மதுரை விசிக கொடிக்கம்ப விவகாரம்: வருவாய்த் துறை அதிகாரிகளை தாக்கிய.. நிர்வாகிகள் மீது வழக்கு பதிவு
மதுரை: மதுரையில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி கொடிக்கம்ப விவகாரத்தில் வருவாய்த் துறை அதிகாரிகளை தாக்கியதாக 5 விசிக நிர்வாகிகள் உட்பட 21 பேர் மீது 8 பிரிவுகளின் கீழ் சத்திரப்பட்டி காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
மதுரை மாவட்டம், வெளிச்சநத்தம் கிராமத்தில் கடந்த 1996 ஆம் ஆண்டு விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் 25 அடி உயரமுள்ள கொடிக் கம்பம் அக்கட்சியின் தலைவர் திருமாவளவனால் ஏற்றி வைக்கப்பட்டது. இந்த 25 அடி கொடியை 45 அடியாக இப்போது உயர்த்தியுள்ளனர். ஆனால், இதற்கு மாவட்ட நிர்வாகம் சார்பில் எந்தவொரு அனுமதியும் வழங்கப்படவில்லை.

அனுமதியின்றி வைக்கப்பட்டுள்ள கொடிக் கம்பம் குறித்து விசாரிப்பதற்காக துணை வருவாய்த் துறை அதிகாரிகள் அப்பகுதிக்குச் சென்றுள்ளனர். அப்போது, விசிக நிர்வாகிகளிடம் 25 அடி உயரத்துடன் கூடிய கொடிக்கு மட்டுமே அனுமதி அளிக்கப்படும். 45 அடி உயரமுள்ள கொடி கம்பத்தை நிறுவ அனுமதி இல்லை என வருவாய்த் துறை அதிகாரிகளும் தெரிவித்தனர். அப்போது, அவர்களுக்கிடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.
அனுமதியின்றி விசிக கொடிக்கம்பம் வைக்கப்பட்டது குறித்து அதிகாரிகள் கேள்வி எழுப்பிய நிலையில், ஆத்திரமடைந்த விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினர் வருவாய்த் துறை அதிகாரிகளைத் தாக்கியுள்ளனர். கொடிக்கம்பத்தின் முன்பு அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. 20 அடி வரை தான் மாவட்ட நிர்வாகம் அனுமதி வழங்கும் என்றும், அதற்கு மேல் என்றால் சென்னையில் தான் அனுமதி வாங்க வேண்டும் என்றும் வருவாய் அதிகாரிகள் கூறினார்கள்.
இதையடுத்து, காவல் துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசிகவினர் மற்றும் வருவாய்த் துறை அதிகாரிகளிடையே பேச்சுவார்த்தை மேற்கொண்டுள்ளனர். பல மணி நேரப் போராட்டத்துக்குப் பிறகு ஞாயிற்றுக்கிழமை கொடிக் கம்பத்துக்கு அனுமதி வழங்கியுள்ளனர். சட்டம் ஒழுங்கு பிரச்சனை ஏற்படுவதை தடுக்கும் பொருட்டு அனுமதி அளித்ததாக அதிகாரிகள் அப்போது கூறினார்கள்.
45 அடி உயர கொடிக்கம்பத்தை ஏற்ற அனுமதி அளிக்கப்பட்டதை தொடர்ந்து மதுரை மாவட்டத்தில் நடைபெறும் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக வருகை தந்த திருமாவளவன் அண்மையில் திறந்து வைத்தார். இந்நிலையில், 25 அடி உயர கொடிக்கம்பம் 45 அடி உயர கொடிக்கம்பமாக மாற்றப்பட்டதை தடுக்கத் தவறியதாகக் கூறி வருவாய் ஆய்வாளர் அனிதா, கிராம நிர்வாக அலுவலர் பரமசிவம், கிராம உதவியாளர் பழனியாண்டி உள்ளிட்ட 3 பேரை மதுரை மாவட்ட நிர்வாகம் சஸ்பெண்ட் செய்து உத்தரவிட்டுள்ளது.
இந்த நிலையில் பணியிடை நீக்க நடவடிக்கையை திரும்ப பெற வலியுறுத்தி மதுரை மாவட்டத்தில் பணிபுரியும் வருவாய்த்துறை அலுவலர்கள் மற்றும் அதிகாரிகள் விடுப்பு எடுத்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். கொடிக்கம்பம் குறித்து விசாரிக்கச் சென்ற வருவாய்த் துறை அதிகாரிகளை விசிகவினர் தாக்கியதாக கிராம நிர்வாக அலுவலர் பரமசிவம் காவல் துறையினரிடம் புகார் அளித்துள்ளார்.
அந்தப் புகாரின் அடிப்படையில் 5 விசிக நிர்வாகிகள் உட்பட 21 பேர் மீது 8 பிரிவுகளின் கீழ் சத்திரப்பட்டி காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications