மதுரை ஆட்சியர் அலுவலகத்தில் திடீர் பரபரப்பு.. நள்ளிரவில் மளமளவென பரவிய தீ.. பொங்கல் பரிசுகள் நாசம்
மதுரை: மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நேற்றிரவு ஏற்பட்ட திடீர் தீ விபத்தில் பொங்கல் பரிசுக்காக வைக்கப்பட்டிருந்த வேட்டி சேலைகள் தீயில் கருகி நாசமாகியுள்ளன. சுமார் 3 மணி நேர போராட்டத்திற்கு பின்னர் இந்த தீயை தீயணைப்பு வீரர்கள் கட்டுக்குள் கொண்டு வந்து அணைத்தனர்.
தமிழ்நாடு முழுவதும் இன்று பொங்கல் பரிசு பொருட்கள் வழங்கப்படுகிறது. சென்னை தீவுத்திடல் அருகே உள்ள சத்யா நகர் குடியிருப்பு மக்களுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ரூ.1,000 ரொக்கத்துடன் பொங்கல் பரிசை இன்று காலை வழங்குகிறார். இதனையடுத்து மாநிலம் முழுவதும் உள்ள ரேஷன் கடைகளில் பொருட்கள் விநியோகிக்கப்படும். இதில் பச்சரிசி, சர்க்கரை ஆகியவற்றுடன் கரும்பு மற்றும் வேட்டி, சேலையும் வழங்கப்படும்.

மாநிலம் முழுவதும் சுமார் 2,19,33,342 குடும்ப அட்டைதாரர்களுக்கு பரிசு பொருட்கள் வழங்கப்படுகின்றன. இதற்கென ரூ.2,430 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. மதுரையில் மட்டும் கூட்டுறவு துறை சார்பில் சுமார் 1,336 ரேஷன் கடைகள் இயங்கி வருகின்றன. இதில் மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் மட்டும் 700க்கும் அதிகமான ரேஷன் கடைகள் இயங்கி வருகின்றன. இந்த கடைகளுக்கு விநியோகம் செய்வதற்கான மாவட்ட ஆட்சியர் அலுவலக கட்டிடத்தில் உள்ள மாவட்ட வழங்கல் அலுவலகத்தில் வேட்டி சேலைகள் இருப்பு வைக்கப்பட்டிருந்தன.
ஏறத்தாழ அனைத்து ரேஷன் கடைகளுக்கும் முதல் கட்டமாக இந்த வேட்டி சேலைகள் அனுப்பப்பட்ட நிலையில், மீதமுள்ளவை இந்த அலுவலகத்தில் சேமித்து வைக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், நேற்றிரவு திடீரென இந்த அலுவலகத்திலிருந்து புகை கிளம்பியிருக்கிறது. இரவில் புகை தெரியாததால் பாதுகாப்பு பணியில் இருந்த காவலர்களுக்கு தீ விபத்து ஏற்பட போவதை முன் கூட்டியே கணிக்க முடியவில்லை. பின்னர் சிறிது நேரத்திற்கெல்லாம் தீ மளமளவென பற்றி எரிய தொடங்கியது. இதனை சற்றும் எதிர்பாராத காவலர்கள் தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.

தகவலின் பேரில் தீயணைப்பு துறையினர் சம்பவ இடத்திற்கு வருவதற்குள் அலுவலகம் முழுவதும் தீ பரவியுள்ளது. இதனையடுத்து அவர்கள் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட தொடங்கினர். சுமார் மூன்று மணி நேர போராட்டத்திற்கு பின்னர் தீ முற்றிலுமாக அணைக்கப்பட்டது. ஆனால் அதற்கு முன்பாகவே அலுவலகத்தில் வைக்கப்பட்டிருந்த வேட்டி, சேலைகள் மொத்தமாக எரிந்து நாசமாகியுள்ளது. மட்டுமல்லாது அலுவலகத்தில் வைக்கப்பட்டிருந்த முக்கிய ஆவணங்களும் எரிந்து சாம்பலாகியுள்ளன. இதுவரை பல லட்சம் ரூபாய் மதிப்பிலான பொருட்கள் எரிந்து நாசமாகி இருக்கலாம் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.












Click it and Unblock the Notifications