சிபிஎம் மாநாட்டில் பாலஸ்தீனத்திற்கு ஆதரவாக தீர்மானம்! மத்திய அரசின் இஸ்ரேல் ஆதரவுக்கு எதிர்ப்பு
மதுரை: மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் (சிபிஎம்) 24வது அகில இந்திய மாநாடு மதுரையில் நடைபெற்று வருகிறது. இதில் பாலஸ்தீனத்திற்கு ஆதரவாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டிருக்கிறது.
தீர்மானத்தில், பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு, இஸ்ரேல் ஆதரவு நிலைப்பாட்டை கைவிட்டு, பாலஸ்தீன ஆதரவு நிலைப்பாட்டை முன்னெடுக்க வேண்டும் என்றும் வலியுறத்தப்பட்டிருக்கிறது.

பாலஸ்தீன மக்களின் பாரம்பரிய உடையான 'கஃபியாவை' (Kafiya) அணிந்துக்கொண்டு, அந்நாட்டுக்கு ஆதரவான முழக்கங்களை சிபிஎம் தலைவர்கள் மாநாட்டில் எழுப்பியிருந்தனர். இஸ்ரேலின் போரை கண்டித்த அவர்கள், அந்நாட்டை நிறவெறி நாடாக அறிவிக்க வேண்டும் என்றும் தீர்மானத்தில் வலியுறுத்தியுள்ளனர்.

மேலும், "பாஜக தலைமையிலான மத்திய அரசு இஸ்ரேலுக்கு ஆதரவளிப்பதை நிறுத்தி, பாலஸ்தீனை ஆதரிக்கும் இந்தியாவின் பாரம்பரிய நிலைப்பாட்டை மீண்டும் பின்பற்ற வேண்டும். மத்திய கிழக்கில் நிரந்தர அமைதியை கொண்டுவர ஒரே வழிதான் இருக்கிறது. 1967ம் ஆண்டுக்கு முந்தைய எல்லைகளை அடிப்படையாக கொண்டு, கிழக்கு ஜெருசலேமை தலைநகராகக் கொண்டு சுதந்திர பாலஸ்தீனம் உருவாக்கப்பட வேண்டும். அதுதான் பிரச்சனைக்கு தீர்வாக இருக்கும்.

இதற்கான போராட்டத்தில் இந்திய மக்கள் பாலஸ்தீனத்துடன் நிற்பார்கள். காசாவின் மேற்கு கரை உள்ளிட்ட பகுதிகளை கைப்பற்றியுள்ள இஸ்ரேல், அங்கு தங்கள் நாட்டு மக்களை வேண்டும் என்றே குடியமர்த்தி, பாலஸ்தீனத்தை இஸ்ரேலாக அபகரிக்கும் முயற்சி மேற்கொள்ளப்பட்டிருக்கிறது. இதன் நோக்கம் ஒன்றுதான் பாலஸ்தீன மக்களை அவர்கள் நாட்டிலிருந்து விரட்டியடிப்பதுதான். அமெரிக்க, ஐரோப்பிய நாடுகள் இஸ்ரேலுக்கு வழங்கும் ஆயுத உதவியை இந்த தீர்மானம் மூலம் சிபிஎம் கடுமையாக கண்டிக்கிறது.

டொனால்ட் டிரம்ப் காசாவை சுற்றுலா களமாக மாற்றுவோம் என்று கூறியிருப்பது முழுக்க முழுக்க இஸ்ரேலின் நலனுக்காகத்தானே தவிர, பாலஸ்தீனத்தின் நலனுக்காக அல்ல. இந்த விவகாரத்தில் சர்வதேச நாடுகளின் அணுகுமுறை மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்ததாக இருக்கிறது. இந்தியா தனது பாரம்பரிய பாலஸ்தீன நிலைப்பாட்டுக்கு எதிராக இஸ்ரேல் நிலைப்பாட்டை தற்போது கையில் எடுத்திருக்கிறது. பாலஸ்தீன பிரச்சனையை வெறும் யுத்தம் சார்ந்த விஷயமாக மட்டுமே பாஜகவும், சங் பரிவார் கும்பலும் சித்தரிக்கிறது.

ஆர்எஸ்எஸ் மற்றும் சியோனிஸ்டுகளுக்கு (zionists) இடையே மத அடிப்படையிலான தேசியத்தை அடையாளம் காணும் பார்வை மற்றும் முஸ்லிம்களை வெறுக்கும் மனப்பான்மையில் ஒரே மாதிரியான தீவிரவாதப்போக்கு இருக்கிறது" என்று தீர்மானத்தில் குறிப்பிடப்பட்டிருக்கிறது.












Click it and Unblock the Notifications