புத்தாண்டும் அதுவுமா.. அதிமுகவிலிருந்து ஸ்டாலினுக்கு வந்த சர்ப்ரைஸ்! புகழ்ந்து தள்ளிய மாஜி அமைச்சர்!
மதுரை : முதல்வர் ஸ்டாலின் சுறுசுறுப்பாக பணியாற்றுகிறார், அவரைப் போலவே மற்றவர்களும் பணியாற்ற வேண்டும் என மதுரையில் முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ கூறியுள்ளார்.
Recommended Video
புத்தாண்டு தினத்தை முன்னிட்டு மதுரை மீனாட்சியம்மன் கோவிலில் முன்னாள் அமைச்சர் செல்லூர்ராஜூ தனது குடும்பத்தினருடன் சாமி தரிசனம் செய்தார்.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்த செல்லூர் ராஜூ பேசுகையில், அனைவரும் நோய்நொடியின்றி வாழ வேண்டியும், ஒமிக்ரான் கொரோனோ தொற்று நீங்க வேண்டியும் , கொரோனா இல்லாத உலகமாக மாற வேண்டும் என மீனாட்சியம்மனை குடும்பத்தோடு சாமி தரிசனம் செய்துள்ளோம் என்றார்.

சுறுசுறுப்பான முதல்வர் ஸ்டாலின்
கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கையை அதிமுக அரசு செய்தது போல திமுக அரசும் செயல்பட வேண்டும் எனவும், ஸ்டாலின் முதலமைச்சராக சுறுசுறுப்பாக பணியாற்றுகிறார், அவரோடு சேர்ந்த அனைவரும் பணியாற்றி கொரோனா பரவலை குறைக்க நடவடிக்கைகள் மேற்கொள்ளவேண்டும் என்ற செல்லூர் ராஜு, திமுக எதிர்கட்சியாக இருந்தபோது அளித்த வாக்குறுதியான குடும்ப அட்டைதாரர்களுக்கு 5 ஆயிரம் ரூபாய் வழங்கவேண்டும் என்பதை திமுக அரசு செயல்படுத்தும் என நம்புவதாக கூறினார்.

அச்சத்தில் மக்கள்
ஒமிக்ரான் பரவல் அதிகரிப்பால் தமிழகத்தில் மற்றொரு ஊரடங்கு வருமோ ? என்ற அச்சத்தில் மக்கள் உள்ளனர் என்ற அவர், நகைகடன் தள்ளுபடி குறித்த கேள்விக்கு புத்தாண்டு நாள் என்பதால் நகைக்கடன் குறித்து இன்று எதுவும் பேசவேண்டாம் என கூறியதோடு, மதுரை மாநகராட்சி கிராமம் போல உள்ளது , வீதியெங்கும் சாக்கடை பெருக்கடுத்து ஓடும் நிலை உள்ளது, அதிமுக சார்பில் மாநகராட்சி நிர்வாகத்தை கண்டித்து வரும் 4ஆம் தேதி மதுரையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடவுள்ளோம் என்றார்.

மதுரை மாநகராட்சிக்கு நிதி
மதுரை மாநகராட்சிக்கு ஆயிரம் கோடி நிதி வழங்க வேண்டும், அந்த நிதியை முதல்வர் நிச்சயம் அளிப்பார் என்ற நம்பிக்கை உள்ளது எனக் கூறிய செல்லூர் ராஜு, ஆளும் கட்சி , எதிர்கட்சி என எந்த நிலையில் இருந்தாலும் அதிமுக மக்களின் நலனுக்காக போராடும் எனவும், திமுக எதிர்கட்சியாக இருந்தபோது மோடியை எதிர்த்துவிட்டு தற்போது வரவேற்பது அளிப்பதில் இருந்தே மக்களுக்கே தெரியும் திமுகவின் நிலைப்பாடு என்னவென்று? என கூறினார்.

மதுரைக்கு வரும் பிரதமர்
வரலாற்றில் இதுவரை எந்தவொரு இந்திய பிரதமரும் பேசாத வகையில் தமிழ் கலாச்சாரத்தையும், பெருமையையும் பற்றி பேசிவருபவர் மோடி எனவும், உலகெங்கும் தமிழர்களின் கலாச்சார பெருமையை பறைசாற்றிவருகிறார் எனவும், திருக்குறள், புறநானூறு, ஆகியவற்றை ஐநா வரை எடுத்துசென்று பேசிவரும், பிரதமர் மோடியின் மதுரை வருகை என்பது தமிழக மக்களுக்கு மகிழ்ச்சியை தரக்கூடியது மதுரை வரும் பிரதமரை தமிழக மக்கள் வாழ்த்தி வரவேற்க வேண்டும் என்றார்.












Click it and Unblock the Notifications