தேவருக்கு எப்போதும் மரியாதை கொடுப்பது அதிமுக தான்! எம்ஜிஆரை போல எடப்பாடி... ராஜன் செல்லப்பா பளீச்
மதுரை: திருநகர் பகுதியில் முத்துராமலிங்க தேவர் வாழ்ந்து மறைந்த இல்லத்தில் திருப்பரங்குன்ற எம்எல்ஏ ராஜன் செல்லப்பா மாலை அணிவித்து, மலர் தூவி மரியாதை செலுத்தினார்.
ராமநாதபுரம் மாவட்டம் பசும்பொன் கிராமத்தில் முத்துராமலிங்கத் தேவரின் 115வது ஜெயந்தி விழா மற்றும் 60வது குருபூஜை விழா சிறப்பாகக் கொண்டாடப்பட்டது.
நேற்றைய தினம் திமுக, அதிமுக உள்ளிட்ட பல்வேறு கட்சிகளைச் சார்ந்த முக்கிய தலைவர்களும் முத்துராமலிங்கத் தேவரின் நினைவிடத்தில் மரியாதை செலுத்தினர்.
அண்ணாமலையே ஷாக் ஆயிட்டாருங்க.. கட்டிப் பிடித்து முத்தம்! தேவர் நினைவிடத்தில் கூவிய ஆர்கே சுரேஷ்!
அதிமுக
ஒரு பக்கம் அதிமுகவில் இருந்து ஓ பன்னீர்செல்வம் அங்கு வந்து மரியாதை செலுத்தினார். மேலும், அவர் வெள்ளிக் கவசத்தையும் அணிவித்தார். அதேபோல மறுபுறம் அதிமுகவில் இருந்து எடப்பாடி ஆதரவாளர்கள் திண்டுக்கல் சீனிவாசன், செல்லூர் ராஜூ, ஆர்பி உதயகுமார் உள்ளிட்டோர் மரியாதை செய்தனர். பல்வேறு அரசியல் தலைவர்களும் அங்கு வருகை தந்ததால் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது.
ராஜன் செல்லப்பா
இதினிடையே மதுரை திருநகர் பகுதியில் முத்துராமலிங்க தேவர் வாழ்ந்து மறைந்த இல்லத்திற்கு வந்த திருப்பரங்குன்ற சட்டமன்ற உறுப்பினர் ராஜன் செல்லப்பா திருவுருவப் படத்திற்கு மாலை அணிவித்து, மலர் தூவி மரியாதை செலுத்தினார். அதன் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், "வீரத்தையும் விவேகத்தையும் விதைத்துச் சென்றவர் தேவர் திருமனார். பசும்பொன் முத்துராமலிங்க தேவர் வாழ்ந்த இடமான திருநகரில் மரியாதை செலுத்தும் வாய்ப்பு எனக்குக் கிடைத்துள்ளது.
ஜெயலலிதா
ராமநாதபுரம் மாவட்டத்தில் பிறந்திருந்தாலும், அவர் தனது வாழ்நாள் முழுக்க தென் மாவட்ட மக்களுக்கு ஒரு தியாக தெய்வமாக விளங்கியவர். சுதந்திரப் போராட்டத்தில் பங்கெடுத்த தேவரை என்றும் மறக்க முடியாத உணர்வோடு தான் இன்றும் வாழ்த்து கொண்டிருக்கிறோம். அதிமுக சார்பில் பசும்பொன் முத்துராமலிங்க தேவருக்குத் தங்கக் கவசத்தை ஜெயலலிதா வழங்கினார்.
அதிமுக தான்
அதிமுக தேவருக்கு என்று தனி ஒரு அங்கீகாரத்தை வைத்திருக்கிறது. அந்த சமுதாய மக்களும் அதிமுக மீது பற்று கொண்டு உள்ளனர். பசும்பொன் முத்துராமலிங்க தேவர் என்றால் ஆரவாரம், மகிழ்ச்சி மற்றும் கோஷம் இருப்பது சகஜம் தான். கட்சித் தலைவர்கள் வரும்போது கோஷம் இருக்கும்.. அப்போது யாருக்காவது மாற்றுக்கருத்தும் இருக்கலாம். இதெல்லாம் பெரிய விஷயம் இல்லை.
எம்ஜிஆர், எடப்பாடி
அச்சமுதாய மக்கள் அதிமுகவிற்கு எப்போதுமே தேவருக்கு முன்னுரிமை கொடுத்து உள்ளனர். அனைத்துக் கட்சித் தலைவர்களை விட எம்ஜிஆர் முதல் எடப்பாடி வரை பசும்பொன் முத்துராமலிங்க தேவருக்கு மரியாதை செலுத்துவது என்றால் அதிமுக தான் அதை யாரும் மறுக்க முடியாது. அதிமுகவைப் பொறுத்தவரை என்றென்றும் தேவர் மீது பற்றும் பாசமும் கொண்டது., அந்த சமுதாய மக்கள் மீது பாசம் கொண்ட கட்சி! தேவர் இல்லத்தின் அருகிலும் நிச்சயம் சிலை வைக்க நடவடிக்கை எடுக்கப்படும்" என்று அவர் தெரிவித்தார்