ஆளுநருக்கு தமிழ் என்னான்னு தெரியுமா?தமிழ்நாடுன்னா என்னான்னு தெரியுமா? விஜயகாந்த் போல சீறிய பிரேமலதா!
மதுரை: தமிழ்நாடு பெயர் மாற்றம் தொடர்பாக தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி தெரிவித்த கருத்து தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். தமிழ்நாடு ஆளுநர் ரவி, தமிழ்நாடு என்பதை தமிழகம் என்று மாற்ற வேண்டும் என கூறியதால் பெரும் சர்ச்சை வெடித்துள்ளது.
சென்னை ஆளுநர் மாளிகையில் அண்மையில் காசி தமிழ் சங்கமம் நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்தவர்களை பாராட்டுகிற விழா நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் ஆளுநர் ஆர்.என்.ரவி பேசுகையில், தமிழ்நாடு என்ற பெயருக்கு பதில் தமிழகம் என்பது சரியாக இருக்கும். திராவிட கட்சிகள் தமிழக மக்களை 50 ஆண்டுகளாக ஏமாற்றிவிட்டது என சாடியிருந்தார்.
திமுகவை சீண்டிய பிரேமலதா விஜயகாந்த்! அதிமுக பற்றி கப்சிப்! தேமுதிகவில் அதிரடி மாற்றங்கள்!
ஆளுநர் ரவியின் இந்த பேச்சுக்கு திமுக உள்ளிட்ட பெரும்பாலான அரசியல் கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றன. சமூக வலைதளங்களிலும் ஆளுநர் ரவி கடுமையாக விமர்சிக்கப்பட்டு வருகிறார். திமுக மூத்த தலைவர் டிஆர் பாலு, ஆளுநர் ரவிக்கு கடும் கண்டனம் தெரிவித்து அறிக்கை ஒன்றை வெளியிட்டார். அதில், தமிழ்நாடு - தமிழன் - தமிழ் என்பவை ஆளுநர் இரவிக்கு கசப்பானவையாக இருக்கின்றன. எனவே இவற்றை விட்டு விலகிச் செல்லும் முடிவை அவர்தான் எடுக்க வேண்டும். ஏற்கனவே தமிழ்நாட்டில் பா.ஜ.க.விற்கு ஒரு மாநில தலைவர் இருப்பதால், தமிழ்நாட்டில் ஆளுநராக இருந்துகொண்டு இன்னொரு மாநில பா.ஜ.க. தலைவராக செயல்பட்டு தமிழர்களுக்கே எதிராக திரு. இரவி அவர்கள் பேசிக் கொண்டிருக்காமல் அரசியல் சட்டப்படி பணியாற்றுவதே அவருக்கு சிறந்தது என்று தெரிவித்துக் கொள்கிறேன் என சாடியிருந்தார். இதேபோல் திமுக அமைச்சர்கள், எம்பிக்கள் பலரும் கடுமையாக ஆளுநர் ரவியை விமர்சித்திருந்தனர்.
மதிமுக பொதுச்செயலாளர் வைகோ எம்பி தமது அறிக்கையில், ஆளுநர் ஆர்.என்.ரவி எல்லை மீறி பேசுவது அவர் வகிக்கும் பொறுப்புக்கு அழகல்ல. திராவிட இயக்கம் பற்றிய அவரது விமர்சனங்கள், அவர் பா.ஜ.க.வின் நிழல் தலைவர் என்பதை படம்பிடித்துக் காட்டுகிறது. ஆர்.என்.ரவி 'தமிழ்நாடு' பெயரை மாற்றி அழைக்க வேண்டும் என்று கூறிய கருத்தை உடனடியாக திரும்பப்பெற வேண்டும். இல்லையேல் நாகலாந்து மக்கள் வழியில் தமிழ்நாட்டு மக்களும் பாடம் புகட்டுவார்கள் என எச்சரித்திருந்தார்.
தற்போது தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்தும் ஆளுநர் ரவியை கடுமையாக கண்டித்துள்ளார். மதுரை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய பிரேமலதா விஜயகாந்த், தமிழகம் என்பதும் தமிழ்நாடு என்பதும் ஒன்றுதான். தமிழ் மொழியைப் பற்றி ஆளுநருக்கு என்ன தெரியும்? 5 ஆண்டுகள் தமிழ்நாடு ஆளுநராக இருப்பதாலேயே தமிழ் மொழியைப் பற்றி அவருக்கு என்ன தெரிந்துவிடும்? லோக்சபா தேர்தலின் போது கூட்டணி குறித்து முடிவெடுப்போம் என்றார்.