மதுரை மீனாட்சி அம்மன் கோயிலுக்கு வெடிகுண்டு மிரட்டல்.. அமைச்சர் சேகர்பாபு வரும் நேரத்தில் பரபரப்பு!
மதுரை: மதுரை மீனாட்சி அம்மன் கோவிலுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. இதனால், மீனாட்சி அம்மன் கோவில் வளாக பகுதிகளில் காவல்துறையினர் வெடிகுண்டு நிபுணர்களுடன் தீவிர சோதனை மேற்கொண்டனர். இந்த சோதனையில் வெடிகுண்டு மிரட்டல் புரளி என்பது தெரியவந்தது.
மதுரையில் உலகப் புகழ் பெற்ற மீனாட்சி அம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலுக்கு தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகை தந்து சாமி தரிசனம் செய்து வருகின்றனர். இந்நிலையில், மீனாட்சி அம்மன் கோவிலுக்கு இன்று வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது.

இதையடுத்து, கோவிலில் போலீசார், வெடிகுண்டு செயலிழப்பு பிரிவு போலீசார் மோப்ப நாய் உதவியுடன் தீவிர சோதனை நடத்தினர். 3 மணி நேரம் நடந்த இந்த சோதனையில் வெடிகுண்டு மிரட்டல் புரளி என்பது தெரியவந்தது. மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு இன்று ஆய்வு செய்ய இருந்த நிலையில் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது.
முன்னதாக, திருப்பரங்குன்றம் முருகன் கோவில், சிக்கந்தர் தர்காவுக்கும் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்ட நிலையில் அங்கும் தீவிர சோதனை நடைபெற்றது குறிப்பிடத்தக்கது. கடந்த சில நாட்களாகவே அரசியல் தலைவர்களின் வீடுகள், பல்வேறு இடங்களுக்கும் மர்ம நபர்கள் வெடிகுண்டு மிரட்டல் விடுத்து வருவது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications