அதிமுகவில் கொடிகட்டி பறந்த சேடப்பட்டி முத்தையா! கடைசியில் மனம் வெறுத்து வெளியேறிய கதை தெரியுமா?
மதுரை: தமிழக அரசியலில் தனக்கென தனி வரலாற்றை உருவாக்கி மறைந்துள்ள சேடப்பட்டி முத்தையா, ஒரு காலத்தில் அதிமுகவில் கொடிகட்டி பறந்தவர்.
திண்டுக்கல், மதுரை, தேனி மாவட்டங்களில் சாரை சாரையாக தனக்கென ஆதரவாளர்கள் வட்டத்தை உருவாக்கியவர்.
இப்படி ஒரு காலத்தில் ஆஹா ஓஹோவென இருந்த சேடப்பட்டி முத்தையா, கடைசியில் மனம் வெறுத்து அதிமுகவிலிருந்து வெளியேற என்ன காரணம் என்பதை இங்கே பார்க்கலாம்.
சேடப்பட்டி முத்தையாவை அண்மையில் கூட நேரில் சந்தித்து நலம் விசாரித்தேன்.. வேதனையை பகிரும் முதல்வர்!
ஜெயலலிதா ஆதரவாளர்
எம்.ஜி.ஆர். காலத்திலேயே ஜெயலலிதா ஆதரவாளராக அதிமுகவில் வலம் வந்தவர் சேடப்பட்டி முத்தையா. அதிமுக கொள்கை பரப்பு செயலாளராக ஜெயலலிதா நியமிக்கப்பட்டது முதல் அவரது தென் மாவட்ட பயணங்கள் அனைத்திலும் உடனிருந்து பொதுக்கூட்ட ஏற்பாடுகளை கவனித்துக் கொண்டவர். சேடப்பட்டி முத்தையாவின் அறிவாற்றலையும், பொறுமையையும் கவனித்த ஜெயலலிதா அவருக்கு 1991ஆம் ஆண்டு சபாநாயகர் பதவியை வழங்கி பெருமைப்படுத்தினார்.
அபார வளர்ச்சி
அதுமட்டுமல்லாமல் கட்சியிலும் அடுத்தடுத்து முக்கியப் பொறுப்புகளை வழங்கி உயர்த்தி விட்டார். சேடப்பட்டி முத்தையாவின் அபார வளர்ச்சி சசிகலா தரப்புக்கு உறுத்தலை கொடுத்தது. சேடப்பட்டி முத்தையா மீதான புகார்கள் ஊதி பெரிதுப்படுத்தப்பட்டு அது ஜெயலலிதாவின் கவனத்திற்கு கொண்டு செல்லப்படுகிறது. இதையடுத்து படிபடியாக போயஸ் கார்டனில் சேடப்பட்டி முத்தையாவின் செல்வாக்கு சரியத் தொடங்கியது.
போயஸ் கார்டன்
ஒரு கட்டத்தில் போயஸ் கார்டன் கேட் கதவுகள் கூட திறக்கப்படாத அளவுக்கு சேடப்பட்டி முத்தையாவின் நிலை பரிதாபமானது. அந்தச் சூழலில் உடல்நலம் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த சேடப்பட்டி முத்தையாவுக்கு மருத்துவச் செலவுக்கு கூட பணமில்லாமல் அவரது குடும்பம் தவித்தது. இது குறித்து அவரது மகன்கள் ஜெயலலிதாவுக்கு கடிதம் எழுதியும் எந்த பதிலும் வரவில்லை. இதனால் அதிருப்தியின் உச்சக்கட்டத்துக்கே சென்ற சேடப்பட்டி முத்தையா அதிமுகவுக்கும் ஜெயலலிதாவின் தலைமைக்கும் முழுக்கு போட்டுவிட்டு கருணாநிதி முன்னிலையில் திமுகவில் இணைந்தார்.
மனம் நொந்து
அப்போது அவர் கூறியது தான் இது, ''அதிமுகவுக்காக ஓடாக உழைத்து தேய்ந்தவன் நான். நான் உடல்நலம் பாதித்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட போது நிதியுதவி கோரி ஜெயலலிதாவுக்கு எனது குடும்பத்தினர் கடிதம் எழுதினர். அந்தக் கடிதத்திற்கு பதிலும் வரவில்லை, உதவியும் கிடைக்கவில்லை. இன்னும் சொல்லப் போனால் நான் உயிரோடு இருக்கிறேனா என்று கூட கேட்கவில்லை. இப்படி ஒரு தலைமையை ஏற்று நான் என் வாழ்நாளின் சில காலத்தை கழித்திருக்கிறேன் என்பதை நினைக்கும் போது பெரும் இழுக்காக நினைக்கிறேன்'' என மனம் நொந்து போய் சேடப்பட்டி முத்தையா கூறினார் என்பது குறிப்பிடத்தக்கது.