ஆதீனத்துக்கே மிரட்டலா? நடிகர் விஜய் ஒன்னும் பெரிய ஆள் கிடையாது! ரசிகர்களை சீண்டிய அர்ஜுன் சம்பத்..!
மதுரை : மதுரை ஆதீனத்தை கண்டித்து மதுரையில் விஜய் ரசிகர்கள் போஸ்டர் ஒட்டிய நிலையில் நடிகர் விஜய் பெரிய ஆள் கிடையாது என்றும் அவரது ரசிகர்களுக்கு அவர் அறிவுரை கூற வேண்டும் என இந்து மக்கள் கட்சி நிறுவனர் அர்ஜுன் சம்பத் கூறியுள்ளார்.
மதுரையில் கடந்த ஞாயிற்றுக் கிழமை பேசிய மதுரை ஆதீனம், நடிகர் விஜய் நடித்த துள்ளாத மனமும் துள்ளும் திரைப்படத்தில் விநாயக கடவுளை கேலியாக பேசியதாகவும் இதனால் நடிகர் விஜய் நடித்த திரைப்படத்தை யாரும் பார்க்க கூடாது என கூறினார்.
மதுரை ஆதீனத்தின் இந்த பேச்சு விஜய் ரசிகர்கள் மத்தியில் கொந்தளிப்பை ஏற்படுத்திய நிலையில், அதற்கு கண்டனம் தெரிவிக்கும் விதமாக மதுரை மாநகர் பகுதிகளில் சுவரொட்டிகளை ஒட்டினர். அதில் 'மதுரை ஆதினம் மடத்தின் சொத்துக்களை கொள்ளையடிக்க திட்டம் போடுறீங்களேயப்பா! நீங்களாம் தளபதியைப் பத்தி பேசலாமா தப்பா? என கூறியிருந்தர்.
நீங்களாம் தளபதியைப் பத்தி பேசலாமா தப்பா?..மதுரை ஆதீனத்தைக் கண்டிக்கும் விஜய் ரசிகர்கள்
மதுரை ஆதீன சர்ச்சை பேச்சு
இந்நிலையில், மதுரை ஆதீனத்திற்கு பாதுகாப்பு தர வேண்டி மதுரை மாநகர காவல்துறை ஆணையாளரிடம் அர்ஜுன்சம்பத் மனு அளித்தார் பின்பு செய்தியாளர்களை சந்தித்த அவர்,"மதுரை ஆதினம் அவர்களுக்கு தற்போது அரசியல்வாதிகளாலும் நடிகர்களின் ரசிகர்களும் இன்னபிற சக்திகளாலும் தொடர்ந்து அச்சுறுத்தப்பட்டு வருகிறார். மதுரை ஆதீன மடத்திற்கு குரு சன்னிதானத்திற்கு மிகப்பெரிய அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது.
விஜய் ரசிகர்கள் போஸ்டர்
மதுரை ஆதீனம் அரசியல்வாதிகளைப் போல் நடந்து கொள்ளுகிறார் என்றும் நாங்கள் அவர் மீது பாய்ந்து விடுவோம் என்று அறநிலை துறை அமைச்சர் குரு சன்னிதானத்தை அச்சுறுத்தி வருகிறார். இதுஒரு அபாயகரமான போக்கு. மதுரை ஆதீனத்திற்கு அரசியலுக்கும் பெரிய தொடர்பு கிடையாது அவர் அரசியல் பேசவில்லை. இந்து சமயத்திற்கு ஒரு வில்லங்கம் என்றால் மதுரை ஆதினம் குரல் கொடுப்பார் அதிமுகவிற்கு ஆதரவாக இருப்பார் , பிஜேபி ஆதரவாளர் என்பதெல்லாம் கிடையாது.
நடிகர் விஜய் அறிவுரை
இந்த கருத்து நடிகர் விஜய்க்கு அல்லது அரசியல்வாதிகளுக்கு எதிரான கருத்து கிடையாது. இது விஜய் ரசிகர்கள் அரசியல் கட்சியை சார்ந்தவர்கள் அனைவரும் புரிந்து கொள்ள வேண்டியது விஜய் ரசிகர்கள் ஆதீனத்தின் மீது தனிப்பட்ட கருத்துக்களை வெளியிடுகின்றனர். தாய் தகப்பனை விட நடிகர் விஜய் பெரிய நபர் ஒன்றும் கிடையாது. விஜய் தன் ரசிகர்களுக்கு அறிவுரை சொல்ல வேண்டும். எப்பொழுதும் போல மதுரை ஆதீனம் ஞானசம்பந்தர் வழியிலே தன் பணிகளை செய்து வருகிறார்.
பாதுகாப்பு
இந்து சமய அமைப்புகள் அவருக்கு ஆதரவாக உள்ளது அவர் எல்லா ஆன்மீக சமய அமைப்புகளையும் ஒருங்கிணைந்து செயல்பட்டு வருகிறார். சு.வெங்கடேசனும் மதுரை ஆதீனத்தை மிரட்டுவது போல் பேசி வருகிறார் அவருக்கும் எனது வன்மையான கருத்துக்களை தெரிவித்து கொள்கிறேன். மதுரை ஆதீனம் ஆர்எஸ்எஸ்க்கு சாதகமாக இருக்கிறார் என்பது அவர்கள் சொல்லகூடிய குற்றச்சாட்டு முழுவதும் பொய்யான ஒன்று. ஆதீனம் எந்த விதத்திலும் சர்ச்சைக்கு உள்ளான கருத்துக்களை சொல்லவில்லை கோயில்களை விட்டு அறநிலைத்துறை வெளியேற வேண்டும் என்று ஆதினம் சொல்லி வருகிறார்." என பேசினார்.