யூடியூபர் மாரிதாஸ் மீதான 2ஆவது வழக்கும் ரத்து.. உயர் நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவு
மதுரை: யூடியூபர் மாரிதாஸ் மீது போடப்பட்டிருந்த 2ஆவது வழக்கையும் ரத்து செய்ய உயர் நீதிமன்ற மதுரைக் கிளை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
Maridhas answers என்ற யூடியூப் பக்கத்தை நடத்தி வந்தவர் மதுரையைச் சேர்ந்த மாரிதாஸ். கடந்த சில வாரங்களுக்கு முன்பு அவர் திடீரென கைது செய்யப்பட்டார்.
காஷ்மீருடன் தமிழ்நாட்டை ஒப்பிட்டு சர்ச்சைக்குரிய வகையில் மாரிதாஸ் ட்வீட் செய்திருந்தார். இது தொடர்பாக பாலகிருஷ்ணன் என்பவர் அளித்த புகாரின் அடிப்படையில் தமிழ்நாடு போலீசார் அவரை கைது செய்திருந்தனர்.

மாரிதாஸ்
இந்த ட்வீட்டை அவர் சிறிது நேரத்திலேயே டெலிட் செய்துவிட்டார். இருப்பினும், அவர் மீது வன்முறையைத் தூண்டும் வகையில் பேசியது, சமூக நல்லிணக்கத்திற்குக் குந்தகம் விளைவிக்கும் வகையில் பேசுதல் ஆகிய பிரிவுகளின் கீழ் அவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கை ரத்து செய்ய வேண்டும் என அவர் சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளையில் மனுத்தாக்கல் செய்திருந்தார்.

மற்ற வழக்குகள்
இந்த வழக்கை விசாரித்த நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன், மாரிதாஸ் மீதான வழக்கை ரத்து செய்து உத்தரவிட்டார். இருப்பினும், அதற்குள் தனியார் தொலைக்காட்சி அளித்த போலி மின்னஞ்சல் தொடர்பான புகாரிலும், கொரோனா அதிகரிக்க ஒரு குறிப்பிட்ட மதத்தினர்தான் காரணம் என வீடியோ வெளியிட்டதாக மேலப்பாளையம் போலீசில் அளிக்கப்பட்ட புகாரிலும் மாரிதாஸ் கைது செய்யப்பட்டார்.

மற்றொரு புகார்
இதில் போலி மின்னஞ்சல் வழக்கில் வரும் டிச. 27ஆம் தேதி மாரிதாஸை நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்க எழும்பூர் நீதிமன்ற நீதிபதி உத்தரவிட்டார். இதனிடையே மேலப்பாளையம் போலீசார் தன் மீது பதிவு செய்துள்ள வழக்கை ரத்து செய்ய வேண்டும் என்பதை வலியுறுத்தி மாரிதாஸ் உயர் நீதிமன்ற மதுரை கிளையில் மற்றொரு வழக்கைத் தாக்கல் செய்தார். இது நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் முன்பாக விசாரணைக்கு வந்தது.

வழக்கு ரத்து
அதில் மேலப்பாளையம் போலீசார் பதிவு செய்த வழக்கை ரத்து செய்து நீதிபதி உத்தரவிட்டார். மாரிதாஸ் இஸ்லாமிய நம்பிக்கையைக் கேள்விக்குள்ளாகும் வகையிலோ அல்லது அதனை இழிவுபடுத்தும் விதமாகவோ எத்தகைய கருத்தையும் தெரிவிக்கவில்லை என்று கூறிய வழக்கை ரத்து செய்ய நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதன் உத்தரவிட்டார். இதன் மூலம் மாரிதாஸ் மீது போடப்பட்டிருந்த 2 வழக்குகள் ரத்து செய்யப்பட்டுள்ளது. போலி மின்னஞ்சல் புகார் இன்னும் நிலுவையில் உள்ளது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications