சூறாவளிக்காற்றுடன் பெய்த பேய்மழை... முறிந்த மரங்கள் மின்தடையால் குண்ணத்தூர் மக்கள் தவிப்பு
மதுரை மாவட்டம் டி.குண்ணத்தூரில் சூறைக்காற்றுடன் பெய்த ஆலங்கட்டி மழையால் மரங்கள் முறிந்து விழுந்தன.
மதுரை: டி.குண்ணத்தூரில் சூறாவளிக்காற்றுடன் பெய்த ஆலங்கட்டி மழையால் சாலைகளில் மரங்கள் முறிந்து விழுந்தன. மின்கம்பங்கள் சாய்ந்து வயர்கள் அறுந்து விழுந்துள்ளதால் பல மணி நேரம் மின்சாரம் துண்டிக்கப்பட்டது.
Recommended Video
தமிழகம் முழுவதும் நேற்று பகல் நேரத்தில் வெயில் சுட்டெரித்த நிலையில் மதுரை மாவட்டம் டி. குண்ணத்தூரில் மாலை நேரத்தில் லேசான சாரல் மழை பெய்தது. நேரம் செல்லச்செல்ல மழையின் வேகம் அதிகரித்தது.
திடீரென சூறாவளிக்காற்றுடன் கூடிய ஆலங்கட்டி மழை கொட்டியது. கடந்த சில நாட்களாக 100 டிகிரி பாரன்ஹீட்டிற்கு மேல் வெயில் அடித்த நிலையில் நேற்று திடீரென மழை பெய்தது.
டி. குண்ணத்தூரில் எம்.ஜி.ஆர், ஜெயலலிதாவுக்கு கோயில் - ஜன.30ல் முதல்வர் தலைமையில் கும்பாபிஷேகம்
சூறாவளி காற்றுடன் கனமழை
காற்று பலமாக வீசத் தொடங்கியதால் மரங்கள் பேயாட்டம் போட்டன. இதில் சாலை ஓரங்களில் இருந்த 100 ஆண்டுகளுக்கு மேலான மரங்கள் வேறோடு பிடிங்கி வீசப்பட்டன. காற்றுடன் பெய்த கனமழையால் நேற்று மாலை மின்சாரம் துண்டிக்கப்பட்டது.
ஆலங்கட்டி மழை
திடீரென வீடுகளின் மீது கற்களை வீசியதைப்போல ஆலங்கட்டிகள் விழ ஆரம்பித்தன. பலரது வீடுகளில் ஓடுகள் உடைந்தன. நீண்ட நாட்களுக்கு பிறகு அதிசயமாக பெய்த ஆலங்கட்டி மழையைப் பார்த்து பலரும் உற்சாகமடைந்தனர்.
மின்சாரம் துண்டிப்பு
காற்று வீசியதில் உயர்அழுத்த மின்வயர்கள் அறுந்து விழுந்தன. இதனால் நேற்று மாலை 5 மணிக்கு சென்ற மின்சாரம் 15 மணி நேரத்திற்கும் மேலாக தடைபட்டுள்ளது. மழை பெய்து ஓய்ந்த பின்னர் குளுமை பரவினாலும் இரவு நேரங்களில் பலரும் உறக்கம் தொலைத்தனர். அறுந்து விழுந்த மின்சார வயர்களை சரி செய்யும் பணியில் மின்வாரிய ஊழியர்கள் ஈடுபட்டுள்ளனர்.
வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்தது
கொட்டித்தீர்த்த கனமழையால் சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்தது. பலரது வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்தது. இதன்காரணமாக பிரிட்ஜ், கட்டில் உள்ளிட்ட வீட்டு உபயோகப் பொருட்கள் நனைந்து நாசமடைந்தன. மழை நின்ற பிறகு வீட்டிற்குள் இருந்த தண்ணீரை வெளியேற்றினர்.
தருமபுரியில் ஆலங்கட்டி மழை
வெப்ப சலனம் காரணமாக தர்மபுரி மாவட்டத்தில் பரவலாக மழை பெய்து வந்தது. இந்த நிலையில் நேற்று காலை முதல் வெயில் கொளுத்தியது. மாலையில் திடீரென கருமேகம் திரண்டு மழை பெய்ய தொடங்கியது. இதில் தருமபுரி நகரம், பஸ் நிலையம், பென்னாகரம் சாலை, குமாரசாமிப்பேட்டை மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் பலத்த சூறைக்காற்றுடன் ஆலங்கட்டி மழை பெய்தது. இதனால் ஆங்காங்கே சாலைகளில் மழை நீர் பெருக்கெடுத்து ஓடியது.
வேன் கவிழ்ந்து விபத்து
குமாரசாமிப்பேட்டை பகுதியில் பெய்த பலத்த மழையால் கழிவு நீருடன் மழைநீர் கலந்து பிள்ளையார் கோவில் தெரு, சிவசுப்பிரமணிய சாமி கோவிலுக்கு செல்லும் தெரு உள்ளிட்ட பகுதிகளில் தேங்கியது. 10க்கும் மேற்பட்ட வீடுகளுக்குள் மழைநீர் புகுந்தது. ஒகேனக்கல்லில் இருந்து பொம்மிடி நோக்கி சுற்றுலா வேன் ஒன்று வந்து கொண்டு இருந்தது. சூறைக்காற்றுடன் பெய்த மழையால் டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த வேன் தலைக்குப்புற கவிழ்ந்தது. இந்த விபத்தில் வேனில் இருந்த 11 பேர் லேசான காயத்துடன் உயிர் தப்பினர்.