திமுக ஆட்சி மீது மக்களுக்கு வெறுப்பு.. மதுரையில் மாபெரும் போராட்டம்.. செல்லூர் ராஜு பேட்டி!
மதுரை: தமிழகத்தில் ஓராண்டு கால திமுக ஆட்சி மீது மக்களுக்கு வெறுப்பு ஏற்பட்டுள்ளதாக அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு தெரிவித்துள்ளார்.
அதிமுக முக்கிய நிர்வாகிகள் ஏராளமானோர் ஓபிஎஸ் - இபிஎஸ் இணைப்பு குறித்து பேச தயங்கி வரும் சூழலில், முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு மட்டும் தடாலடியாக ஓபிஎஸ் இணைப்பு குறித்து அதிரடியாக கருத்துகளை பேசி வருகிறார். இந்தநிலையில் மதுரை மேற்கு சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட கோவில் பாப்பாகுடி சிக்கந்தர்சாவடி உள்ளிட்ட பகுதிகளில் பள்ளி கூடுதல் கட்டிடங்களை முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு திறந்து வைத்தார்.

செல்லூர் ராஜு பேட்டி
இதனைத்தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்து செல்லூர் ராஜு கூறுகையில், திமுக ஆட்சியில் மக்கள் அனைவரும் கடும் அதிருப்தியில் உள்ளனர். வரும் நாடாளுமன்ற தேர்தலில் மக்களிடம் வாக்கு கேட்காமலே அதிமுக அமோக வெற்றிபெறும். அந்த அளவுக்கு திமுக மீது மக்களுக்கு வெறுப்பு ஏற்பட்டுள்ளது. ஒரு நாடாளுமன்ற உறுப்பினர் அரசு விழாவில் அதிகாரியை மிரட்டுகிறார். அதைப்பற்றி முதலமைச்சர் மு.க ஸ்டாலின் இதுவரை பேசவில்லை. திமுக ஆட்சியில் அரசு அதிகாரிகளை மிரட்டும் போக்கு அதிகரித்து வருகிறது. இதனை அதிமுக சார்பில் வன்மையாக கண்டிக்கிறோம் .

இபிஎஸ் பற்றி செல்லூர் ராஜு
அதிமுக பொதுச் செயலாளராக எடப்பாடி பழனிசாமி பொறுப்பேற்றத்தை எடுத்து அதிமுக சிறப்பாக செயல்பட்டு வருகிறது. இரட்டை குதிரையில் சவாரி செய்தால் அதிமுகவின் வளர்ச்சிக்கு பாதிப்பு ஏற்படும் என்பதால் ஒற்றைத் தலைமை வேண்டும் என்று அனைத்து நிர்வாகிகளும் ஆலோசித்து முடிவெடுத்து எடப்பாடி பழனிசாமி பொதுச் செயலாளராக தேர்வு செய்துள்ளோம்.

இணைப்பு சாத்தியம்
என்னை பொறுத்தவரை இந்த கட்சியில் இருந்து ஒரு தொண்டனும் வெளியே செல்லக்கூடாது. முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவை காளிமுத்து பேசாத பேச்சா, அது போல பண்ருட்டி ராமச்சந்திரன், திருநாவுக்கரசு, ஆர்.எம்.வீரப்பன் போன்றவர்களும் கடுமையாக விமர்சனம் செய்தார்கள். ஆனால் அவர்களையும் ஜெயலலிதா ஏற்றுக்கொண்டு கழகத்தில் பதவிகளை வழங்கினார்.
அதுபோல தற்போது அதிமுகவை விட்டுவிலகி இருக்கும் ஓ.பன்னீர்செல்வம் போன்றவர்கள் எடப்பாடி பழனிசாமியை பொதுச் செயலாளராக ஏற்றுக்கொண்டால் மீண்டும் அதிமுகவில் இணைந்து பணியாற்றுவது குறித்து பொது செயலாளர் எடப்பாடி பழனிசாமி உரிய நடவடிக்கை எடுப்பார்.

கூட்டணி குறித்து கருத்து
அதிமுகவின் கூட்டணி என்பது தேர்தல் காலத்தில் செய்யப்படக் கூடிய உடன்பாடு. அதிமுக கூட்டணியை பொறுத்தவரை, கட்சிகள் கேட்கும் தொகுதி எண்ணிக்கையை பொறுத்து அந்த நேரத்தில் முடிவு செய்யப்பட்டு, கூட்டணியில் எந்த கட்சிகள் இடம் பெறும் என்பது முடிவு செய்யப்படும். வரும் 25ம் தேதி மின் கட்டண உயர்வை கண்டித்து மதுரையில் அதிமுக சார்பில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது என்று தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications