மதுரை எய்ம்ஸ் கட்டுமான பணிகள் 95% நிறைவு.. விரைவில் மோடி திறந்துவைப்பார்.. ஜேபி நட்டா அறிவிப்பு
மதுரை: மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை கட்டுமானத்திற்கான பணிகள் 95% நிறைவடைந்துள்ளதாகவும், விரைவில் பிரதமர் மோடி திறந்து வைப்பார் என்றும் பாஜக தேசிய தலைவர் ஜேபி நட்டா தெரிவித்துள்ளார்.
பாஜக தேசிய தலைவர் ஜே.பி.நட்டா இன்று மதுரை வந்துள்ளார். விமான நிலையத்தில் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தலைமையில் பாஜகவினர் அவருக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர்.
மேள தாளங்களுடன், வழி நெடுகிலும் மலர் தூவி ஜே.பி.நட்டாவிற்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. 2 நாள் பயணமாக தமிழகம் வந்துள்ள பாஜக தேசிய தலைவர் நட்டா, சிவகங்கை மாவட்டத்தில் பல்வேறு நிகழ்ச்சியில் பங்கேற்கிறார்.
ஸ்டாலின் ஆக்சன்! தூக்கப்பட்ட 5 பாஜக புள்ளிகள்! டெல்லியிலிருந்து பறந்து வந்த தேசிய "தலை".. ஒரே பிரஷர்
பாஜக ஆலோசனை கூட்டம்
நாளை வரை பல்வேறு கட்டங்களாக பாஜகவின் முக்கிய நிர்வாகிகளுடன், கட்சியை பலப்படுத்துவது பற்றியும், 2024 தேர்தல் பற்றியும் ஆலோசனை நடத்துகிறார். இந்த நிலையில் விமான நிலையம் அருகே உள்ள தனியார் ஹோட்டலில் பாஜகவின் பல்துறை வல்லுநர்களுடனான ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.
மதுரை விமான நிலையம்
இந்தக் கூட்டத்தில் பாஜக தேசிய தலைவர் ஜேபி நட்டா பேசுகையில், மதுரை விமான நிலையத்தை சர்வதேச விமான நிலையமாக மாற்ற ரூ.550 கோடி மத்திய அரசு நிதி ஒதுக்கீடு செய்தது. அதற்காக மத்திய அரசு 633.17 ஏக்கர் நிலத்தை கேட்ட நிலையில், தமிழக அரசு 543 ஏக்கர் நிலத்தை கொடுத்தது. மத்திய அரசுக்கு தேவையான இடத்தை தமிழக அரசு கொடுக்கவில்லை. இருந்தும் மதுரை விமான நிலையத்தை சர்வதேச விமான நிலையமாக மாற்ற நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது. விரைவில் மத்திய அரசு கேட்ட நிலத்தை தமிழக அரசு கொடுக்கும் என்று எதிர்பார்க்கிறோம் என்று தெரிவித்தார்.
எய்ம்ஸ்-க்கு கூடுதல் நிதி
அதேபோல், மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை கட்டுமானத்திற்கான பணிகள் 95% நிறைவடைந்துள்ளன. எய்ம்ஸ் மருத்துவமனைக்கு மொத்தம் ரூ.1,264 கோடியும், தொற்று நோய் பிரிவுக்கு கூடுதலாக ரூ.134 கோடியும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
விரைவில் திறப்பு விழா
எய்ம்ஸ் மருத்துவமனையில் 750 படுக்கைகள் மற்றும் ஐசியூ வசதியுடன் கூடிய 250 படுக்கைகள் அமைக்கப்பட்டுள்ளன. அதேபோல் மருத்துவ மாணவர்கள் சேர்க்கை இடங்களும் 100ல் இருந்து 250ஆக அதிகரிக்கப்பட்டுள்ளன. எய்ம்ஸ் கட்டுமானப் பணிகள் முடிந்ததும், அதை பிரதமர் மோடி திறந்து வைப்பார் என்று தெரிவித்தார்.