூர்வமான பணிகளுக்கு பாஜக தலைவர் செயலாற்ற வேண்டும் , நடக்கின்ற நலத்திட்ட பணிகளுக்கு தடைக்கல்லாக இல்லாமல் படிக்கல்லாக இருக்க வேண்டும் எனவும் கூறினார்.

அண்ணாமலை பதிலடி
இந்நிலையில் அமைச்சர் சேகர்பாபுவின் பேச்சுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் பேசியுள்ள பாஜக தமிழக தலைவர் அண்ணாமலை, அமைச்சர் சேகர்பாபு தனது பேச்சு குறித்து கண்ணாடி முன் நின்று சுயபரிசோதனை செய்து கொள்ள வேண்டுமென கூறியுள்ளார். விடுதலைப் போராட்ட வீரர் வீரபாண்டிய கட்டபொம்மன் பிறந்த நாளை ஒட்டி, மதுரை பெரியார் பேருந்து நிலையம் அருகேயுள்ள அவரது சிலைக்கு பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை உள்ளிட்ட பாஜகவினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அண்ணாமலை, எத்தனை கட்சிகள் கூட்டு சேர்ந்தாலும் பாஜகவை அசைத்துக் கூட பார்க்க முடியாது என்றார்.

சேகர்பாபு சுயபரிசோதனை செய்ய வேண்டும்
திமுக அமைச்சர் சேகர்பாபு குறித்த கேள்விக்கு பதிலளித்த அண்ணாமலை, இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு கண்ணாடி முன்பு நின்று தன்னை சுயபரிசோதனை செய்து கொள்ள வேண்டும் எனவும், பாஜக எப்போதுமே தமிழகத்திற்கு படிக்கல்லாக தான் இருக்கும் என்றதோடு, தடைக்கல்லாக ஒருநாளும் இருந்ததில்லை என்றார். எதிர்கட்சியாக இருந்தபோது தடுப்பூசி போட வேண்டாம் எனக் கூறிய திமுகவினர் தற்போது தடுப்பூசி போட்டுக் கொள்ளுங்கள் என மக்களிடம் கூறியபோது தடைக்கல்லாக இருந்தது யார் என கேள்வி எழுப்பினார்.

மத்திய அரசு பிரித்து பார்ப்பதில்லை
முதலில் மத்திய அரசு தடுப்பூசி தரவில்லை என கூறிய திமுகவினர் பின்னர் அருமையான மத்திய என டிஆர் பாலு கூறியதை குறிப்பிட்ட அண்ணாமலை, அறிக்கை விடும் முன் டிஆர் பாலுவிடம் தொலைபேசியில் பேசிவிட்டு ஆலோசனை கேட்டு அதன்பின் பேச வேண்டும் எனவும், கூட்டணி கட்சி ஆளும் கட்சி என பிரித்து பார்த்து மத்திய அரசு திட்டங்களையும் நிதியையும் ஒதுக்கீடு செய்வதில்லை எனவும் அண்ணாமலை கூறினார்.

செய்தியாளர்கள் வாக்குவாதம்
பேட்டியின் போது தனியார் தொலைக்காட்சி ஒன்றின் பெயரைக் குறிப்பிட்டு அண்ணாமலை பேசியதற்கு அங்கிருந்த செய்தியாளர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். அதற்கு பதிலளித்த அண்ணாமலை தான் அப்படித்தான் பேசுவேன் முடிந்தால் செய்தி வெளியிடுங்கள் இல்லையேல் விட்டுவிடுங்கள் என கூறினார். இதன் காரணமாக சிறிது நேரம் அண்ணாமலைக்கும் செய்தியாளர்களுக்கு லேசான வாக்குவாதம் ஏற்பட்டது.












Click it and Unblock the Notifications