பிரபல பன் பரோட்டா கடைக்கு சீல்.. அதிகாரிகள் அதிரடி நடவடிக்கை.. மதுரையில் பரபரப்பு!
மதுரை: மதுரை சாந்தமங்கலம் ஆவின் சந்திப்பில் சாலையோரம் செயல்பட்டு வந்த பிரபல பன் பரோட்டா கடைக்கு உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகளால் சீல் வைக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டின் உணவு தலைநகரம் என்று கூறும் அளவிற்கு மதுரை உணவுகள் பிரபலம். ஆட்டுக்கறி , கோழிக்கறியில் இத்தனை வகையான உணவுகளை சமைக்க முடியுமா என்று வியக்கும் அளவிற்கு மதுரையில் உணவுகள் தயாரிக்கப்படும். ஆட்டுக்கறியில் இருந்து மட்டன் சுக்கா, மிளகுச் சுக்கா, எண்ணெய்ச் சுக்கா, ஈரல், சுவரொட்டி, குடல் குழம்பு, குடல் ரோஸ்ட், தலைக்கறி, எலும்பு ரோஸ்ட், முட்டை கறி, கோலா உருண்டை, கறிதோசை, ஆட்டுக்கால் சூப் செல்லும் பட்டியலுக்கு கணக்கே இல்லை.
ஆனால் இவையெல்லாம் கடந்து மதுரையில் செய்யப்படும் பரோட்டா மக்களிடையே இன்னும் ஸ்பெஷல். இரவு நேரங்களில் மதுரையில் பரோட்டா சாப்பிடவில்லை என்றால், சிலருக்கு தூக்கமே வராது. அப்படி தயாரிக்கப்படும் பரோட்டாக்களில் மைதா பரோட்டா, கோதுமை பரோட்டா, செட் பரோட்டா, முட்டை லாப்பா, சில்லி பரோட்டா, பனீர் பரோட்டா, வெஜ் பரோட்டா, எண்ணெய் பரோட்டாக்களை எல்லாம் கடந்து பன் பரோட்டா இன்னும் கொஞ்சம் ஸ்பெஷல்.
ஏனென்றால் மற்ற வகை பரோட்டாக்கள் வேறு சில மாவட்டங்களில் எளிதாக கிடைக்கக் கூடியது. ஆனால், பன் பரோட்டா மதுரையை தவிர்த்து வேறு எங்கும் கிடைக்காது. இன்னும் சொல்லப்போனால், ஆவின் சிக்னல் அருகே உள்ள கடையில் மட்டுமே பன் பரோட்டா நல்ல சுவையுடன் கிடைக்கும். மாலை நேரம் தொடங்கியதில் இருந்து, இரவு வரை பன் பரோட்டா கடையில் எப்போதும் கூட்டம் குறைந்து மதுரை மக்கள் பார்த்ததே இல்லை என்ற நிலைதான் நேற்று வரை இருந்தது.
ஆனால் இன்று மதுரை மக்களின் உணர்வுகளோடு ஒன்றிப்போன பன் பரோட்டா கடைக்கு உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் சீல் வைத்துள்ளனர். இந்த பன் பரோட்டா கடைக்கு உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் சார்பாக மூன்று முறை நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. அந்த நோட்டீஸில், கடைகளில் சுகாதாரம் கடைபிடிக்க வேண்டும். இல்லை என்றால் கடைக்கு சீல் வைக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இருந்தும் எந்தவித நடவடிக்கையும் உணவகத்தின் சார்பாக எடுக்கப்படவில்லை என்று கூறப்படுகிறது.
இந்தநிலையில் நேற்று இரவு உணவு பாதுகாப்புத் துறை அதிகாரிகள் திடீரென அந்த உணவகத்திற்கு சுகாதாரம் இல்லாத காரணத்தினால் உடனடியாக வியாபாரத்தை நிறுத்தி அந்த கடைக்கு சீல் வைத்துள்ளனர். அதே சமயம் சாலையோரங்களில் உள்ள கடைகளுக்கு முறைப்படி சுத்தம் சுகாதாரம் கடைபிடிக்கவில்லை என்றால் உடனடியாக கடைக்கு சீல் வைக்கப்படும் என்று அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.