மதுரையில் கொட்டித்தீர்த்த கனமழை..மாட்டுத்தாவணி அருகே குடியிருப்புகளை சூழ்ந்த வெள்ளம்..மக்கள் தவிப்பு
மதுரை: மதுரையில் பெய்த கனமழை காரணமாக மாட்டுத்தாவணி பேருந்து நிலையம் அருகே உள்ள குடியிருப்புகளை வெள்ளம் சூழ்ந்துள்ளது. நீர்வழிப்பாதையை ஆக்கிரமிப்பு தனியார் ஒருவர் ஆக்கிரமிப்பபு செய்ததன் காரணமாகவே வெள்ள நீர் தேங்கியதாக பொதுமக்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.
மதுரையில் கடந்த 2 நாட்களாகவே கனமழை பெய்து வருகிறது. மையப் பகுதிகளான மாவட்ட ஆட்சியர் அலுவலகம், தெற்குவாசல், தெப்பக்குளம், மாட்டுத்தாவணி, கே.கே.நகர், அண்ணாநகர், தமுக்கம், கோரிப்பாளையம், பெரியார் பேருந்து நிலையம், ரயில் நிலையம் உள்ளிட்ட நகரின் பல்வேறு பகுதிகளில் மூன்று மணி நேரத்திற்கும் மேலாக கனமழை பெய்தது.

மாட்டுத்தாவணி பேருந்து நிறுத்தத்தில் திருச்சி, சிவகங்கை, ராமநாதபுரம் பரமக்குடி பேருந்துகள் நிறுத்துமிடத்தில் மழை நீர் வெள்ளம் போல் தேங்கி உள்ளது. இதனால் பயணிகள் நடந்து செல்ல முடியாமல் அவதி அடைந்தனர். மாட்டுத்தாவணியில் செல்ல மழை நீர் வடிகால்களை சீர் செய்ய பயணிகள் அதிகாரிகளுக்கு கோரிக்கை விடுக்கின்றனர்.
மதுரையில் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் மழைநீர் சூழ்ந்து இருப்பதால், அங்கு வரும் பொதுமக்கள் அவதி அடைந்து உள்ளனர். மதுரை மாவட்டத்தில் நேற்றிரவு கனமழை கொட்டித் தீர்த்தது. இதனால், ஆங்காங்கே மழை நீர் தேங்கி உள்ளது. மாவட்ட ஆட்சியர் வளாகத்திலும் மழைநீர் தேங்கி இருக்கும் நிலையில், குறைதீர் முகாமுக்கு வந்த பொதுமக்கள் மழைநீரில் நடந்து வந்தனர்.
தெப்பக்குளம் நிர்மலா பெண்கள் மேல்நிலைப்பள்ளி, அனுப்பானடி சாலை உள்ளிட்ட இடங்களில் மழை நீர் தேங்கி நின்றதால் பள்ளிக்கு செல்வோர்களும், வாகன ஓட்டிகளும் கடும் சிரமத்திற்கு ஆளாகினர், மாநகராட்சி ஊழியர்கள் தாமதமாக வந்து மழை நீரை அகற்றினர்.
குறிப்பாக மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தேங்கி நிற்கும் மழை நீர் குளம் போல் காட்சியளிக்கின்றது. ஆட்சியர் அலுவலகத்தில் தொடர்ச்சியாக மழை நீர் தேங்கி நிற்கும் அவல நிலை ஏற்பட்டுள்ளதால், குறைதீர் கூட்டத்திற்கு வருகை தரும் பொதுமக்கள் கடும் சிரமத்திற்கு ஆளாகினர்.
மேலும் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தேங்கி நிற்கும் மழை நீரை அகற்ற மாநகராட்சி நிர்வாகம் முன் வர வேண்டும் என்றும் மழை நீர் தேங்கி நிற்காத அளவிற்கு நிரந்தர தீர்வு காண வேண்டும் என்றும் கோரிக்கை எழுந்துள்ளது.
இதனிடையே கனமழையால் மாட்டுத்தாவணியை அடுத்த உத்தங்குடி அருகே குடியிருப்புகளை வெள்ளநீர் சூழ்ந்துள்ளது. முழங்கால் அளவிற்கு பெருகியுள்ள தண்ணீரால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. தனியார் ஒருவர் ஆக்கிரமிப்பு காரணமாகவே குடியிருப்புகளை வெள்ளநீர் சூழ்ந்துள்ளதாக பொதுமக்கள் குற்றம் சாட்டியுள்ளனர். வெள்ளநீரை அகற்ற மதுரை மாநகராட்சி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது அனைவரின் கோரிக்கையாகும்.












Click it and Unblock the Notifications