பாஜக கொள்கையே இந்தி திணிப்பு தான்.. அதிகாரிகள் மீது பழி போடாதீங்க.. தமிழிசைக்கு சு.வெங்கடேசன் பதிலடி
மதுரை: திருச்சி மண்டல ரயில்வே அலுவலகத்தில் இந்தி திணிக்கப்பட்டதற்கு அதிகாரிகள் மீது பழியை போட்ட தமிழக பாஜக முன்னாள் தலைவர் தமிழிசை செளந்தரராஜனுக்கு மதுரை எம்பி சு.வெங்கடேசன் பதிலடி கொடுத்துள்ளார். இந்தி திணிப்பு பாஜக அரசின் கொள்கை என்று விமர்சித்துள்ள சு.வெங்கடேசன், பாஜக அரசின் திட்டங்களின் பெயர்களை முன் வைத்து கடுமையாக சாடியுள்ளார்.
அண்மைக் காலமாக தமிழ்நாட்டில் இந்தி திணிப்பு குறித்த தொடர் விவாதங்கள் நடைபெற்று வருகிறது. புதிய கல்வி கொள்கையில் உள்ள மும்மொழி கல்வி திட்டத்தை தமிழக அரசு கடுமையாக எதிர்த்து வருகிறது. இதற்காக மத்திய அரசு கல்வி நிதியை நிறுத்திய போதும், தமிழக அரசு இதுநாள் வரை பின் வாங்கவில்லை. தொடர்ந்து பராசக்தி படமும் மொழி அரசியல் குறித்து பேசி விவாதத்தை ஏற்படுத்தியது.

இந்த நிலையில் புதிதாக கட்டி முடிக்கப்பட்டுள்ள திருச்சி மண்டல ரயில்வே அலுவலகத்தின் நுழைவு வாயிலுக்கு "கர்தவ்ய த்வார்" என்று இந்தியில் பெயர் வைக்கப்பட்டுள்ளது. ரயில்வே துறையின் இந்த நடவடிக்கைக்கு முதல்வர் ஸ்டாலின் தொடங்கி பல்வேறு கட்சித் தலைவர்களும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். இதுதொடர்பாக தமிழக பாஜக முன்னாள் தலைவர் தமிழிசை செளந்தரராஜன் கருத்து பதிவிட்டுள்ளார்.
அதில் தமிழிசை செளந்தரராஜன், அதிகாரிகள் செய்த தவறுகளால் தமிழ்நாட்டில் இந்தியை திணிக்க மத்திய அரசு முயற்சிப்பதாக குற்றம் சாட்டுகின்றனர். அதனால் இந்தி பெயரை உடனடியாக நீக்கி தமிழ்ப் பெயரை வைக்க வேண்டும் என்று மத்திய ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ்க்கு கோரிக்கை வைப்பதாக கூறியுள்ளார்.
அதிகாரிகளின் தவறு என்று கூறிய தமிழிசை செளந்தரராஜனின் இந்த கருத்துக்கு மதுரை சிபிஎம் எம்பி சு.வெங்கடேசன் பதிலடி கொடுத்துள்ளார். இதற்கு சு.வெங்கடேசன், இந்தித் திணிப்பை அதிகாரிகளின் மீது தூக்கி போடாதீர்கள். இது உங்கள் அரசின் கொள்கை. தேர்தல் வந்தவுடன் உங்களுக்கு பதட்டம் கூடுகிறது.
வந்தே பாரத், தேஜஸ், அந்த்யோதயா, நமோ பாரத், அம்ரித் பாரத், ஆயுஷ்மான் ஆரோக்கிய மந்திர், பிரதான் மந்திரி பாரதிய ஜனசௌஷதி கேந்திரா என அனைத்து பெயர்களையும் இந்தியில் மட்டுமே சூட்டியது தான் பாஜக ஆட்சி என்று தெரிவித்துள்ளார். இதனால் திருச்சி மண்டல ரயில்வே அலுவலகத்தின் நுழைவு வாயில் பெயரும் திட்டமிட்டே இந்தியில் வைக்கப்பட்டதாக விமர்சனங்கள் எழுந்துள்ளன.












Click it and Unblock the Notifications