யார் வேண்டுமானாலும் வரலாம்.. மக்கள் ஏற்றுக்கொண்டால் மட்டுமே தலைவர்.. அதிமுக பற்றி திருநாவுக்கரசர்
மதுரை: அதிமுகவில் நிர்வாகிகள் ஆதரவுடன் ஒற்றைத் தலைமைக்கு வந்தாலும், மக்கள் ஏற்றுக் கொண்டால் மட்டுமே தலைவராக நீடிக்க முடியும் என்று காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர் திருநாவுக்கரசர் தெரிவித்துள்ளார்.
மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே காங்கிரஸ் கட்சி பிரமுகரின் இல்ல விழாவில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் முன்னாள் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான திருநாவுக்கரசர் கலந்து கொண்டார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், அதிமுக விவகாரம், குடியரசுத் தலைவர் தேர்தல், ஜிஎஸ்டி வரி உயர்வு, அக்னிபாத் திட்டம் உள்ளிட்ட பல்வேறு விவகாரங்கள் குறித்து பேசினார்.
அதில், அதிமுகவில் ஏற்பட்டுள்ள ஒற்றைத் தலைமை விவகாரம் சரியான ஒன்றுதான். நாடு முழுவதிலும் எந்த கட்சியிலும் இதுபோன்ற இரட்டைத் தலைமை இல்லை. ஒற்றைத் தலைமையின் கீழ்தான் அனைத்து கட்சிகளும் இயங்குகின்றன. அதை அதிமுகவினர் வலியுறுத்தினாலும், இவர் தான் தலைமை பொறுப்புக்கு வர வேண்டும் என என்னால் கூற முடியாது.
பெரும்பான்மை யாரிடம் உள்ளதோ அவர்கள் ஒற்றை தலைமைக்கு வர வாய்ப்பு உள்ளது. அப்படி கட்சியினரின் பெரும்பான்மையுடன் ஒற்றைத் தலைமையாக யார் தேர்ந்தெடுக்கப்பட்டாலும், மக்கள் மத்தியிலும் அவர் வெற்றி பெற்றால் மட்டுமே தலைவராக நீடிக்க முடியும். இதுபோன்றதொரு சூழலை அதிமுக எம்ஜிஆர் மறைவின்போதே சந்தித்துள்ளது. அதனால் அதிமுகவுக்கு இது புதிதல்ல என்று தெரிவித்தார்.
அதேபோல் எதிர்க்கட்சிகளின் சார்பில் குடியரசுத் தலைவர் வேட்பாளராக யஷ்வந்த் சின்காவை தேர்வு செய்து களத்தில் இறக்கியுள்ளோம். இந்தத் தேர்தலின் மூலம் எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்துள்ளோம். யஷ்வந்த் சின்ஹாவின் பொதுச் சேவை நாட்டில் உள்ள அனைவருக்கும் தெரியும். அதனால் அவர் நிச்சயம் வெற்றி பெறுவார் என்று தெரிவித்தார்.
தொடர்ந்து ஜிஎஸ்டி வரி விவகாரத்தில் பாஜக அரசு அடித்தட்டு மக்களை வஞ்சித்து வருகிறது. விவசாயப் பொருட்களுக்கும் வரி உயர்வு செய்யப்பட்டுள்ளது. குறிப்பாக மக்கள் அன்றாடம் பயன்படுத்தி வரும் பொருட்களுக்கு வரியை உயர்த்தியுள்ளது கண்டனத்துக்குரியது என்று கூறினார்.
மேலும், அக்னி பாத் திட்டம் குறித்து பேசிய திருநாவுக்கரசர், அக்னிபாத் திட்டத்தில் தற்போது இளைஞர்கள் சேர்ந்து வருவது அவர்களது ஏழ்மையால் மட்டுமே. இந்த பணிக்கு செல்வது, இளைஞர்களின் எதிர்காலத்தை கேள்விக்குறியாக்கும். இந்த திட்டத்தை எதிர்த்து காங்கிரஸ் கட்சி போராடி வருகிறது. அது நிச்சயம் தொடரும் என்று தெரிவித்தார்.