ஒத்தக்கடை டூ திருமங்கலம்.. மெட்ரோ ரயில் திட்டம் சாத்தியமே.. மதுரை மக்களுக்கு வந்த குட் நியூஸ்!
மதுரை மெட்ரோ ரயில் திட்டம் செயல்படுத்துவதற்கான சாத்திய அறிக்கை தமிழ்நாடு அரசிடம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.
மதுரை: மதுரையில் மெட்ரோ ரயில் திட்டம் கொண்டு வருவதற்கான சாத்திய அறிக்கைகள் தமிழ்நாடு அரசிடம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. ஒத்தக்கடை முதல் திருமங்கலம் வரையிலான 31 கி.மீ மெட்ரோ ரயில் திட்டம் செயல்படுத்த திட்டமிடப்பட்டுள்ளதாகவும், திட்ட மதிப்பாக ரூ. 8 ஆயிரம் கோடி நிர்ணயம் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில் திமுக ஆட்சி அமைந்ததில் இருந்து தென் மாவட்டங்களின் தொழில், கல்வி வளர்ச்சிக்காக பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அந்த வகையில் மதுரையில் கலைஞர் நூலகம், டைடல் பார்க், ஜல்லிக்கட்டு அரங்கம் என்று பல்வேறு திட்டங்கள் அறிவிக்கப்பட்டு, அதற்கான பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
அதுமட்டுமல்லாமல் மதுரையின் உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தும் வகையில் பல்வேறு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. வாகன பயன்பாட்டால் ஏற்படும் போக்குவரத்து நெரிசலை தவிர்க்க சாலை வசதிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. குறிப்பாக தல்லாகுளம் முதல் கோரிப்பாளையம் வரை புதிய மேம்பாலம் கட்டுவதற்கான திட்டப் பணிகள் நடந்து வருகின்றன.
ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல்: ஒரே மேடையில் முதல்வர் ஸ்டாலின், மல்லிகார்ஜூன கார்கே, கமல்ஹாசன் பிரசாரம்!
மெட்ரோ ரயில் திட்டம்
இந்த நிலையில் மதுரையில் மெட்ரோ திட்டம் கொண்டு வருவதற்கான சாத்தியக் கூறுகள் குறித்து ஆய்வு செய்யப்பட்டு தமிழ்நாடு அரசிடம் அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. மதுரையில் தமிழ்நாடு தொழில் வர்த்தக சங்க செயற்குழு கூட்டம் நடைபெற்றது. இதற்கு அச்சங்கத்தின் தலைவர் ஜெகதீசன் தலைமை வகித்தார். இந்த கூட்டத்தில் சென்னை மெட்ரோ ரயில் திட்ட இயக்குநர் அர்ச்சுனன் பேசுகையில், மெட்ரோ ரயில் திட்டம் பாதுகாப்பானது. அதேபோல் நம்பகத்தன்மைமிக்கது. சென்னை 54 கிலோ மீட்டர் தூரம் வரை மெட்ரோ ரயில் இயக்கப்படுகிறது.
ஓட்டுநர் தேவையில்லை
ரயில்வே ஸ்டேஷன், ரயில் பெட்டிகளில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளது. அதேபோல் பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களை மெட்ரோ ரயில் எளிதாக இணைக்கிறது. அதுமட்டுமல்லாமல் பெயரளவுக்கு மட்டுமே ஓட்டுநர்கள் இருக்கிறார்கள். பெரும்பாலான நேரம் ஜிபிஎஸ் மூலமாகவே இயக்கப்பட்டு வருகிறது. அடுத்து வரும் இரண்டாம் கட்ட திட்டப் பணியில் முற்றிலும் ஓட்டுநர் இல்லாமல் மெட்ரோ ரயில் இயக்கப்படும்.
ஒத்தக்கடை டூ திருமங்கலம்
அதேபோல் கோவை, மதுரை மாவட்டங்களில் மெட்ரோ ரயில் திட்டத்தை செயல்படுத்துவதற்கான சாத்தியக் கூறுகள் ஆய்வு செய்யப்பட்டுள்ளன. அந்த அறிக்கை தமிழ்நாடு அரசிடம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. மதுரையில் ஒத்தகடை முதல் திருமங்கலம் வரை 31 கிலோ மீட்டர் தூரம் மெட்ரோ ரயில் திட்டம் செயல்படுத்தப்படும்.
ரூ.8 ஆயிரம் கோடி
இதற்கிடையே 17 நிறுத்தங்கள் இடம்பெறும் வகையில் திட்டமிடப்பட்டுள்ளது. கோரிப்பாளையம், வசந்தநகர் பகுதிகளில் சுரங்கப்பாதை அமைக்கப்படும். இதன் திட்ட மதிப்பாக ரூ.8 ஆயிரம் கோடியாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்தப் பணிகள் தொடங்கப்பட்டால் நான்கு ஆண்டுகளில் நிறைவடையும் என்று தெரிவித்தார்.