கருமேகங்கள் சூழ்ந்து கன ஜோராய் வெளுத்து வாங்கிய மழை... வெள்ளக்காடான சாலைகள்
தமிழகத்தில் பல மாவட்டங்களில் இன்று பலத்த மழை கொட்டித்தீர்த்தது. மதுரை, விருதுநகர், அருப்புக்கோட்டை, தூத்துக்குடி,திருநெல்வேலி, சிவகங்கை உள்ளிட்ட பல ஊர்களில் பெய்த கனமழையால் சாலைகள் வெள்ளம் பெருக்கெடுத்தது.
மதுரை: தமிழகத்தில் தென்மேற்குப் பருவமழை ஜோராக தொடங்கி விட்டது. தென் மாவட்டங்களில் பிற்பகல் முதல் கொட்டித்தீர்த்த கனமழையால் சாலைகள் வெள்ளக்காடாக மாறியது. மதுரை, விருதுநகர், சிவகங்கை, திருநெல்வேலி உள்ளிட்ட பல மாவட்டங்களில் பெய்த மழையால் வெப்பம் தணிந்து குளுமை பரவி வருகிறது.
இந்த ஆண்டுக்கான தென்மேற்குப் பருவமழை கேரளாவில் நேற்று தொடங்கியது. இது குறித்து அறிவித்துள்ள இந்திய வானிலை மையம், கடலோர கர்நாடகாவிலும் தமிழகத்தில் டெல்டா மாவட்டங்கள், தமிழகம், கேரளா, உள் கர்நாடகாவிலும் மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.
மதுரை, விருதுநகர், ராமநாதபுரம், கடலூர், தூத்துக்குடி, கள்ளக்குறிச்சி, சேலம், தருமபுரி, திண்டுக்கல் மாவட்டங்களில் பலத்த மழை பெய்யும் எனவும் இந்திய வானிலை மையம் கணித்துள்ளது.
தமிழகத்திலும் தென் மேற்கு பருவமழை தொடங்கியுள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. வெப்பச் சலனம் மற்றும் தென் மேற்கு கடலோர பகுதிகளில் நிலவும் வளிமண்டல சுழற்சி காரணமாக அடுத்த 24 மணி நேரத்தில் டெல்டா மாவட்டங்களான புதுக்கோட்டை, சிவகங்கை மாவட்டங்கள் உள்ளிட்ட பல பகுதிகளில் கனமழை முதல் மிகக் கனமழை பெய்யக் கூடும் எனவும் இன்று அறிவித்தது.
மதுரை, விருதுநகர் , ராமநாதபுரம், தூத்துக்குடி மாவட்டங்களில் கனமழை பெய்யும். கடலூர், கள்ளக்குறிச்சி, சேலம், தர்மபுரி, திண்டுக்கல், மாவட்டங்களிலும் கனமழை பெய்யும். ஏனைய மாவட்டங்களில் மிதமான மழை பெய்யலாம் எனவும் வானிலை மையம் இன்று அறிவித்தது.
வானிலை மையம் கணித்தது போலவே இன்று பிற்பகலுக்கு மேல் கருமேகங்கள் சூழ்ந்து பலத்த மழை பெய்தது. மதுரை, திருநெல்வேலி, தூத்துக்குடி, விருதுநகர், சிவகங்கை,திண்டுக்கல், மாவட்டங்களில் பலத்த மழை பெய்தது. கொட்டித்தீர்த்த கனமழையால் சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்தது.
மதுரையில் அண்ணாநகர், கோரிப்பாளையம்,கே.புதூர் பகுதிகளிலும் மழை பெய்தது. புறநகர் பகுதிகளிலும் பெய்த மழையால் வெள்ளம் பெருக்கெடுத்தது. இதே போல திருமங்கலம், டி. குண்ணத்தூர். டி. கல்லுப்பட்டியிலும் 3 மணி நேரத்திற்கும் மேலாக மழை பெய்தது.
தமிழகத்தில் 8ஆம் தேதி வரைக்கும் மேற்குத் தொடர்ச்சி மலையோர மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை மையம் அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது. தென்மேற்குப் பருவமழையை விவசாயிகள் மகிழ்ச்சியுடன் வரவேற்றுள்ளனர். பல மாவட்டங்களில் விவசாயப் பணிகளை தொடங்க ஆரம்பித்துள்ளனர்.
தமிழகத்தில் கடந்த ஆண்டு பெய்த மழையால் அணைகள் நிரம்பி வழிகின்றன. தற்போது தென்மேற்குப் பருவமழையும் தொடங்கியுள்ளதால் தென் மாவட்டங்களில் பாபநாசம் அணை, பெரியாறு அணை, வைகை அணை, பேச்சிப்பாறை, பெருஞ்சாணி அணைகளும் திறந்து விடப்பட்டுள்ளன. அணைகள் திறக்கப்பட்டுள்ளதால் ஆறுகளில் வெள்ளம் பெருக்கெடுத்துள்ளது.