தவெக புஸ்ஸி ஆனந்த் மீது பதிவு செய்யப்பட்ட வழக்கு.. இடைக்கால தடை விதித்தது ஐகோர்ட் கிளை!
மதுரை: தவெக பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த், கரிகாலன் மீது பதிவு செய்த வழக்குக்கு இடைக்கால தடை விதித்து உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது. திருச்சியில் போக்குவரத்துக்கு இடையேறு ஏற்படுத்தியதாகவும், போலீசாரை பணி செய்யவிடாமல் தடுத்ததாகவும் வழக்கு பதிவு செய்யப்பட்ட நிலையில், வழக்கை ரத்து செய்யக் கோரி புஸ்ஸி ஆனந்த் ஐகோர்ட் கிளையில் வழக்கு தொடர்ந்திருந்தார்.
தமிழ்நாட்டில் சட்டமன்றத் தேர்தல் அடுத்த ஆண்டு நடைபெற உள்ளது. இதற்காக திமுக, அதிமுக, பாஜக, நாம் தமிழர் கட்சி உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சிகளும் தீவிர அரசியல் பணிகளில் ஈடுபட்டு வருகின்றன. விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகம் 2026 தேர்தலில் முதல் முறையாக போட்டியிட தயாராகி வருகிறது. அக்கட்சித் தலைவர் விஜய் இதுவரை இரண்டு மாநாடுகளை நடத்தியுள்ளார். அண்மையில் மதுரை மாநாட்டில் பேசிய விஜய், விரைவில் மக்களைச் சந்திக்க வருவேன் என்று கூறியிருந்தார்.

இந்நிலையில், "உங்கள் விஜய்.. வெற்றி பேரணியில் தமிழ்நாடு" என்ற பெயரில் திருச்சியில் இருந்து பிரச்சாரத்தை தொடங்க தவெக தலைவர் விஜய் திட்டமிட்டுள்ளார். திருச்சி மாவட்டத்தில் நாளை தன்னுடைய முதல் அரசியல் பிரச்சாரத்தைத் தொடங்க திட்டமிட்டுள்ளார் விஜய். நாளை ஒரே நாளில் திருச்சி, அரியலூர், பெரம்பலூர் என மூன்று மாவட்டங்களில் பரப்புரை செய்ய விஜய் திட்டமிட்டுள்ளார்.
திருச்சியில் 2 இடங்களில் தவெக தலைவர் விஜய் உரையாற்றும் வகையில் பயண திட்டம் வகுக்கப்பட்டது. இதற்காக போலீசாரிடம் அனுமதி கேட்க தவெக பொதுச்செயலாளர் ஆனந்த் சென்னையில் இருந்து அனுமதி கோரும் கடிதத்துடன் திருச்சி விமான நிலையத்துக்கு கடந்த 6 ஆம் தேதி வந்து இறங்கினார்.
அப்போது அங்கு கூடியிருந்த தவெக தொண்டர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். தொடர்ந்து அந்த அனுமதி கோரும் கடிதம் உள்ளிட்ட ஆவணங்களை எடுத்துக்கொண்டு ஏர்போர்ட் சாலையில் இருக்கும் விநாயகர் கோயிலுக்கு சாமி கும்பிடச் சென்றார். அப்போது புஸ்ஸி ஆனந்துடன் வந்த கட்சி நிர்வாகிகள், கார்களை சாலையில் குறுக்கு நெடுக்கே நிறுத்திவிட்டு கோயிலுக்குள் சென்றதால், போக்குவரத்துக்கு கடும் இடையூறு ஏற்பட்டது.
மேலும், பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீசாருடன் தவெக தொண்டர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இந்நிலையில், இன்று (செப்டம்பர் 8) புஸ்ஸி ஆனந்த் உள்ளிட்டோர் மீது போக்குவரத்து இடையூறு, காவல் துறையினரை பணி செய்யவிடாமல் தடுத்தல், உதவி ஆணையரிடம் மிரட்டலாக வாக்குவாதம் செய்தது உள்ளிட்ட 4 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
திருச்சியில் போக்குவரத்துக்கு இடையேறு ஏற்படுத்தியதாகவும், போலீசாரை பணி செய்யவிடாமல் தடுத்ததாகவும் வழக்கு பதிவு செய்யப்பட்ட நிலையில், வழக்கை ரத்து செய்யக் கோரி புஸ்ஸி ஆனந்த், கரிகாலன் ஆகியோர் ஐகோர்ட் மதுரையில் கிளையில் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது.
அப்போது, திருச்சி விமான நிலைய காவல் ஆய்வாளர் தரப்பில் பதில் மனு தாக்கல் செய்ய ஐகோர்ட் கிளை உத்தரவிட்டுள்ளது. மேலும், தவெக பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த், கரிகாலன் மீது பதிவு செய்த வழக்குக்கு இடைக்கால தடை விதித்து உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.












Click it and Unblock the Notifications