இங்கே தண்ணீர் பஞ்சம்.. சிங்கப்பூரில் ஸ்டாலின் ஜாலியாக பலூன் விடுகிறார்... அமைச்சர் செல்லூர் ராஜூ
மதுரை: சென்னையில் நிலவும் தண்ணீர் பற்றாக்குறைக்கு காரணமே திமுக தான். இன்றைக்கு அவர்கள் தண்ணீர் பிரச்சனையை காரணம் காட்டி எங்களை விமர்சிப்பதனை ஏற்றுக்கொள்ள முடியாது என்று கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் ராஜூ கூறியுள்ளார்.
தமிழகத்தில் கோடை வெயிலின் தாக்கம் அதிகரித்ததால் கடுமையான தண்ணீர் பஞ்சம் நிலவி வருகிறது. இதனை போக்க, தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதன் ஒருபகுதியாக, குடிநீர் திட்டப்பணிகளுக்கு ரூ.200 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில், மதுரையில் இன்று செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் செல்லூர் ராஜூ, மழை வேண்டி மதுரை மீனாட்சியம்மன் கோயிலில் நாளை யாகம் நடத்தப்பட உள்ளதாக தெரிவித்தார்.
மதுரை, திண்டுக்கல் உள்ளிட்ட 5 மாவட்டங்களில் குடிநீர் பிரச்சனை இல்லை. சட்டப்போராட்டம் நடத்தி முல்லைப்பெரியாறு அணையின் நீர்மட்டம் உயர்த்தப்பட்டுள்ளதால் தண்ணீர் தட்டுப்பாடு இல்லை. மதுரை மாவட்டத்தின் கண்மாய்கள் தூர்வாரப்பட்டுள்ளதால் குடிநீர் தட்டுப்பாடு தவிர்க்கப்பட்டுள்ளது என்றார்.
மேலும், சென்னையில் நிகழும் குடிநீர் பற்றாக்குறைக்கு கடந்த காலங்களில் ஆட்சி செய்த திமுக தான் காரணம் என காட்டமான விமர்சனத்தை முன்வைத்தார். மேலும், திமுக தலைவர் ஸ்டாலின் சென்னை மேயராக பதவி வகித்த போது குடிநீர் மேம்பாட்டிற்காக கொண்டுவந்த திட்டங்கள் என்ன என்று கூற முடியுமா? என்று கேள்வி எழுப்பினார்.
வருமானத்துக்கு வழி இல்லை.. கல்லூரியை மேம்படுத்தவே வங்கியில் கடன் வாங்கினோம்: பிரேமலதா விஜயகாந்த்
திமுக ஆட்சிக்காலத்தில் தான் நீர் நிலைகள் முழுமையாக ஆக்கிரமிக்கப்பட்டன. இங்கு குடிநீருக்காக திமுகவினரை போராட்டம் நடத்தச் சொல்லி விட்டு, அக்கட்சியின் தலைவர் மு.க. ஸ்டாலின் சிங்கப்பூர் சென்று ஜாலியாக பலூன் விடுகிறார் என்றும் அமைச்சர் செல்லூர் ராஜூ கூறினார்.
முன்னதாக, மும்மொழி கொள்கையை நாங்கள் எதிர்க்கிறோம். தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் இந்தியை எதிர்ப்பதாக கூறுகிறார். ஆனால் அவருடைய உறவினர்கள் நடத்தும் பள்ளியில் இந்தி கற்பிக்கப்படுகிறது. தமிழ் பேசினால் அபராதம் விதிக்கப்படுகிறது. இதற்கு என்ன சொல்கிறார் என்று கேள்வி எழுப்பினார் என்பது குறிப்பிடத்தக்கது.